Saturday, December 31, 2011

நம்பிக்கையும் வெற்றியும்




அன்புள்ளங்களுக்கு

வணக்கம்.

வழக்கம்போல இவ்வாண்டு முடிவுற்று இன்னும் சில மணிநேரங்களில் 2012 புத்தாண்டு மலரப்போகிறது.

எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு.
எல்லோருக்கும் திட்டமிடல்கள் உண்டு.
எதையாவது செய்யவேண்டும். கடந்த ஆண்டில் இயலாததை இவ்வாண்டிலாவது செய்யவேண்டும் என்கிற முனைப்பும் வேகமும் இருக்கும்.
தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம். குறைத்துக்கொள்ளலாம்.
சில உண்மைகளைப் பேசத் துணியலாம்.
அச்சங்களைப் போக்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் வாய்க்கலாம்.
பலரையும் நேசிக்க மனம் கனியலாம்.
வெறுத்தோரில் பலரும் நமது மனக் கனிவுக்கு கூடி வரலாம்.
எல்லாவற்றையும் கடந்து நாம் வாழத்தான் வந்திருக்கிறோம்.

இயற்கைக்குத் தப்பி...புயலுக்குத் தப்பி...மழைக்குத் தப்பி...பல பறவைகளுக்குத் தப்பி...பூவாகி..காயாகி..கனியாகி கைக்குக் கிடக்கிற பழங்களைப்போலவே நமது வாழ்க்கையும் வாய்த்திருக்கிறது நமக்கு வாழ.

இயல்பாய் எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். ஏக்கமும் வேண்டாம். திட்டமிடல்கூட வேண்டாம்.

நேர்மை. நம்பிக்கை. உழைப்பு இது போதும்.



நம்பிக்கை அழுத்தமான வேரைப் போன்ற நம்பிக்கை எல்லாவற்றையும் நமக்கு ஈட்டித்தரும்.

வாழுகிற ஒவ்வொரு தருணத்தையும் அது எதுவாக இருப்பினும் அந்த உணர்வில் அதனை அனுபவித்து கடப்போம்.

கடவுள் நம்பிக்கையுள்ளோர் அதனை இறுகப் பற்றலாம்.

எல்லோருக்கும் எல்லாமும் குறைவற நிறைநதியாய் நிறைந்து பெருகட்டும். வளமான வாழ்வில் புத்தாண்டை எதிர்கொள்வோம்.

எல்லாமும் உடனடியாக கைக்குக் கிடைத்துவிடில் அதில் சுவையில்லை. அப்படியெதுவும் வாழ்வில் கிடைப்பதுமில்லை. இருப்பினும் பல்வேறு இடர்களுக்கிடையிலும்..சிறு துன்ப நிகழ்வுகளுக்கிடையிலும்.. சிக்கல்களுக்கிடையிலும்.. கிடைத்த வாழ்வைத்தான் பல சாதனையாளர்களும்..சரித்திர நாயகர்களும்...வாழ்வில் வெற்றிபெற்றவர்களும் பேசவும் எழுதவும் கண்டிருக்கிறோம்.

அதில்தான் வாழ்க்கையின் சுவை இருக்கிறது. அதில்தான் முழுநிறைவும் இருக்கிறது.

அடர்ந்த அனலுக்கிடையில் பதமாகும் சுவையாகும் உணவைப்போலவே அது அமைகிறது.

இப்படியே இந்த வாழ்வு இருந்தால் போதும்.

நம்முடைய நம்பிக்கையும் உழைப்பும் எல்லாவற்றையும் தரட்டும்.

என்னுடைய மனங்கவர்ந்த புத்தாண்டு மகிழ்ச்சியை பதிவுலக நண்பர்கள்..சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



தீதும் நன்றும் பிறர்தர வாரா.

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

அவரவர் எச்சத்தாற் காணப்படும்.

மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு.

அன்பே சிவம்.

Monday, December 19, 2011

பகிரல்....

00000000
00000000

தமிழகத்தின் எல்லா இதழ்களும் வெகுஜன இதழ்களும் சரி...இலக்கிய இதழ்களும் சரி ஒருமித்த கருத்தை அதனதன் போக்கில் எடுத்துக்கூறியுள்ளன. கூடங்குளம் பிரச்சினையை. எப்படியாயினும் இது ஆபத்தை விளைவிப்பது என்பதுதான் அதன் சாராம்சமாக உள்ளது. எந்த ஒன்றும் மானிட இனத்தை மையப்படுத்திதான் அமையவேண்டும். அந்த மானிடர்க்குத் துன்பம் தரும் ஒன்றை மத்திய அரசு ஏன் விடாப்பிடியாய் கொண்டுவர நினைக்கிறது.

•••••••••
•••••••••

எல்லா அரசியல் முரண்களுக்கிடையிலும் விமர்சனங்களுக்கிடையிலும் தன் கொள்கையை விடாது முன்னேறுகிறது அரிமா அன்னா உறசாரே. வாழ்த்துக்கள்.

00000000
00000000

மதிப்பிற்குரிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஒரு பொதுவான வேண்டுகோளை இன்றைய செய்தித்தாளில் தமிழக மக்களுக்கு விடுத்துக்கொண்டிருக்கிறார். அதே செய்தித்தாளில்தான் ஐயப்பத் தரிசனம் செல்லும் வேன்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இரு மாநிலங்களிலும் இருதரப்பு மக்களும் பாதுகாக்கப்படவேண்டும்.

•••••••••
•••••••••

தொலைக்காட்சிகளில் விளம்பரங்களில் பெண்கள் இடம் பெறாமல் எந்த விளம்பரமும் இல்லை. இதுகுறித்த கருத்தாக்கங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. சமீபமாக ஒரு சில விளம்பரங்கள் மனதைக் காயப்படுத்துகின்றன. ஒரு நகைக்கடை விளம்பரத்திற்கு வானிலிருந்து வாளோடு வானத்திலிருந்து ஒரு பெண் குதிப்பது போன்ற விளம்பரம். இன்னொன்றில் பள்ளத்தில் சிக்கிகொண்ட லாரியைக் கூந்தல் கட்டி இழுத்து வருவது. விளம்பரத்தில் குறைந்த பட்சம் நியாயமாவது இருக்கவேண்டும்.

•••••••••
•••••••••

இது அரசியல் அல்ல. பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் இன்று. 90 வயதை நிறைவு செய்திருக்கிறார். இதுவரை எந்த முரணிலும் சிக்காதவர். 90 வயது பெரிய வயது. ஆச்சர்யம்.

0000000000
0000000000

ஒரு சின்ன அனுபவம். நேற்று முன்தினம் அதாவது சனிக்கிழமை நாமக்கல்லில் இருந்தேன். அலுவல்பணி. மாலையில் நாமக்கல் ஆஞ்சனேயரைத் தரிசித்துவிட்டு தங்கத் தேரை இழுத்துவிட்டு எதிரில் இருக்கும் நரசிம்உறரையும் தரிசித்துவிட்டு கீழேயுள்ள மண்டபத்தின் இருளில் அமர்ந்திருந்தேன். தனிமையில். நண்பர்கள் மேலே தரிசனத்தில் இருந்தார்கள். அப்போது வளர்ந்த தாடியுடன் நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் வந்து என்னருகே மண்டபத்தில் அமர்ந்து ஒரு 10 ரூ கொடேன் போஜனத்திற்கு என்றார். எதுவும் பேசாமல் எடுத்துக்கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சற்றுநேரம் என்னைப் பார்த்துவிட்டு மிகத் துல்லியமாக என்னுடைய ராசியின் பெயரைச்சொல்லி அந்த ராசிக்காரன்தானே...நல்லாயிருப்பே..யோகம்தான் என்றுசொல்லிவிட்டுப் போனார். என்னுடைய ராசியின் பெயர் எப்படித் தெரியும் என்பதுதான் என்னுடைய அனுபவம்.

000000000
000000000

Monday, December 12, 2011

நினைவுபடுத்தல்


வணக்கம்.

இவருடைய இயற்பெயர் சுப்பையா. சின்னசாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

தனது ஞானத்தால் 11 வயதில் பாரதி பட்டம் பெற்றவர். பின்னாளில் உலகம் போற்ற மகாகவி என்றழைககப்பட்டவர்.

சுதந்திர தாகத்தையும் நாட்டின் விடுதலையையும் மனதில் இருத்தி கடைசிவரை வறுமையில் இருந்து ஒரு யானை காரணமாக இறந்துபோனவர். சின்ன வயதில் இறந்துபோனவர்.

இவருடைய கவிதைகள் மிகச் சிறந்தவை என்று சொல்கிறார்கள். போற்றுகிறார்கள்.

இவர் பிறந்த தினம் நேற்றுதான். அதாவது திசம்பர் 11 வது நாள் 1882 ஆம் ஆண்டு. செப்டம்பர் 11 ஆம் நாள் 1921 இல் இறந்துபோனார்.

பலருடைய பிழைப்பு இவரது கவிதைகளால் நடக்கிறது.

இளைய பருவத்தில்தான் இறந்துபோனார். இளைஞர்கள் திசைகள் வேறுவேறாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. காலம்தான் இவர்களை மீட்டெடுக்கவேண்டும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே பாரதி...

Monday, December 5, 2011

தமிழ் வாழ்க




ஒரு இனத்தின் பண்பாட்டின் நாகரிகத்தின் மனிதனின் வாழ்வியலின் அடையாளம் மொழி. தமிழ்மொழியின் பண்பாடு உலகளாவியப் பேருண்மைகளுக்கு அடித்தளமானது. அதற்கான வேர் மிகமிக ஊடுருவிய ஆழம் கொண்டது. தமிழ் பேசும் யாவரும் பெருமை கொள்ளத்தக்கப் பண்புகளை என்றைக்கும் அழியாமல் கன்னித்த்ன்மையோடு கொண்டிலங்குவது தமிழ்.

தொல்காப்பியனும் வள்ளுவனும் கம்பனும் பாரதியும் எனத் தமிழின் பரப்பை ஆண்ட ஏறுகள் தமிழுக்கு என்றைக்கும் குறையாத செழுமை இலக்கியங்களைத் தந்தவர்கள். இன்றைக்கு தமிழ் மொழியை விளையாட்டு மொழிபோல பயன்படுத்துவது என்பது சாதாரணமாக உள்ளது.

நமக்குச் சோறிடும் தாயைப் புறம் தள்ளும் யாரும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. இன்றைக்கு நடிகர் தனுஷ் பாடிய ஒரு பாடல் இணையம் முழுக்க ஊடுருவி (புல்லுருவி) இளைய சமுகத்தின் வேதம் போல அது உச்சரிக்கப்படுவதாக எழுதுகிறார்கள். திரையிசைப் பாடல்களில் மொழியின் அருமையும் அமைப்பும் தெரியாத பலரும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதுகிறார்கள் அதற்கு இசையும் கூட்டுகிறார்கள். தமிழின் பண்பாட்டை சிதைப்பதுபோல அவை பிறமொழிச் சொற்களின் கலப்பில் இப்படித்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்கிற பொது அறிக்கையினிடையே அவை பாடலாகின்றன. அந்த வரிசையில் தனுஷின் கொலைவெறி பாடலும்.

நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம் தனுஷ். ஆனால் தமிழ் பேசி தமிழ்நாட்டில் பிறந்த தமிழனின் செயல் இதுவல்ல. அமரகவிகள் கண்ணதாசனும் பட்டுக்கோட்டையும் இன்னும் பலரும் தற்போது வைரமுத்து வாலி அறிவுமதி நா.முத்துக்குமார் எனத் தமிழின் மேன்மை சொல்லும் பாடலாசிரியர்கள் மத்தியில் இப்படியொரு அறிவிலித்தனமாகப் பாடலை எழுதிப்பாடி அதுகுறித்து கூச்சமிலலாமல் காரணம் சொல்கிறீர்கள். தமிழ்மொழி ஆற்றல் மிகுந்தது. அதனை யாரும் அழிக்கமுடியாது. அதனைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள்தான் அழிந்துபோவார்கள். இதுதான் வரலாறு. இளைய வயது தமிழைப் படியுங்கள். அதன் இனிமையைச் சுவையுங்கள். அற்புதமாகப் பாடலாம் எழுதலாம். பொருள் ஈட்டுவது முக்கியமல்ல அது ஈட்டும் வழி ரொம்ப முக்கியம்.

உங்களுக்கு இது புரியுமா? என்றும்கூடத் தெரியவில்லை. ஆனால் இந்தப பாடலின் வெற்றி உங்களை கூசவைக்கவேண்டும் இனியொருமுறை இதுபோன்று அமையாதிருக்க.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு... பாரதிதாசன்.

Thursday, December 1, 2011

கொஞ்சம் அரசியல்

?



ஒன்று

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக இன்று நடைபெறும் கடையடைப்பு முழுமையாக இல்லை. பல கடைகள் திறந்துளளன. காரணம் அவர்களுக்கு இதன் விபரீதம் புரியவில்லை போலும். இது அனுமதிக்கப்பட்டால் மீண்டும் வாணிபம் செய்ய வந்து நாட்டைப் பிடித்த கதையாகும். மாநில அரசுகளை வற்புறுத்தவில்லை. அவரவர் விருப்பம் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தாலும் எதிர்காலச் சூழலில் கூட்டணியாக தேர்தல் களத்தில் நிற்கும்போது இது மாறுவதற்கு இடமிருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் அதற்கடுத்த நிலையிலுள்ள சிறுபான்மை பலமுள்ள கட்சிகளும் உறுதியாக இருக்கவேண்டும். எச்சூழலிலும் அனுமதிக்கக்கூடாது இதனை. இதுவே நமது வேண்டுகோள்.



இரண்டு

நிலம் விற்றல், வாங்கல், நில அபகரிப்பு இவற்றில் தமிழக அரசின் நடவடிக்கை மிகத் திருப்தியாக உள்ளது. தங்கள் வாழவின் கனவும் இலட்சியமும் ஒரு மனைவாங்கி பின் கடன்வாங்கி வீடுகட்டுதல்தான் என்றிருக்கும் நடுத்தர மக்களுக்கு இது ஆறுதலான நடவடிக்கையாகும். எனவே தமிழக முதல்வரைப் பாராட்டலாம். இன்னும் பின்வரும் சில வேண்டுகோள்களைக் கருதிப் பாரத்தால் அது இன்னும் நலம் பயக்கும்.

1. மனைவாங்குபவர் யாராக இருந்தாலும் அதுகுறித்த விவரத்தை அரசுக்குத்
தெரிவிக்கவேண்டும். அதற்கான வருவாய் எங்கிருந்து ஈட்டியது என்கிற
விவரம் தெரிவிக்கவேண்டும்.

2. ஓரு மனை வாங்கியவர்கள் அடுத்த மனை வாங்குவது குறிப்பிட்ட சில
ஆண்டுகளுக்குப் பின் எனக் கட்டாயமாக்கவேண்டும்.

3. மனை விற்பவர்கள் மனை வாங்குபவர்களிடம் பத்திரப் பதிவு செய்து தருவதோடு
அதன் தொடர்பான மூல ஆவணப்பத்திரங்களையும் எவ்வித வில்லங்கமும் இல்லை
என்கிற சான்றிதழையும் தொடர்ந்து குறிப்பிட்ட மனைக்குரிய கூட்டுப்பட்டா,
தனிப்பட்டா எனத் தொடர்புடைய ஆவணங்களையும் வாங்கிக் கொடுத்துவிட
வேண்டும். இதற்குரிய தொகையை மனை வாங்குபவர்களிடம் வாங்கிக்
கொள்ளலாம்.

4. அவ்வாறு வாங்கிக்கொடுக்க முடியாதவர்கள் திரும்ப மனையைப் பெற்றுக்
கொண்டு உரிய தொகையைத் திருப்பியளித்துவிடவேண்டும்.

5. எக்காரணத்தை முன்னிட்டும் எச்சூழ்நிலையிலம் விளை வயல்களை மனைப்
பிரிவிற்கு அனுமதிக்கக்கூடாது. இதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

6. மாதத் தவணைத் திட்டம் வழியாக மனை விற்பவர்கள் பற்றிய முழு விவரங்
களை அரசு பெறவேண்டும். தவிரவும் இதில் பணம் செலுத்துபவர்களுக்கு
போடப்பட்டுள்ள மனைப்பிரிவுகளை அழைத்துச் சென்று காணபிக்கவேண்டும்.

7. மனைப்பிரிவுகளில் இவர்கள் ஒதுக்கும் இடங்களில் பூங்கா போன்றவற்றை
உடன் உருவாக்கித்தரவேண்டும் அதன்பின்னரே அவர்கள் பிளானை வரன்முறைப்
படுத்தவேண்டும்.


மூன்று

கேரளாவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்னும் சிறுபெண்ணிற்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சந்தோஷ் என்னும் பாதிரியார் தாமாக முன்வந்து தானம் அளிக்க வந்தும் மருத்துவத் தர்மம் அனுமதிக்கவில்லை என்கிற செய்தி இவ்வார குமுதத்தில் வந்துள்ளது. வாழவேண்டும் என்று சொல்லுகிற பெண்ணை ஏன் சாக விடுகிறீர்கள் என்று அந்தப் பாதிரியார் கேட்டுள்ளார். இதில் அரசு தலையிட்டு மனிதாபிமானமிக்க முறையில் அந்த பெண்பிள்ளையை வாழ அனுமதிக்கவேண்டும்.


நான்கு

விலங்குகள் மீது பரிவுகாட்டும் புளுகிராஸ் எனும் அமைப்பிற்கு அன்பான வேண்டுகோள். நாய்களைக் கொல்லக்கூடாது எனும் உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். ஆனாலும் தெருவிற்குப் பத்துநாய்கள் ஒவ்வொருநாளும் படுத்தும் பாட்டை, அதனால் பொது மக்கள் படும் இன்னல்களை ஏன் கருத்தில் எடுத்துக்கொள்ள மறுக்கிறீர்கள். இவ்வளவு அக்கறை காட்டும் நீங்கள் எல்லா தெருநாய்களையும் சேகரித்து எங்காவது தனியிடத்தில் உங்கள் பராமரிப்பில் வைத்துப் பரிவுகாட்டுவது நலமாக இருக்கும் அல்லவா

Monday, November 21, 2011

புதிய ஆத்திசூடி

ஔவையின் ஆத்திசூடியைத் தொடர்ந்து பாரதி புதிய ஆத்திசூடி எழுதினார். நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்ற யோசனை வெகுநாளாகவே மனதில் இருந்தது. அதன்விளைவுதான். ஆனால் இன்றைய சூழ்ல் மனதிற்கு சஙக்டமாக உள்ளது. மனித நேயம், பரிவு, நட்பு எல்லாம் வீண். மனிதனை மனிதன் உட்கொள்ளும் வன்முறை பெருகியுள்ளது. இன்றைய சூழலின் விளைவையே

இந்த ஆத்திசூடியில் பகிர்ந்துகொள்கிறேன்.


விரும்பாததது.......
/////////////


அரசியல் அறம் ஒழி

ஆன்மீகப் புலைத்தனம் கல்

இயன்றவரை துரோகம் இழை

ஈட்டுதலுக்காக குற்றம் பயில்

உண்மை எப்போதும் மறு

ஊழலைத் துணிந்து பேண்

எண்ண்த்தில் விடம் நிரப்பு

ஏற்றம்பெற எதுவும் செய்

ஐம்புலனையும் அடக்காது செல்

ஒவ்வொரு நாளும் வன்முறை புரி

ஓராயிரம் முறை நடித்து வாழ்

ஔவை சொல் விலகு.


விரும்புவது.......
/////////////////


அன்புசால் உலகு செய்

ஆற்றலைப் பெருக்கி நில்

இயன்ற வரை உதவு

ஈடடுவதில் தருமம் நிறுத்து

உண்மை எப்போதம் பேசு

ஊரின் நியாயம் கேள்

என்றும இறைவன் துணைகொள்

ஏறறம் பெற உழைப்பு தேடு

ஐம்புலன் செம்மைப் பேண்

ஒவ்வொரு நொடியும் நல்சிந்தை நினை

ஓடிஓடி உறவுகள் வளர்

ஔவை பாரதி வணஙகி வாழ்


எல்லோரும் அவரவர் சிந்தைக்கேற்ப ஆத்திசூடி எழுதுஙக்ள். நல் உலகு மலரட்டும்.


Thursday, November 17, 2011

குழந்தைப் பாடல்கள்

குழந்தை இலக்கியம் குறித்து அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத சூழல் இன்றைக்கும் நிலவுகிறது. இன்னொருபக்கம் குழந்தைகள் இலக்கியம் குறித்து அக்கறையுள்ள இலக்கியப் படைப்பாளிகளும் இதழ்களும் கவனம் செலுத்துகின்றன. நம்முடைய பங்கிற்கும் எதாவது செய்யவேண்டும் என்கிற உந்துத்ல் எப்போதும் மனத்தில் சுழன்றுகொண்டேயிருக்கிறது. தவிரவும் நீண்ட நாட்களாகிவிட்டன குழந்தைப் பாடல்கள் எழுதி. எனவே சில பாடல்கள் மறுபடியும்.



அணில்குட்டி

அணில்குட்டி அணில்குட்டி
அழகான அணில்குட்டி
முதுகுமேல திருநீறு
பூசிக்கிட்ட அணில்குட்டி
தாவிதாவி ஓடுமாம்
தரைமேலேயே தாவுமாம்
வாலவால ஆட்டிக்கிட்டு
ராம்ராம்னு பாடுமாம்
கருப்புமுழி கருகமணி
முழிச்சிக்கிட்டு கத்துமாம்
கட்டைசுவத்துமேல
நின்னுகிட்டு வரம்கேட்டு
ஆடுமாம்...

000000


வானம் முழுக்கப் பாருங்க
கண்ண சிமிட்டி கண்ண சிமிட்டி
காடடும் அழகு நட்சத்திரம்...

அம்மா நிலவு மெல்ல வந்து
அன்பாய் சிரித்துப் பாலுர்ட்டும்
கர்ற்று அடித்து காற்று அடித்து
மேகம் நிலவை மறைக்குமாம்...

கண்ண சிமிட்டி கண்ண சிமிட்டி
நட்சத்திரம் வேண்டாம் வேண்டாம்
என்குமாம்...

மேகம் ஓடி அழுவுமாம்
அம்மா நிலவு சிரிக்குமாம்..

அன்பு என்ற சக்தியை
அம்மா என்ற சக்தியை
யாரும் மறைக்க முடியாதாம்...

அம்மாபோல அன்புகாட்டி
அனைவருமே வாழுவோம்...

00000


காட்டுக்குள்ளே திருவிழா
கலகலன்னு நடக்குமாம்..

குயிலு அக்கா பாடுமாம்
மயில அக்கா ஆடுமாம்
ஓடிஓடி முயலு அண்ணா ஓயாம
அழைக்குமாம் வாங்க..வாங்க்..வாங்க..

சிங்கம் மாமா தலைமையில்
சிறுத்தை அண்ணா கச்சேரி
மான்கள் கூட்டம் மத்தளம்
மயக்கும் இசையில் நடக்குமாம்..

வகைவகையா விதவிதமா
விருந்து எல்லாம் நடக்குமாம்
பச்சைப்பச்சை காய்கறி
பழுக்கப் பழுக்க பழங்களாம்
பட்டாம்பூச்சி மெத்தையாம்
பளபளன்னு மின்னுமாம்...

குருவி வந்து சிரிக்குது...கரடி வந்து உறுமுது
யானை வநது பிளிறுமாம்..குதிரை வந்து கனைக்குமாம்..
எல்லாம் வந்து கூடிக்கூடி
பேசிப்பேசி களிக்குமாம்...

மிருகமெல்லாம் மிருகமா
பறவையெல்லாம் பறவையா
பண்போடு இருக்கணும்
பாழும் மனுசன் குணத்தைப் பார்த்து
பாதை மாறக்கூடாதாம்..

அதுக்குத்தான் திருவிழான்னு
தீர்மானமா சொன்னிச்சாம்
விருந்து வாசம் வந்துச்சாம்
திருவிழாவும் முடிஞ்சிச்சாம்..

00000

Thursday, November 10, 2011

குழந்தைகளிடம் கேட்டவை.

குழந்தைகள் எப்போதும் எந்தக் காலக்கட்டத்திலும் நம்மை ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிகளுககும் உள்ளாக்கிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் பேச்சும் செயலும் பிரமிப்பும் மன அதிர்வையும் தருகின்றன நமக்கு. நான் சில குழந்தைகளிடம் கேட்ட கதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.


மூன் மம்மி இருக்குல்லே..அதுக்கு ஏராளமான ஸ்டார்ஸ் பேபிஸ்..அதனால அது எப்பவும் சிரிச்சிக்கிட்டேயிருக்கும். ஆனா சூரியன் பாவம். அதுக்கு பேபிங்களே இல்லை. அதனால அது மூன் மம்மியைப் பார்த்ததும் கோபமாயிடிச்சி..அது மலைமேல இருந்துச்சா..அங்கிருந்து கிளம்பிடுச்சி. அதுக்கு ஒரே கோபம். வெளியே வந்து வேகமா மூன் மம்மியையும் ஸ்டார்ஸ் பேபிங்களயும் முழுங்கிடிச்சி. அதனாலதான் பகல்லே மூன் மம்மியும் ஸ்டார்ஸ் பேபிங்களும் காணமாப் போயிடிச்சி. அவ்வளவுதான் கதை.

000000000000

தம்பி கடவுள் இருக்காரா?

சாமி இருக்கா இல்லையான்னு தெரியாது.

கடவுள பார்த்திருக்கியா?

கடவுள பாத்திருக்கேன்.

எங்கே?

அதான் தெருத்தெருவா தேர்ல வர்றாரே...


00000000000000


ஒரு குழந்தையிடம் தாய் கதை சொல்லிக்கொண்டிருந்தாள். பாட்டி வடை சுட்ட கதை. கதையில் கடைசியில் நரி காக்கா போட்ட வடையைக் க்வ்விட்டு போயிடிச்சிசொன்னதும். குழந்தை கேட்டது தப்பா கதைய சொல்றியே மம்மி.. என்றது.

என்னப்பா தப்பு?

நரி வைல்ட் அனிமல் ஆச்சே? அது எப்படி வடையை சாப்பிடும். கறிதானே
சாப்பிடும்? கதைய மாத்தி சொல்லு.

0000000

ஒரு கவிதை...


குழந்தைகள்

வாழ்க்கைப் படகின் துடுப்பு...
நம்பிக்கையின் வேர்
எந்தப் பக்கத்தின் இருளையும்
வெளிச்சத்தால் நிரப்புவர்கள்..
கடவுளின் பல அவதாரங்களையும்
காட்சிப்படுததக்கூடியவர்கள்
கடவுளின் சிரிப்பையும்
கடவுளின் அழுகையையும்
கடவுளின் தவிப்பையும்
கடவுளின் ஏக்கத்தையும்
கடவுளின் பிடிவாதத்தையும்
காட்டுபவர்கள்...
ஒன்றேயொன்றுதான்
குழந்தைகளிடம் நெருங்க
குழ்ந்தைகளாகவேணடும் நாம்..
ஆனாலும் குழந்தைகளாக
முயல்வது ரொம்பக் கடினம்
அதே சமயம் அது ரொம்ப
எளிதும்கூட...


தம்பி சாமி கும்பிடுப்பா...

சாமிய கும்பிட்டா என்னா அம்மாச்சி?

சாமி கேட்டதெல்லாம் குடுக்கும்,,

அப்புறம் ஏன் கடையில பெல்ட் சாக்ஸ் எல்லாம் கேட்டா காசு கேக்கறாங்க அமமாச்சி?

00000000000


ஒவ்வொரு முறையும
ஒவ்வொரு பொருள்தரும்
கவிதை
குழந்தைகள் மட்டுமே...

மனித இனத்தின்
முதல் மொழி
குழந்தைகள் மட்டுமே....

எல்லா வாழ்வின்
எப்படிப்பட்ட சிக்கல்களையும்
தீர்ப்பவர்கள்
குழந்தைகள் மட்டுமே...


ஆகவே
குழந்தையாகப் பிறந்து
குழந்தையாகவே
இறப்பவர்கள் மட்டுமே
வாழ்ந்தவர்கள்...

Saturday, November 5, 2011

அவர்களும் நமது பிரதிகளும்



இப்போது அதிகம்
அலைகிறார்கள்...

நெருக்கடியாக சாலையின்
நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில்
காற்றுவெளியில்
கவலையற்று நிற்கிறார்கள்...

ஒருவன் இளைஞன்
ஒருத்தி இளம்பெண்
ஒருவர் முதியவர்

அவரவர் அவரவர்
கவலைகளோடு
போய்க்கொண்டிருக்கையில்

இவர்கள் சிரித்தபடியும்
அல்லது அழுதபடியும்
அல்லது ஏதோ முணுமுணுத்தபடியும்
நிற்பதைப் பார்க்கையில்
உள்ளுக்குள் உடைகிறது
ஒரு பயம்...

அவர்கள் சிரிப்பு நம்முடையதுபோல
அவர்கள் அழுகை நாம் அழுவதுபோல
அவர்கள் முனகல் நாம் முனகுவதைபபோல...

வாழ்க்கையினைப்
பிரதியெடுத்த பிரதியை
மனதில சுமந்திருப்பதுபோல...

Sunday, October 30, 2011

பொய்யாமொழி





பொய்யாமொழி என்பது திருக்குறளைக் குறிக்கும். திருவ்ள்ளுவருக்குப் பொய்யாமொழியார் என்ற பெயரும் உண்டு.

மனித வர்ழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வள்ளுவர் நினைக்க வைக்கிறார். அவருடைய வார்த்தைகள் அதற்குள் அடங்கியிருக்கும் சொற்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு சொல்கூட வீணான சொல் இல்லை.

மனிதன் மகிழ்ச்சியுறும்போது
மனிதன் காயமுறும்போது
மனிதன் ஆதங்கப்படும்போது
மனிதன் கோபப்படும்போது
மனிதன் பொறுமை கடைப்பிடிக்கும்போது
மனிதன் நிதானிக்கும்போது

வள்ளுவரும் வள்ளுவமும் தேவைப்படவே செய்கிறது.

சான்றுக்கு இரு வரிகள்.

1. அவரவர் எச்சத்தாற் காணப்படும்.
2. பணியுமாம் என்றும் பெருமை.

தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர்
எச்சத்தால் காணப் படும் (114)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து...(978)


இன்றைக்கு ஒரு உறவினர் இறந்துபோன நிகழ்வுக்கு செல்லவேண்டியிருந்தது. அருமையான மனிதர் என்று எல்லோரும் சொன்னார்கள். ஒரு மனிதன் இறந்துவிட்டால் சொல்லவேண்டிய பொதுவான வார்த்தைகளாக இல்லை. உண்மையில் நல்ல மனிதனாகவே இருந்து இறந்துபோனார். ஆனாலும் அவரின் இறப்பிற்கு வழிகாட்டிய காரணங்களில் முதன்மையானது திருமணத்திற்கு முன்தினம்வரை அவரது மகள் தனது காதலைப் பற்றிக் கூறாமல் மறைத்து அன்று இரவு விருப்பமான காதலனுடன் கிளம்பிப்போனது. அன்றைக்கு அவர் கூனிக்குறுகி அவர் சந்தித்த அவமானங்களும் காயங்களும் சொற்களில் எழுத முடியாதவை. அவரின் எச்சத்தால் (மகளால்) உண்டானது அது.

இன்னொன்று

ஒருவர் எங்கு வந்தாலும் எல்லோருக்கும் அறிவுரை மழை பொழிவார். அவரின் மகன்களுக்கு இன்றுவரை அவரின் அறிவுரை எந்தப் பலனையும் தரவில்லை. வேலையற்றுத் திரிகிறார்கள்.

எச்சம் என்பது எஞ்சி நிற்பது. வாழுகிற காலத்தில் ஒரு மனிதன் உண்மையோடு நன்றியோடும் நடுவுநிலைமையோடும் ஒழுக்கமோடும் இருக்கையில் அதுதான் அவனுடைய மறைவுக்குப்பின் அவனுடைய சந்ததிகளால் (எச்சத்தால்) அடையாளப்படுத்தப்படும்.

பிள்ளைகள் பெறுவது மட்டுமல்ல...அவர்கள் நல்ல பிள்ளைகளாகவும் வளரவேண்டும்...வளர்க்கவேண்டும்... நல்ல என்பதன் அடையாளம் படிப்பு மட்டுமல்ல.. உறவுகளைப் பேணும் தன்மையும்கூட... அன்றைக்கு கூட்டுக்குடும்ப வாழ்க்கை இருந்தது. அண்ணன் தம்பி பிள்ளைகள் யாரும் பேதமற்று எல்லோரும் ஒரே பிள்ளைகளாக வள்ர்ந்தர்ர்கள். உண்மை வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இப்போது திருமணம் ஆனவுடன ஆணின் உறவுகள் அறுக்கப்படுகின்றன. மனைவியின் உறவுகள்தான் ஒட்டப்படுகின்றன. கணவனின் உறவுகள் ஒழுக்கமாக இருந்தாலும் அது உறவுகள் இல்லை. மனைவியின் உறவுகள் ஒழுக்கக்கேடாகவும்... குடிகாரர்களாகவும்...முறையற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும் அது உறவாகின்றன..

இப்படி சந்ததிகளை வளர்கக்க்கூடாது. நடுவுநிலைமையோடு வளர்க்கவேண்டும். இதைத்தான் எச்சம் என்கிறார் பொய்யாமொழியார்.

பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு அவர்கள்தான் எச்சங்களாகின்றனர்.

அடுத்து

ஒரு கைதேர்ந்த சிற்பி சிலையை செதுக்கிக்கொண்டிருந்தான். அவனிடத்தில் ஒருவன் கேட்டான் சிலை செதுக்குகிறாயா? என்று. அந்த சிற்பி சொன்னான் அந்த திறமையெல்லாம் எனக்கு குறைவு. இந்தக் கல்லிற்குள் ஒர் அழகான சிலை ஒளிந்துகொண்டிருக்கிறது. அதனைச் சுற்றியிருக்கும் கசடுகளை நீக்கிக்கொண்டிருக்கிறேன் என்று.

ஒருவர் தனது மாமா வீட்டிற்குத் தத்துப்பிள்ளையாகப் போனார். அவருக்கு மாமாதான் விலாசம். மாமா படிக்கவைத்து ஒரு வேலைக்கு அனுப்பினார். நல்ல வேலையும் கிடைத்தது. அவரின் மாமாவின் பண்பிற்கும் அவரது குடும்பப் பின்னணிக்கும் என அவர் வளர்த்த த்த்துப்பிள்ளைக்குத் திருமணம் நடந்தது. வந்த பெண்ணின் இளமை மயக்கத்தில் வளர்த்து ஆளாக்கிய மாமாவை மறந்துபோனார். மாமாவிடம் கேட்டார்கள். அது அவன் குணம். இது என் குணம் என்றார் மாமா பதட்டமில்லாமல்.


நண்பர் ஒருவரின் மாமனார் வீட்டிற்குப் போனேன். அவரின் மனைவி அந்த இரவில் பட்டுப்புடவை போன்ற பளபளப்பான புடவையில் மேக்கப் குறையாமல் நாற்காலியில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார். நான் போனதும் அவர் உட்கார்ந்தபடியே கணவனை அழைத்து மாப்பிள்ளையின் நண்பர் வந்திருக்கிறார் என்று அறிமுகம் செய்தார். நண்பரின் மாமனார் உள்ளே போய் இரு டம்ளர்களில் காபி கொண்டு வந்தார். சாப்பிட்டோம். அந்தம்மாவின் பேச்சு ரொம்ப பகட்டாக இருந்தது. அவர் அமைதியாகப் பேசினார்.

வெளியே வரும்போது நண்பர் சொன்னார். என்னோட மாமனார் அந்தக் காலத்துலே உறானர்ஸ் படிப்பு படித்தவர். பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஆனா எதையும் காட்டிக்க மாட்டார். என்னோட மாமியாருக்கு கையெழுத்துக்கூடப் போடத்தெரியாது.

பாரதியார் சகுனியைப் பாஞ்சாலி சபதத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடும்போது சபை நடுவே ஏறெனக் களித்திருந்தான் என்பார். அதாவது அறிவாளிகள் நிறைந்த சபையில் எல்லாம் தெரிந்தவன் போலக்கூட அல்ல நன்றாகக் கற்ற புலமையாளன் போல மகிழ்ச்சியோடு இருந்தான் என்பார். இதற்கெல்லாம் ஒரு துணிச்சல் வேண்டும்.

பொய்யாமொழியார் காலந்தொட்டு இதெல்லாம் உண்டுபோலும். அதனால்தான்

பணியுமாம் என்றும் பெருமை என்றார் போலும்.

Wednesday, October 26, 2011

கவிதை


எரியஎரியத்தான்
நெருப்பு...

வீசவீசத்தான்
காற்று...

இடிக்க இடிக்கத்தான்
இடி...

மின்னமின்னதான்
மின்னல்...

பெய்யப் பெய்யத்தான்
மழை...

பொங்கப் பொங்கத்தான்
கடல்...

விரியவிரியத்தான்
வானம்....

இழையஇழையத்தான்
கவிதை....

Sunday, October 23, 2011

காட்சிகள்....



உள்ளாட்சி தேர்தல்வரை வரப் பயந்து முடிவுகள் தெரிந்தபிறகு வெளியே வரலாம் என்பது போலக் காத்திருந்த வானம் லேசாகக் கண் திறந்து மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் சவுக்கு இலைகள் போல ஊசிஊசியாய் தொடங்கிய மழை அவை இறுகிப் பின்னிய கயிற்றைபோல கணமாகப் பெய்ய ஆரம்பித்தது.

நகரத்தில் தீபாவளி கடைபோட்டிருந்த பிளாட்பார ஓரக் கடைவாசிகள் கலக்கமுற்று தங்கள் பொருட்களை பிளாஸ்டிக் போர்வையால் போர்த்திவிட்டு வாயை மட்டும் உரக்கத் திறந்திருந்தார். ரெண்டு ஐம்பது. நாலு இருவத்தஞ்சு..வாங்க சார்...வாங்கம்மா...வாங்கம்மா...குடை 60 கலர்க்குடை 60தான் சார்...இப்படிப் பல குரல்கள். மழையில் நனைந்தபடியும் குடையைப் பிடித்தபடியும்..புடவை தலைப்பால் தலையை மூடியும் பெண்கள் துணிக்கடைகளிலும் சாலையோரக்கடைகளிலும் பட்சணங்களில் மொய்த்த ஈக்களாயினர்..

அப்பா ஒரு சுடிதார் கூட எடுத்துக்கொடுங்கப்பா...
சும்மா இருடி... நீ ஒருத்தி மட்டும்தான் அதிசயமா இருக்கியா..உனக்கு மேல ஒண்ணு...கீழ ரெண்டு இருக்கு.. இத உங்கப்பா கடன் வாங்கிட்டு வந்திருக்காரு...சத்தம் போடுவாரு...பாவம் அந்த மனுஷன்...


அப்பா தர்த்தா வாங்கிகொடுத்த பட்டாசோட நிறுத்தக்கூடாது...எனக்குத் தனியா 500 ருவாயிக்கு வேணும்..
தொணதொணங்காதே.. வாங்கி தந்து தொலைக்கிறேன்..


எனக்கு வேணாம்...எங்கப்பா கருமாதிக்கு வச்சுக்கொடுத்த துணிங்க இருக்கு. அத தச்சிப் போட்டுக்கலாம்.. புள்ளங்களுக்கும் உனக்கும் எடுத்துக்க..


நீ பாட்டுக்கு எடுத்துக்கிட்டேயிருந்தா உங்கப்பனா காசு தருவான்.
ஏன் உங்க்ப்பன்கிட்டே கொட்டிக்கிடக்குன்ன அள்ளிக்கிட்டு வாயேன்.
எங்கப்பன பேசினே செருப்பு பிஞ்சிடும்.
எங்கப்பன பேசினே செருப்பு பிஞ்சிடும்.
பாரு...பதிலுக்குப் பதிலு பேசறதுக்கு சீக்கிரமே தாலியறுத்து பிச்சை எடுப்பே பாரு..
பரவாயில்லை...

நாலுமாசமா வட்டி வரலே...இதுலே இபப்வேற கடன் கேக்கறே..ஆடம்பர மயிரு பண்ணத்தெரியுது..உன்பொண்டாட்டி திமிறாப் பேசறா.. நீ என்னடான என் காலை நகக்றே பணத்துக்க..
அவளுக்குத் தெரியாதும்மா..தீபாவளி புள்ளங்களுக்குத் துணி எடுக்கணும்..கொடுங்க..ஏற்கெனவே கொடுக்கவேண்டிய வட்டிய அசலோட சேத்துக்கங்க.. லோன் போட்டிருக்கேன்..அடுத்த மாசம் எல்லாதையும் பைசல் பண்ணிடறேன்..
பேச்சு நல்லா பேசறே..மானம் ரோசமா இருக்க மாட்டேங்குறே..
இல்லம்மா கொடுத்துடறேன்.
இதான் கடைசி...அடுத்த மாசம் வட்டி வரலே..விளக்குமாறுதான் பேசும்..
சரிம்மா..


நாலு டிரசும் பிடிக்கல்லியா?
நான் உன்ன கேட்டனா?
என்னடா ஒவ்வொரு தீபாவளிக்கும் இப்படி பண்ணறே?
எனக்குப் பிடிச்ச நான் எடுத்துக்கறேன்.. நீ எடுக்கவேண்டாம். எனக்கு ஐயாயிரம் கொடு நான் பாத்துக்கறேன்.
இந்தா என்னமோ பண்ணித்தொலை. ஏன்தான் எனக்குன்னு வந்து பொறந்தியோ?
நானா உன்னை பெத்துக்க சொன்னேன்?

சேதி தெரியுமா?
மூணுசக்கர வண்டியிலே வருவாரில்லை முட்டை எடுத்துக்கிட்டு...
ஆமா..
ஆறு மாசத்துக்கு முந்தி கால்ல ஆணி குத்திச்சாம்.. கவனிக்காம விட்டுட்டாரு... சுகரு வேற..அது ரொம்ப புண்ணாயிடிச்சாம்.. காலையிலே செத்துப்போயிட்டாரு..
அடப்பாவமே...நாலு வயசுல பொம்பள புள்ள இருக்கு.
ஆமா.. அவருக்கு செத்துப்போயிடுவோம்னு தெரியுமா? ஆஸ்பத்திரியிலே பொண்டாட்டியைக்கூப்பிட்டு பத்திரமா பர்த்துக்கோன்னு சொன்னாராம்..
தீபாவளி அதுவுமா அடக்கடவுளே?

மழை வலுத்துக்கிடந்தது.

ஒரு அப்பாவும் பெண்ணும் மழையில் ரோட்டில் கிடந்த பள்ளத்தைக் கவனிக்கவில்லை.
அந்த பெண் ஸ்கூட்டியை ஓட்ட அவர் பின்னால் உட்கார்ந்திருப்பார் போல..பள்ளத்தில் முன்சக்கரம் விழுந்து அப்படியே இருவரும் விழுந்தவிட்டார். தரையில் கிடந்த கல் ஒன்று பெரியவர் தலையைப் பதம்பார்க்க ஏகமாய் இரத்தம். அந்த பெண் காலில் அடி..
பாத்து வரக்கூடாதும்மா.
அடக்கடவுளே?
பாதாள சாக்கடை போடறேன் போடறேன்னு நாசம் பண்ணிட்டானுங்க..
ஒரு நாளைக்கு ஆயிரம் பேரு இந்த ரோட்டுலதான் போறான்.. எம்எல்ஏ மினிஸ்டர்.. எல்லாம் போறானுங்க..அவனுஙக்ளுக்கு என்ன ஜெயிச்சாச்சு..இனிமே என்னா? ஒரு வயதானவர் தலையிலடித்துக்கொண்டு பேசிப்போனார்.
ஒருவர் வண்டியையும் ஒருவர் அந்தப் பெண்ணையும் ஒருவர் அந்த பெரியவரை தாங்கிப்பிடித்து ஓரமாய் உட்கார வைத்தார்கள்.
அந்தப் பெண் பதறினாள்.
அப்பா செல்லையும பணத்தையும் காணோம்..
அந்தப் பெரியவர் பரிதாபமாக மகளைப் பார்த்தார்...

மழை லேசாகக் குறைந்திருந்தது.
பட்டாசுகள் சரவெடிகள் வெடிக்கத் தொடங்கியிருந்தன.

பைக்குகள் ஊர்வலம் வந்தன. பின்னாலே நாலைந்து கார்கள். அப்புறம் ஒரு
ஜீப் அதில் கையை கும்பிட்டபடி ஒரு பெண். கழுத்தில் அவள் சார்ந்திருந்த கட்சியின் துண்டு.நன்றி அறிவிப்பு ஊர்வலம்.

சும்மாவா 40 இலட்சம் செலவு பண்ணியிருக்கேன்.
என் பொண்டாட்டிய ஜெயிக்கமுடியுமா?

இவங்களாச்சும் ரோடு போட்டுடுவாங்களா?
நாலு தெரு தாண்டி தண்ணிக்குப் போவவேண்டியிருக்கு,,ஒரு பைப்பாவது வச்சுத் தருவாங்களா...

நைட்டு பிரியாணியும் சரக்கும் இருக்காம்.. அண்ணே வரச்சொன்னிச்சு..
எங்க?
அண்ணனோட கல்யாண மண்டபத்துலதான்.



எல்லாவற்றையும் மறந்து வாயைப் பிளந்தபடி இரு ஓரமும் மக்கள் கூட்டம் வெற்றி வேட்பாளரை வியக்கப் பார்த்துக்கொண்டிருந்தது.

ஒரு வீட்டின் உள்ளே

என்னடா இது நாளைய தேதிய இன்னிக்கே கிழிச்சிட்டே..

சும்மாப்பா?

சும்மாவா? அப்படியெல்லாம் கிழிக்கக்கூடாது. நாளைக்குதான் கிழிக்கணும்.

அதனால என்னப்பா?

அதனால என்னப்பா?

அதனால என்னப்பா?

Wednesday, October 19, 2011

சந்திப்பு

மகிழ்ச்சி

வழக்கமாக தேர்தல் பணிகளுக்கென ஆசிரியர்களையும் அரசு அலுவலர்களையும் பயன்படுத்துவதைக் காட்டிலும் எண்ணற்ற வேலையற்ற பட்டதாரி இளைஞர்களைப் பயன்படுத்தினால் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் தேர்தல் நடைபெறும். தவிரவும் அவர்களுக்குக் கிடைக்கும் தொகை சிரமப்படும் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் உதவியாக இருக்கும் என்று பலமுறையும் அடிக்கடியும் சொல்லிவருகிறேன் வாய்ப்ப் அமையும்போதெல்லாம். இது நடைபெறும் என்பதற்கு அறிகுறியாக இந்த உள்ளாட்சி தேர்தலில் சில மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து தேர்தலைக் கண்காணிக்கும் காமிரா பயிற்சி அளித்துள்ளார்கள். தேர்தல் கமிசனுக்கு ஒரு சல்யூட். மகிழ்ச்சி.


கவிதை

ஒரு வருத்தம்
பல்வேறு அளவுகளையும்
பல்வேறு பரிமாணங்களையும்
கொள்கிறது..

ஒரு மகிழ்ச்சி
பல்வேறு அளவுகளையும்
பல்வேறு பரிமாணங்களையும்
கொள்கிறது.

ஒரு வருத்தத்திற்கு ஈடாக
ஒரு மகிழ்ச்சியையும்
ஒரு மகிழ்ச்சிக்கும் ஈடாக
ஒரு வருதத்த்தையும்
அளவிட்டும் பரிமாணமிட்டும்
தரமுடிவதேயில்லை ஒருபோதும்

என்பதுவான
வருத்தமும்
மகிழ்ச்சியும்
உறுத்துகிறது...அனுபவிக்க....



உண்மைச் செய்தி


செவ்வாழையின் குருத்தைப்போல இருந்தான் அவன். எப்போதும் சிரித்த
முகம். காலையில் செய்தித்தாள் போடுவான். அப்புறம் பள்ளிக்கு செல்வானாம்.
பத்தாம் வகுப்பு படிக்கிறவன். என் மனைவியிட்ம் மடடும் ஏதேனும் ஒரு கதை
சொல்வதற்கு ஐந்து நிமிடம் அவனுக்கிருந்தது தினமும். ஒரு காபி தருவாள்
அவனுக்கு. தீராத வயிற்றுவலி என்று அவன் வாடகை வீட்டில் கயிறிட்டு உயிர்
விட்டதாக சொன்னார்கள். அதிர்ந்துபோனேன். அவன் தந்த உலகு செய்தியெல்லாம்
வாசித்தவர்கள் அவன் செய்தியை வாசிக்கத் தயாராக இல்லை என்பதுதான் செய்தி.

Wednesday, August 31, 2011

இடைவெளிகளும் சில செய்திகளும்



அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

வணக்கமுடன் உறரணி.

தொடர்பணிகள். வேறுசில புதிய பொறுப்புக்கள்.

இப்போது இடைவெளியில் வந்திருக்கிறேன்.



==================================================================


தொடர்பணிகளில் ஒரு பகுதியாக சில புத்தகங்கள் எழுதி முடித்து வெளியிட்டுவிட்டேன். ஒன்று சங்க இலக்கியம் சொல்லும் பொருளும் என்ற எனது முனைவர் பட்ட ஆய்வு. முழுக்க முழுக்க பொருண்மையியல் அடிப்படையில் அமைந்த புத்தகம் இது. சங்க இலக்கியங்களில் காணப்படும் பெயர்ச்சொற்களைப் பற்றிய சொல்லாராய்ச்சி புத்தகம். நீண்ட கால உழைப்பு. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கடின உழைப்பில் வெளிவந்திருப்பது.

இரண்டாவது அண்ணாவை பற்றியது. அவரது படைப்புக்களில் காணப்படும் பல்வகைத் தன்மைகளை ஆராய்ந்து கருத்தரங்குகளில் வாசித்த கட்டுரைகளின் தொகுப்பு. பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா என்பது அந்தப் புத்தகம்.

மூன்றாவது புரண்டு படுக்கும் வாழ்க்கை எனும் தலைப்பிலான ஏற்கெனவே வெளிவந்த எனது ஒருபக்க சிறுகதைகளின் (கிட்டத்தட்ட 60 கதைகள்) தொகுப்பு.

மிகுந்த வேலை வாங்கினாலும் புத்தகம் வெளிவந்ததும் அதற்குக் கிடைத்த மரியாதையும் கருத்துப்பரிமாறல்களும் எல்லா இடர்களையும் களைந்துவிட்டது.

•••••••••••••••••••••••••••••••••


(2)

கதையும் காரணமும். முதலில் காரணம் அப்புறம் ஒரு குட்டிக்கதை.

எனக்குத் தெரிந்த பேராசிரியர்கள். கல்விப்பணியில் செம்மாந்தவர்கள். ஆனால் அடுத்தவரை ஏளனம் பேசுவதில் தினப்பொழுதைக் கழித்தவர்கள். நல்ல அறிஞர்கள். ஆனால் நல்ல மனிதர்கள் இல்லை. இவர்களால் நானும் காயப்பட்டிருக்கிறேன். வெகு நாட்களுக்குப் பின் ஒரு கருத்தரங்க நிகழ்வில் இவர்களைச் சந்தித்தபோது இவர்களின் குடும்பநிலை பற்றி மற்றவர்கள் பேச கேட்கவேண்டியிருந்தது. இவர்களுக்கு ஒவவொருவருககும் ஒரே பிள்ளைதான். ஆனாலும் அந்தப் பிள்ளைகள் சரியாக கல்வித்தகுதியில்லாமலும் சரியான வாழ்க்கை நிரந்தரம் இல்லாமலும் இருக்கும் சூழலைப் பேசினார்கள். எனக்கு வருத்தமாக இருந்தது. பெரும் பேராசிரியர்கள் மற்றவர்களை ஏளனம் பேசியே தங்கள் வாழ்வை விட்டுவிட்டார்கள் என்று.

இதுபோலத்தான் சில நெருங்கிய உறவுகளும். அடுத்தவரை பார்க்கிற பார்வை தவறாகவே இருக்கிறது. உழைத்து முன்னேறியவனைப் பாராட்டாமல் அவன் முன்னர் இடர்ப்பட்ட தருணங்களை நினைத்து ஏளனப் பார்வை பார்க்கும் இவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டுவிடுகிறார்கள். இதுவும் நினைக்கப் பரிதாபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அவர்களை திருத்துவது நமது வேலையில்லையே.. நம்முடைய இலட்சியமும் இலக்கும் வேறு அல்லவா?

இப்போது குட்டிக்கதை.

ஒரு மருத்துவர் தனது சீடனான மருத்துவரிடம் தான் எப்படி நோயாளியை அணுகுகிறேன் என்று பார்த்து அதன்படி நீயும் பழகு என்றார்.

ஒரு நோயாளியைப் பார்க்கப் போனார்கள். அவர் தொடர்ந்து வயிற்றுப்போக்கில் இருந்தார். மருத்துவர் அவரை அணுகி எல்லாம் விசாரித்துவிட்டு எதேச்சையாக அவரது கட்டிலின் கீழ் கண்டார். அங்கே ஏராளமான வாழைப்பழத்தோல்கள் கிடந்தன. மருத்துவருக்குப் புரிந்தது.

உடனே கேட்டார் அதிக வாழைப்பழங்கள் சாப்பிட்டீர்களா? உடனே நோயாளி ஆம் என்றார். அதுதான் இந்த வயிற்றுப்போக்குக்குக் காரணம் என்று மருந்து எழுதிக்கொடுத்தார்.

இன்னொரு சந்தர்ப்பம் வந்தது. மருத்துவர் போகமுடியாத நிலை. உடனே சீடனை அனுப்பினார்.

சீடனும் போனான். எல்லாம் விசாரித்துவிட்டு நோயாளியின் கட்டிலின் கீழ் வேண்டுமென்றே பார்த்தான். அங்கே ஒரு புலித்தோல் கிடந்தது. அந்த நோயாளி வேட்டைக்காரர் என்பது சீடன் மருத்துவனுக்குப் புரியவில்லை. உடனே கேட்டான் உங்கள் நோய்க்குக் காரணம் தெரிந்துவிட்டது. நீங்கள் ஒரு புலியைச் சாப்பிட்டிருக்கிறீர்கள் என்று.

இதுதான் காரணமும் கதையும்.

இப்படித்தான் பல பேராசிரியர்களும் உறவகளும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••



புவி உமாச்சந்திரன் என்று ஒரு பத்திரிக்கையாளர். தஞ்சையிலிருந்து பத்திரிக்கை நடத்திக்கொண்டிருந்தார். நல்ல எழுத்தாளர். நல்ல பத்திரிக்கையாளர். அப்புறம் சென்னை போனார். நீண்ட காலம் படைப்புப்பணியில் இருந்தார். சமீபமாக சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை வந்தார். சமீபத்தில் அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. தஞ்சையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். இரண்டுமுறைகள் இலக்கிய நிகழ்வுகளில் சந்தித்து பேசிக்கொண்டோம். நேற்று திடீரென்று இறந்துபோனார் என்று இலக்கிய நண்பர்கள் இன்று சொன்னார்கள். வருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் படைப்பாளியின் மரணம் பற்றி அறியும்போதும். அன்னாரின் ஆன்மா அமைதிகொள்ள உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••



ஒரு கவிதை



வாழ்க்கை எப்போதும்போல அமைதியாகத்தான் இருக்கிறது.
வற்றிப்போன ஆற்றில் தண்ணீர் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது.
எல்லோரும் வழக்கம்போல ஆற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
ஆற்றில் குளிப்பது மகிழ்ச்சியானது.
நீந்தி குளிப்பது இன்றைக்கும் ஒரு சாதனைபோலவே இருக்கிறது.
ஆற்றங்கரை ஓரமாக உள்ள பிள்ளையார் அழகாக இருக்கிறார்.
அவருக்கு அலங்காரமும் பூசையும் நடக்கிறது.
நேற்று ஒரு கதை எப்போதோ அனுப்பியது திரும்பிகிடக்கிறது டீபாயில்.
வேறு பத்திரிக்கைக்கு அனுப்பலாம் நம்பிக்கையோடு.
நண்பர்களின் படைப்புக்களைப் படிக்கையில் ஆனந்தம் துள்ளுகிறது.
எழுதுவதைவிட அதிகம் படிப்பது பிடிக்கிறது.
வழக்கமான முகூர்த்த நாளில் பத்திரிக்கைகள் வருகின்றன.
மொய் பற்றி யோசிக்கவேண்டியிருக்கிறது.
யார் எந்த கல்யாணத்திற்குப் போவது என்று.
எப்போது விடுப்பு எடுக்கலாம் என்றும் யோசிக்கவேண்டியிருக்கிறது.
மகள் புதிதாக கல்லுரிக்குப் போகிறாள். புது அனுபவங்களைப் பகிர்கிறாள்.
வாழ்க்கை எப்போது போல அமைதியாக இருக்கிறது.
நான் மறுபடியும் ஒரு கவிதை எழுத உட்கார்கிறேன்
உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் அலுப்பு தீரவும்...


•••••••••••••••••••••••

Monday, July 11, 2011

நினைவஞ்சலி


பேராசிரியர் கா.சிவத்தம்பி. நாடறிந்த தமிழறிஞர் அல்ல. உலகறிந்த தமிழறிஞர். அடிப்படையில் வரலாற்றுப் பட்டதாரியான பேராசிரியர் பின் தமிழின் மீதான தன் ஆளுமையைப் பதித்தவர். இலங்கையில் 1932 இல் பிறந்தவர். பர்மிங்காம் பல்கலையில் தனது முனைவர் பட்டம் பெற்றவர். 70 புத்தகங்களும் 200 க்கு மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியவர். பன்முக வாசிப்புத் தளங்களில் தனது ஆளுமையைப் பதித்தவர். அதனால் தமிழ் புதிய கோணத்தில் புதிய சுவாசிப்பில் வளம் பெற்றது எனலாம். இவருடைய ஆளுமையின் பதிவு தமிழின் மாறுபட்ட வழியை உருவாக்கித் தந்திருக்கிறது. இலங்கைப் பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் யாழ் பல்கலையில் பேராசிரியர் உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் வருகை தரு பேராசிரியர் எனப் பல பணிகள் புரிந்தவர். இவரின் பணிகள் தமிழுக்குக் கிடைத்த வரம்.

இலக்கியம், இலக்கணம், மொழியியல், திறனாய்வு, இலக்கிய வரலாறு, கவிதை எனும் நிலைகளில் தேர்ந்த ஆழமான புத்தகங்களை திறன்மிகு ஆய்வுநோக்கில் புதுமை வழியில் உலகிற்கு வெளிச்சப்படுத்தியவர். இவரின் சிந்தனைகள் மார்க்சிய நிலைப்பாட்டை வலியுறுத்தினாலும் இவரின் தமிழ்ப்பணிகள் யாரும் இட்டு நிரப்பமுடியாத சிந்தனைப் போக்குகளைக் கொண்டவை. இவரின் 79 வயதில் மரணம் நிகழ்ந்திருக்கிறது. இவரின் சிந்தனைகளை விரிவுபடுத்துவதன் மூலம் தமிழாய்வு மட்டுமின்றி தமிழ் மொழியின் பல பரிமாணங்கள் உலகின் இருட்பகுதிகளை வெளிச்சமாக்கும் ஆற்றல்கெர்ண்டவை என்பதை உணர்ந்தாலே அது அவரின் ஆன்மாவிற்குச் செய்யும் கடமையாகும்.

மிகச்சிறந்த தமிழ் நுர்ல்கள் மறைந்துபோனதை வரலாறு தெரிவிக்கிறது. இவரும் மறைந்துபோன பேரிலக்கியம்தான். தமிழுக்குப் பேரிழப்புதான். இவரின் தகைமை இனியாவது உரிய நிலையில் போற்றப்படவேண்டும் என்பதுதான் தமிழாய்வாளர்கள் செய்யவேண்டிய தலையாயப் பணியாகும்.

06.07.2011 புதன்கிழமை இரவு தனது தமிழ்த்தொண்டை முடித்துக்கொண்ட பேராசிரியர் கா. சிவத்தம்பியின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.00 மணிக்கு எரியூட்டல் நடைபெறுகிறது. அவரது ஆன்மா அமைதிகொள்ளட்டும்.

தமிழின் ஒரு சகாப்தம் கா.சிவத்தமபி.

Thursday, June 9, 2011

சில சிந்தனைகள்.......



முடிந்த மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி நடக்கு மாதத்தின் இன்றுவரை சில மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. வயதாகிப்போன என்னுடைய சித்தி. என்னுடைய படைப்பாள நண்பர்கள் இருவரின் அப்பாக்கள்.

வயது தளர்வு தவிர்க்கமுடியாதது என்றாலும் என்னுடைய சித்தப்பா இறந்துபோய் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் தன்னுடைய இரு பிள்ளைகள் வீட்டிலும் வேறு எந்த உறவு வீட்டிலும் வந்து தங்காமல் என்னுடைய வயிற்றுக்கு உழைத்துக்கொள்கிறேன் என்று சாகின்ற கடைசி நிமிடம் வரை தனியார் கடையில் வேலைபார்த்து அதில் சேமித்து தன்னுடைய பேரப்பிள்ளைகளுக்குத் தவறாது செய்து யார் அழைத்தும் அவர்கள் அழைப்பையும் மறுத்து கடைசிவரை தன்மானத்துடன் உழைத்து உயிர்விட்ட அவர்களின் மரணம் பத்தோடு பதினொன்றாக இல்லை எனக்கு.

இரு படைப்பாள நண்பர்களும் கவிஞர்கள். ஒருவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர். இன்னொருவர் அச்சகமும் பதிப்பகமும் இலக்கியச் சிற்றிதழும் நடத்தி வருபவர். மரணம் என்பது தவிர்க்கமுடியாதது என்றாலும் படைப்பாளர்களின் அப்பாக்கள் இறக்கும்போது அது ஏற்படுத்தும் தயரம் சற்று கூடுதலானது. அது அனுபவித்துப் பார்த்தால் தெரியும். ஒரு சாதாரண மனிதனின் தந்தை இறக்கும்போது அது தனி துயரமாகிறது. ஒரு படைப்பாளனின் தந்தை இறக்கும்போது அது இலக்கியமாகிறது என்பது என்னுடைய அனுபவம். என்னுடைய அப்பா குறித்து ஒரு நாவலை முடிக்கும் நிலையில் இருக்கிறேன். அதுமட்டுமல்ல சாதாரண மனிதனைக் காட்டிலும் ஒரு படைப்பாளனை இலக்கிய ஆளுமையை உருவாக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஒரு தந்தையின் உயிரும் உடலும் அணுவும் அதில் பின்னிப்பிணைந்தேயிருக்கிறது. அப்பா திடீரென்று இறந்துபோன அந்த தருணத்திலிருந்து ஒடிந்துபோயிருக்கிறார்கள். அந்த தருணத்திலிருந்து அவர்களை மீட்டுவிடும் காலம் என்றாலும் அதுவரை நிரம்பியிருக்கும் வெறுமை எதனாலும் மீட்கமுடியாதது என்பதுதான். இருவரின் அப்பாக்கள் ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன்.

இலவசம் என்கிற சொல்குறித்து நிறைய யோசிக்கிறேன். குருகுலக் கல்வியில் மனமுவந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்வியை தலைமுறைகளுக்கு இலவசமாய் தந்திருக்கிறார். தங்களின் அனுபவங்களைப் பலர் ஏடுகளிலும், கல்வெட்டிலும், செப்பேடுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் இலவசமாக தந்துவிட்டுப்போயிருக்கிறார்கள். அயல்நாட்டுப் பெண்களைச் சிறைப்பிடித்தும் கொள்ளையடித்தும் தாலியறுத்தும் சேகரித்த பொருள்களை இலவசமாகத் தன்னுடைய மக்களுக்காகவும் தன்னுடைய புகழுக்காகவும் இலவசமாக வாரியிறைத்த வேந்தர்களும் மன்னர்களும் உண்டு. வாசலில் பசித்து நின்றவனுக்குப் பசியாற இலவசமாய் உணவு தந்து குளிர்ந்தவர்கள் உண்டு. இதனையே கூட்டங்களுக்குப் போட்டு விளம்பரப்படுத்திய இலவசங்களும் உண்டு. இலவசம் என்பதில் பல முரண்பாடுகளைக் கண்டறியமுடிகிறது. வெள்ளம், புயல், இயற்கை சீற்றங்களினாலும் வர்க்க முரண்பாடுகளின் ஆதிக்கத்தாலும் ஏற்படும் பேரழிவுகளுக்குப் பின்னாலும் இருக்க இடம் உண்ண உணவு உடுத்த உடை என்று இலவசங்கள் பட்டியலிடப்படுகின்றன. மக்களின் வாழ்க்கையைப் பண்படுத்துகிறோம் என்று பல்வேறு மதவாதிகளும் தங்களுடைய கருத்துச் செல்வங்களை இலவசமாக மக்களுக்கு வாரியிறைப்பதிலும் ஒரு கலக்கம் இருக்கவே செய்கிறது. ஒரு இன்பத்தையும் ஒரு துன்பத்தையும் இலவசத் தராசில் சமூகம் நிறுக்கிறது. அரசியல் இலவசங்கள் இப்போது டிவி, கேஸ், அரிசி, இப்போது மிக்சி, கிரைண்டர், லேப்டாப் என்று விரிந்துகிடக்கிறது.

சிலவற்றைப் பின்வருமாறு இலவசமாக எண்ணிப்பார்க்கலாமா?

1. உலகின் ஒரு மனிதனுக்கு மிகஉயர்ந்த வாழ்க்கைப் பாடத்தை வறுமை கற்றுத்
தருவதுபோல எதுவும் கற்றுத்தந்துவிடமுடியாது. இந்த வறுமையையே வாழ்க்கை
யாகக் கொண்டு படித்து நல்ல தரத்தில் நிற்கும் மாணவர் மாணவிகளை அடையாளம்
கண்டு அவர்களின் படிப்பு முழுக்க இலவசம் என்றும் படிப்பு முடித்தவுடன் கண்டிப்பாக
நிரந்தரமாக ஒரு வேலை இலவசம் என்று அரசு முடிவெடுத்தால் அந்த இலவசம்
தரமானது.

2. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பதில் ஒரு விழுக்காடு (?) மட்டுமே
உண்மை ஏழை விவசாயிக்கு சென்று சேர்கிறது. எனவே இதனை தயவு தாட்சண்யம்
இல்லாமல் ரத்து செய்து இந்த இலவசத்தை ஏழைப்பெண் திருமணத்திற்கும் அவளை
ஏற்கும் ஏழை கணவனுக்கு ஒரு நிரந்தர வேலை எனவும் மாற்றினால் அந்த இலவசம்
தரமானது.

3. வீட்டுக்கொரு இலவசம் என்பதை அந்தந்த வீட்டின் படித்த ஒரு பெண்ணுக்கோ அல்லது
ஆணுக்கோ அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப ஒரு நிரந்தர வேலையைத் தந்தவிட்டால்
டிவி, எரிவாயு, மிக்சி, கிரைண்டர் அவர்களுக்கு தானாக வர்ங்கிக்கொள்ளும் திறன்
வந்துவிடும்.

4. முற்பட்ட இனத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக தகுதியும் திறமையும் நிரம்பப்
பெற்றவர்கள் இன்னும் வாழ்வின் அச்சத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். தகுதியும்
திறமையும் கொண்டவர்கள் அவர்களுக்குரிய வாய்ப்பைப் பெருக ஒதுக்கீடு என்பதை
சில நிலைகளில் கட்டுப்படுத்தி அவர்களையும் இந்தத் தகுதி திறமைக்குள் உட்படுத்த
லாம். மேலும் கல்வி உதவித்தொகை என்பது பெரும்பான்மையும் சரியாகப் பயன்
படுத்தப்படாமல் வேறு பயன்களுக்கு செலவு செய்வதை இன்னும் சற்று தீவிரமாகக்
கண்காணிதது ஒழுங்குபடுத்தினால் கல்வித்தொகை என்பதன் அர்த்தம் சரியாகும்.

5. வேலைக்குச் சேருவதில் ஒதுக்கீடு பின்பற்றுவது நடைமுறை. அதற்காக பதவி உயர்வு
போன்று ஓய்வுபெறும்வரை ஒதுக்கீடு பின்பற்றுவது தகுதியையும் தரத்தையும் பாழ்
படுத்தும்.

6. கடவுளும் பக்தியும் அவசியமானது. அதற்காக போக்குவரத்து நெரிசலான சாலைகளில்
ஆபத்தான மின்கம்பங்களில் ஒலிபெருக்கி கட்டுவது இவற்றைக் கட்டாயம் தடைசெய்தல்
பல உயிர்களுக்கு நிறைவு தரும் இலவசமாகும்.

7. கைபேசி பயன்பாட்டினை வரையறுப்பது அவசியம். குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு
பயன்படுத்துவதிலிருந்து கட்டாயத் தடை விதிக்கலாம்.

8. புழுதியும் நீரும் பல நோய்களுக்குக் காரணமாகின்றன. எனவே இவற்றை ஒழுங்குபடுதத
விரைவான சாலைகள் பராமரிப்பு, தரமான நீர் சேகரிப்பு இவற்றை ஏற்படுத்தித்தர
வேண்டும். அதாவது ரியல் எஸ்டேட்டிற்கு அங்கீகாரம் வழங்கும் வரைவில் கட்டாயம்
பூங்காவிற்கு இடம் ஒதுக்கவேண்டும் என்பதுபோல் கட்டாயம் தரமான நீர் ஆதாரத்திற்கு
ஒரு இடம் ஒதுக்கவேண்டும் என்று நிபந்தனையிட்டு அங்கீகாரம் வழங்கலாம்.

9. மருத்துவமனைகள் இன்னும் ஆரோக்கிய சூழலில் பராமரிக்கும் நிலையை உருவாக்க
லாம். குறிப்பாக படுக்கை வசதிகள், பராமரிப்பு என்பதில் கவனம் அதிகம் வேண்டும்.
டாஸ்மாக் போன்றவற்றின் ஒழிப்பிலும் இதற்கான தொகையை மாற்றிப் பயன்படுத்த
லாம்.

இவையாவும் மனுக்களின் கோரிக்கையல்ல. மனவெளியில் கிடப்பவை. சிந்தனைக்காக மட்டுமே.

Sunday, May 29, 2011

வாசிக்க (சு) வாசிக்க


சமீபத்தில் படித்த புத்தகம் இது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிந்துரைத்த புத்தகம் இது.

நல்ல பேச்சாளராகவும் நல்ல வாசிப்பாளராகவும் அவர் இருக்கிறார்
என்பதற்கு இந்தப் புத்தகப் பரிந்துரை சாட்சி.

புத்தகத்தின் பெயர் சாணக்ய நீதி ஸமுச்சயம். தஞ்சை சரசுவதி மஉறால்
நுர்லக வெளியீடு. சமஸ்கிருதத்தில் அமைந்த காகிதச்சுவடி. இதிலுள்ள
சுலோகங்களைத் தமிழ் வரிவடிவத்தில் அமைத்து பொழிப்புரை எழுதப்
பட்டிருக்கிறது. எழுதியிருப்பவர் மேற்படி நுர்லகத்தில் சமஸ்கிருதப்
பண்டிட்டாகப் பணிபுரியும் புலமையாளர் முனைவர் ஆ.வீரராகவன் அவர்கள்.

ஸமுச்சயம் என்பதற்கு தொகுப்பு என்பது பொருளாகும். சாணக்கியரால்
கூறப்பெற்ற நீதிகள் இதில் சுலோகங்களாக உள்ளன. அத்தனையும் வாழ்ககை
நீதிகள். அத்தனையும் அற்புதப் பயன் விளைவிப்பவை. அரசனுடைய கடமை
தீயோர்களை ஒடுக்கி நல்லோர்களாகிய மக்களைக் காக்கவேண்டும். அதற்காக
இதற்கு ராஜநீதி என்றும் அழைப்பார்கள்.

இதன் விலை முப்பது ரூபாய். அவசியம் ஒருமுறையேனும் வாசிக்கவேண்டிய
புத்தகம்.

இதிலிருந்து சில நீதிகள் / நெல்லிக்கனி சுவைபோல...


ஃ பணிவற்ற வேலையாள்.கொடைத்திறனற்ற அரசன்.கெட்ட நண்பர்கள்.
பணிவில்லாத மனைவி. நாலவரின் செய்கையும் தலையைத்துளைக்கும்
கொடிய வியாதிகள்.

ஃ மதிப்பும்,வேலையும்,சுற்றமும்,கல்வியும் எங்கு கிடைப்பதில்லையோ
அங்கு ஒருக்காலும் வசிக்கக்கூடாது.

ஃ சிறந்த அறிஞர்களாக இருந்தாலும் ஒரு பாமரச்சிறுவனின் நற்கருத்துக்களை
ஏற்கலாம். அது வயதான அனுபவம் வாய்ந்தவரிடமும்கூட கிடைக்காது.

ஃ முறையாக இருந்தால் பகைவரிடமிருந்தும் நல்லொழுக்கத்தை எடுத்துக்
கொள்ளலாம்.

ஃ செல்வச்சிதைவு,மனவருத்தம்,மனையில் நிகழும் தகாச்செயல்கள்,
வெகுமானம், அவமானம் ஆகியவற்றை அறிவாளி வெளிப்படுத்தமாட்டான்.

ஃ உணவு செரிக்காதபோது தண்ணீர் அருமருந்து. செரித்தபின் அது உடலுக்கு
வலிமை. உண்ணும் வேளையில் அம்ருதமாகும தண்ணீர் உணவின் முடிவில்
விஷமருந்தியதற்கு ஒப்பாகிறது.

ஃ பிறர் பொருளைக் காணும்போது குருடானாகவும், பிற பெண்டிருடன் பழகும்
போது அலியாகவும், பிறர்மீது குற்றம் சுமத்துகையில் ஊமையாகவும்
இருப்பவன் துர்ய்மையானவன்.

ஃ மிக அதிகமான புண்ணியங்கள்- மிக அதிகமான பாவங்கள் எதற்கும் பலன்
இப்பிறவியிலேயே கிடைத்துவிடும். 3 நாட்கள் அல்லது 45 நாட்கள் அல்லது
3 மாதங்கள் அல்லது 3 வருடங்கள் அதற்கான காலம். எனவே எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்.

ஃ வண்டிக்கு ஐந்து கை தொலைவும், குதிரைக்குப் பத்துகை தொலைவும்,
யானைக்கு ஆயிரம்கை தொலைவும், தீயவனுக்கு வெகுதொலைவும் என
விலகிச்செல்லவேண்டும்.

ஃ திரும்பப் பயிற்சி புரியாமல் கல்வியும், செரிக்காத நிலையில் உண்ணும்
உணவும், வறியவன் பலருடன் சேர்ந்து பொழுதுபோக்கலும், வயது முதிர்ந்த
வனுக்கு பருவ மங்கையும் விஷத்திற்கொப்பாகும்.


இவை சில சான்றுகள். 79 பக்கங்கள். அதிகபட்சம் இரண்டு மணிநேரத்தில் படித்து முடித்துவிடலாம். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் அதற்குரிய சுலோகங்களுடன் அனுபவித்துப் படிக்கலாம்.>

Monday, May 23, 2011

சேமிப்பு முத்துக்கள்...


1. இலக்கியங்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளில் மூன்று வகைகள் உண்டு.
அ) கூந்தல் பனை ஆ)நாட்டுப்பனை இ)லோண்டர் பனை
இலக்கியங்கள் பெரும்பான்மையும் கூந்தல் பனையில் எழுதப்பட்டன.
இவற்றில் ஒரு ஓலையில் அதிகபட்சம் 25 வரிகள் எழுதலாம். 70 ஆண்டுகள்
ஆயுள் உண்டு. நாட்டுப்பனை சாதாரணமானது. கூந்தல் பனையும் நாட்டுப்
பனையும் கலந்தது லோண்டர் பனை. தடிமனானது இது.

2. ஓலைச்சுவடியைக் கட்டியபின் அதனைத் தடுக்கும் பகுதியில் (பிரிந்துவிடாமல்)
உள்ள சிறு ஓலைக்கு கிளிமூக்கு என்று பெயர். இவற்றை சிவப்புத் துணியால்
(பூச்சிகளைப் பயங்கொள்ள வைக்க நெருங்காது) அல்லது மஞ்சள் துணியால்
(கிருமி நாசினியாகப் பயன்பட) மூடி வைப்பார்கள்.

3. முக்கியமான சுவடிகளை கோபுரத்தின் இரண்டாம் நிலையிலும் கலசத்திலும்
வைத்துப் பராமரிப்பது வழக்கம். கோயிலில் அமைந்துள்ள நுர்லகத்திற்கு
திருக்கோட்டிகை என்பது பெயர்.

4. சுவடியை துணிபோட்டுப் பாதுகாப்பதைப்போலவே சுவடிபடித்த சான்றோர்களையும்
பாதுகாக்கவேண்டும் என்றுதான் சால்வை அணியும் வழக்கம் வந்ததாம். அதுவே
இப்போது பலவற்றுக்கும் மாறிவிட்டது.

5. காஞ்சிபுரத்தில் ஏராளமான குடைவரை கோயில்கள் உள்ளன. இருப்பினும் அவை
யாவும் முழுமையாக முடிக்கப்பெறாதது.

6. வழங்கப்பட்ட தானங்களில் பாரதம் படிப்பதற்கும் இராமாயணம் படிப்பதற்கும் பாரதப்
பங்கு இராமாயணப்பங்கு என அறிவுசார்தானம் வழங்கப்பட்டமையை ஒரு
செப்பேடு குறிக்கிறது.

வரலாற்றை மறுமுறையாக வாசிக்கும்போது சுவை கூடுகிறது. அதன்விளைவாகவே இந்த பதிவு. தொடர்ந்து வாய்ப்பமைவில் எழுதுவேன் இன்னும்.

Sunday, May 22, 2011

நிகழ்வுகள்....



ஃ சிலவற்றிற்கு காரணங்கள் விளங்குவதில்லை. என்னுடைய மகனின் பள்ளித்தோழன் கோவையில் பொறியியல் படித்துவந்தான். மூன்றாமாண்டு மாணவன். விளையாட்டு, படிப்பு, மற்றும் இதர நடவடிக்கைகளில் படு வித்தகன். நிறைய சான்றிதழ்கள். நிறைய பரிசுகள். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பெற்றோர்களிடம் காண்பித்துவிட்டு வரலாம் என்று தஞ்சைக்குப் புறப்பட்டவன் ரயிலில் பயணம் செய்கையில் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு வந்திருக்கிறான். அப்போது அடுத்த டிராக்கில் வேகமாக சென்ற வேக ரயில் கலைத்த காற்றால் இவன் தடுமாறி பயணம் செய்த வண்டியில் கீழாக அடிபட்டு உயிரிழந்துவிட்டான். இளம் வயது. தவிரவும் அவன் பெற்றோர்களுக்கு ஒரே மகன். அவர்களின் துயரத்தை எதைக்கொண்டு அடைப்பது?

ஃ வதந்திகள் என்பது கேவலமான ஒரு செய்கை. மொட்டைக் கடிதம் போடுவது என்பது அதைவிட படு கேவலமான செயல். இதுபோன்ற செயல்களை படிக்காதவர்கள் செய்வதேயில்லை. படித்தவர்கள்தான் அதிலும் கற்பித்தலில் உள்ளவர்கள் நிறைய செய்கிறார்கள். இதனால் எதிர்முனையில் ஏற்படும் விளைவுகளையும் துயரங்களையும் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர் (ஓய்வு பெற்றுவிட்டார் பல ஆண்டுகளுக்கு முன்பே) மருமகன் மருமகளைக் கண்டவர். இதில் தேர்ந்தவர். வருத்தமாக உள்ளது. ரஜினிகாந்த பற்றிய வதந்தியால் ஒரு ரசிகர் தற்கொலை செய்துகொண்டார் என்பது வருத்தத்திற்குரயது. இதற்கு வதந்திதான் காரணம். இது கண்டிப்பிற்குரியது.

ஃ திருச்சி மலைக்கோட்டையில் உச்சியின் இடையில் ஒரு குடைவரை கோயில் உள்ளது. இதில் மகேந்திரவர்ம பல்லவனின் சரிதை கிரந்தத்தில் உள்ளது. இது 8 சுவையான கவிதைகளாக உள்ளது. இது கற்பந்தல் எனும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. கற்பந்தல் எனும் சொல்லாட்சி அக்காலத்திலேயே பயின்றுள்ளமை சிறப்பு. இக்கவிதைகளின் பொருண்மை சிறப்புப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். கற்பந்தல் கீழ் வைததான் கவி என்று உரைக்கப்படுகிறது.

ஃ சமஸ்கிருத நாடக வரலாற்றைப் பற்றி படிக்கிற வாய்ப்பும் அதைப் பற்றிய சொற்பொழிவைக் கேட்கிற வாய்ப்பும் சமீபத்தில் நேர்ந்தது. அவற்றின் நாடக விதிகளைப் பற்றிக் கேட்கும்போது வியப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முழுமையாக அவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உந்தியிருக்கிறது. நான்கு வேதங்களின் அடிப்படையில் நாடக விதிகள், ஆங்கீகம். வாஜ்ஜியம். ஆகாமியம். சாத்வீகம் எனும் 4 வகை அபிநயம் ( அதாவது மன எழுச்சியால் ஏற்படும் உடல் அசைவு, வாக்கால் ஏற்படும் உடல் அசைவு, மனசால் நினைப்பதை வெளிப்படுத்துவது, மனக்கூற்றால் பொறுமையுடன் வெளிப்படுத்துவது) அதேபோன்று நாட்டிய தர்மி, லோக தர்மி எனும் இருவகை நாடகத் தர்மங்கள் எனப் படிக்கப்படிக்க சுவையாக இருக்கிறது. அதேபோன்று மனதைப் பாதிக்கும் எதனையும் சிறுதுளிகூட மேடையில் காண்பிக்கக்கூடாது எனும் சமஸ்கிருத நாடக விதியை இன்றைய நாடகங்களோடு பொருத்திப் பார்த்து வருத்தம் வந்தது. ரஸம், அலங்காரம், சந்திகள் என விரிந்துபோகிறது. முழுமையாகக் கற்றபின் விரிவாக எழுதகிறேன்.


ஃ ஒரு சின்ன கவிதை


எல்லாத் தருணங்களிலும்
எல்லாவற்றையும் மனது
நினைக்கிறது
எல்லாவற்றையும் மறந்தும்
போகிறது..
வெளிப்படுத்த விரும்புகையில்
மறுபடியும் யோசிக்கவைக்கிறது
வெளிப்படுகையில்
நினைத்ததும்
மறந்ததும்
விரும்பியதும்
என எவற்றின் சாயலும்
கடுகளவுமில்லாது
நிகழ்ந்துவிடுகிறது...

Wednesday, May 18, 2011

செம்மொழி விருது

செம்மொழிக்கான இளம் தமிழ் அறிஞர் விருதுகள் 06.05.2011 அன்று குடியரசு தலைவர் அவர்களால் புதுதில்லியில் வழங்கப்பட்டன. தொடர்பணிகளால் அது பற்றிய குறிப்புக்களை இன்றுதான் எழுத நேர்ந்தது. தமிழ்மொழியில் குறிப்பிடத்தக்க பணிகளைத் தொடர்ந்து செய்துவருபவர்களுக்கு வழங்கப்படும் விருது. இவ்விருது பெற்றவர்கள்ல் பலர் எனது நண்பர்கள் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் என் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் விதமாக இந்தப் பதிவு. இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

1. நண்பர் ய.மணிகண்டன். எனது நீண்ட நாள் நண்பர். தஞ்சாவூர் சரசுவதி மஉறாலில் பணிபுரிந்தவர்.அவருடன் பல கவியரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவருடைய தலைமையில் கவிதை வாசித்து இருக்கிறேன். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மிகவும் தகுதியானவர். சுறுசுறுப்பானவர். சரசுவதி மஉறாலில் பணிபுரியும்போது பல குறிப்பிடத்க்கப் பணிகளை சுவடியியல் பதிப்பிலும், இலக்கண இலக்கியங்களிலும் மேற்கொண்டவர். குறிப்பாக யாப்பியலில் தேர்ந்தவர் மணிகண்டன். கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர். மிகவும் அன்பானவர் மனிதர்களை நேசிப்பதில். வாழ்த்துகிறோம் அவரை இவ்விருது பெற்றமைக்காக.

2. நண்பர் அறவேந்தன் என்கிற இரா.தாமோதரன் நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது அங்கு நான் பணியாற்றிய துறையில் முனைவர்பட்ட ஆய்வாளராக இருந்தபோது அறிமுகம். ஆய்வாளராக அறிமுகம் தொடங்கிய கால்த்திலிருந்து இன்று பேராசிரியராகப் பணியாற்றும் நிமிடம் வரையிலும் காலத்தின் அருமை கருதியவர். சொற்களை அளந்து பேசுபவர். நல்ல நண்பர். நல்ல ஆய்வாளர். நல்ல ஆசிரியர். சிங்கள இலக்கணத்தையும் வீரசோழியத்தையும் ஒப்பிட்டு முனைவர் பட்டம் பெற்றவர். இதற்காக சிஙக்ளம் கற்று இலங்கைப் பயணம் மேற்கொண்டு ஆய்வை நிறைவு செய்தவர். தொடர்ந்து பல ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு அவற்றை உடனுக்குடன் புத்தகவடிவில் வெளியிட்டு வருபவர். பல பரிசுகளைப் பெற்றவர். தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் பேராசியர். இவ்விருதுக்காக அவரை வாழ்த்துகிறோம்.

3. நண்பர் அரங்க.பாரி என்னுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபாற்றுபவர். பல ஆய்வுப் புத்தகங்களை வழங்கியவர். பல கருத்தரங்குகளைத் திறம்பட நடத்தி அதன் தொடர்ச்சியாக ஆய்வுக்கோவைகளைத் தந்தவர். இனிமையாக பழகுபவர். எப்போதும் எளிமையாக இயங்குபவர். தொடர்ந்து இயங்கிவருபவர். சக தோழரை இவ்விருதுக்காக வாழ்த்துகிறோம்.

4. நண்பர் மு.இளங்கோவன் அண்ணாமலை தொலைதுர்ரக் கல்வி இயக்கக வழி தொடர்பு வகுப்பில் அறிமுகம். அன்பிற்குரிய இளவல். இனிய புன்னகையுடன் உறவுகளைப் பேணுபவர். பல்வகைப்பட்ட பொருண்மைத் தளங்களில் பல புத்தகங்களைத் தந்தவர். தொடர்ந்து அவரது இணையத் தளத்தின் வழியாக செய்துவரும் தமிழ்த்தொடர்பான பணிகள் ஒவ்வொன்றும் சிறப்புக்குரியவை. வரலாறு, மானிடவியல், இலக்கணம், இலக்கியம், இணையம் என முனைப்புடன் இயங்குபவர். இளவலை இவ்விருதுக்காக வாழ்த்துகிறோம். அவரது இணையத்தளத்தின் வழியாகப் பெற்ற புகைப்படத்திற்கு நன்றி.


சிறப்பாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. என்னுடைய நண்பர் அ.சிவபெருமானின் தந்தையார் மதிப்பிற்குரிய பேராசிரியர் அடிகளாசிரியர் ஐயா அவர்கள் தொல்காப்பிய விருது பெற்றிருக்கிறார். அவரை வாழ்த்தும் தகுதியும் வயது இல்லையென்தால் அவரை வணங்குகிறேன் பணிந்து. அடிகளாசிரியர் தஞ்சை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் முதல்வராக இருந்தவர். அவருடைய தமிழ்ப் பணிகள் அளவிடற்கரியன. முற்றிலும் இவ்விருதிற்குத் தகுதியானவர். அவருடைய தகுதிக்கு இன்னொரு சான்று நண்பர் அ.சிவபெருமான். இவருடைய தமிழ்ப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை.

இவ்விருது பெற்ற மற்ற முகமறியாதவர்களையும் வாழ்த்துகிறோம்.

இளம் தமிழ் அறிஞர் விருதுபெற்றோரிடம் வேண்டுகோள்


மேன்மேலும் உங்களின் தமிழ்ப்பணிகள் செழிப்புறட்டும். தமிழின் மேன்மை உலகெங்கும் இன்னும் தனித்துவமிக்க தரமான இடத்தை அடைய உங்களின் பணிகளும் தனித்துவம் மிக்கதாக அமையவேண்டும். தொடருங்கள் என வேண்டுகிறோம்.



புதிய அரசு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.
இதன் நன்மை தீமைகளை ஆராய்வதை விட்டு மாற்றம் என்பது தேவை என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டு அது நடந்திருப்பதை வரவேற்கலாம்.
அதிமுக எதிர்பாரா மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதால் சில நன்மைகள் நடந்திருக்கின்றன.

1. பணபலத்தால் மட்டும் எதையும் சாதிக்கலாம் என்பது
சரிந்திருக்கிறது.

2. அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஆடும் ஆட்டம்
நிலையல்ல அது நிலைகுலையச் செய்துவிடும் இருக்கும்
இருப்பையும் இழக்கவைத்து.

3. சாதிவெறிபிடித்து சாதிகளால் கட்சி அமைத்துக்கொண்டு
சாதிக்கலாம் எனபதும் அடியோடு வேரறுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்ந்து நிலைநிறுத்தப்படவேண்டும்.

வேண்டுகோள்கள்

1. புதிய அரசு போன அரசின் குறைகளையும் குற்றங்களையும்
பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்வதே குறிக்கோள்
என்பதைக் கவனத்தில் கொண்டால் மக்கள் நன்மை பெறுவார்
கள்.

2. புதிய அரசின் முதல்வர் குறிப்பிட்டதுபோல் சட்டம் ஒழுங்கு,
மின்வெட்டு, கல்விச்சூழல் இவற்றோடு சாலைகளைப்
பராமரித்தல், வாகனங்களை ஒழுங்குபடுத்தி விபத்துக்களை
கட்டுப்படுத்தல், கைபேசிகளை ஒழுங்குபடுத்துதல், அரசியல்
வாதிகளால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்த்தல்
இவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

3. குறிப்பாக பள்ளிக் கல்வி நிலை ஒழுங்குபடுத்தப்படல் மற்றும்
பணியமைப்புக்களில் தகுதியானவர்கள் அடையாளப்படுத்தப்
பட்டு அவர்களுக்குரிய பணிவாய்ப்பு பணம், சிபாரிசு, சாதிய
ஒதுக்கீடு இவற்றைத் தாண்டி வழங்கப்படல் அமைந்தால்
நல்லதொரு சமுக முன்னேற்றம் அமையும்.

4. நல்ல மருத்துவ வசதி ஏழைமக்களுக்குப் பாரபட்சமில்லாமல்
கிடைத்தல் அவசியம்.

5. மக்கள் நிறைய நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் மிகப்
பெரும் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அவர்கள் எந்தச்
சூழலிலும் ஏமாந்துவிடக்கூடாது.

Thursday, April 21, 2011

மகிழ்ச்சியும் வருத்தமும்

மகிழ்ச்சியும் வருத்தமும்


நிகழ்வு ஒன்று.

வினாயக் சென் வெளியில் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அது நிபந்தனை ஜாமின் எனும்போது வருத்தமாக உள்ளது.

நிகழ்வு இரண்டு

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுளை உறுதிச்செய்திருக்கிறது நீதி. மகிழ்ச்சியானது. நாவரசுவின் குடும்பம் ஒவ்வொரு முறையும் நாவரசு குறித்த தகவல் வெளியாகும்போதும் கூடுதல் துயர் கொள்ளும் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது.

Saturday, April 9, 2011

ஆதரவு..



வணங்குகிறேன்.

ஆதரவுக்கரம் நீட்டுகிறேன்.

உங்களின் முயற்சி வெற்றிபெறும்.சத்தியம் தோற்றபதில்லை.

ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம். நேர்மையான அரசியல் அமைப்பும் உண்மையும் உழைப்பும் பெருகி பாரதம் செழிக்கட்டும்

அன்னா உறசாரே..

வணங்குகிறேன்.

மகிழ்ச்சி பரிமாறல்...



என்னுடைய மகன் க.அ.குகன் தஞ்சை பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழ்கத்தில் பி.டெக். பயோடெக்னாலஜி மூன்றாமாண்டு படித்து வருகிறான். இயல்பிலேயே ஆராய்ச்சி மனம் கொண்டவன். அவனுடைய திட்டமாக ஒரு ஆராய்ச்சியை முடித்துள்ளான். இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு முன்னதாகவே அதுபற்றிய எச்சரிக்கையை கைபேசி வழியாகத் தெரிவித்து மாரடைப்பு வருவதற்கு முன்னதாகவேத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். இதற்கெனக் கைபேசியின் ப்ளூடூத் வழியாகக் கண்டறியும் வகையில் ஒரு பயோசென்சாரை வடிவமைத்திருக்கிறான். இதுகுறித்த தனது ஆராய்ச்சிக் கட்டுரையை சென்னை இந்திய தொழில்நுட்பக்கழகத்திலும் (ஐஐடி) அதனைத் தொடர்ந்து சில கருத்தரங்குகளிலும் சமர்ப்பித்துள்ளமைக்கு சிறந்த ஆய்வு என்பதற்கான பரிசு வழ்ங்கியுள்ளார்கள்.

இதுகுறித்து அவனுடைய நேர்காணல் 7.4.2011 நாளிட்ட எகனாமிக் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. அவனுடைய கண்டுபிடிப்பின் அடிப்படையில் கைபேசி தயாரிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மனித குலத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் அதுதான் வாழ்வ்தின் அடையாளம் என்று சொல்லி மேலும் புற்றுநோய் தடுப்பிற்கும் ஏதாவது சிந்தனை செய் என்று வேண்டுகோள் வைததிருக்கிறேன்.

மேலும் மரபு சார்ந்த இசையிலும் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் உள்ளவன். அதேபோன் நல்ல கவிதைகளை இனங்கண்டு மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்வான். உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் ம்கிழ்ச்சியுடன்.

Monday, March 21, 2011

அப்பா..



அப்பா உங்கள் நினைவு
அடிக்கடி வருகிறது...
ஒவ்வோர் இரவும்...

பேசியாவதிருப்பீர்கள்
வாய்பேசமுடியாதுபோகுமென்று
எதிர்பார்த்திருக்காவிட்டால்.
ஏதேனும் எழுதியாவது
தெரிவித்திருப்பீர்கள் வலதுகை
செயலிழந்துவிடும் என்பது
முன்கூட்டியே தெரிந்திருந்தால்...

உங்களின் பெருந்தன்மை இல்லை..
உங்களின் பொறுமை இல்லை..
உங்களின் பேச்சு இல்லை...
உங்களின் அணுகுமுறை இல்லை.
உங்களின் ஒழுங்கு இல்லை...
உங்களின் நிதானம் இல்லை..
உங்களின் முடிவெடுக்கும் திறன் இல்லை..
உங்களின் வாக்குறுதி சத்தியம் இல்லை..
உங்களின் அமைதி இல்லை..
உங்களின் பணியாற்றும் நேர்த்தி இல்லை...

உங்களைப் போலவே இருக்கிறேன்
என்கிறார்கள்...உங்களின் எதுவும் இல்லாத
என்னைப் பார்த்து...

சட்டென்று கோபப்படுகிறேன்..
எடுத்தெறிந்து பேசுகிறேன்...
முகம் முறிக்கிறேன்...
படபடவென்று அள்ளித் தெளிக்கிறேன்..
கால ஒழுங்கும் கருத்து ஒழுங்கும் இல்லை..
வளவளவென்று பேசி எரிச்சலுர்ட்டுகிறேன்..
எல்லாவற்றிலும் கருத்து சொல்கிறேன்..
புரியாமல் நடந்துகொள்கிறேன் சூழலில்...
சிலசமயம் ரொம்ப ஒட்டுதலாக இருக்கிறேன்..
சிலசமயம் ரொம்ப வெட்டுதலாக இருக்கிறேன்..
பெருந்தன்மையாக நடந்துகொள் என்கிறார்கள்..


என் மகன் தந்தையாகும் சூழலில்
அப்பா உங்களை அடிக்கடி நினைக்கிறேன்..
உங்களைப் போல இருக்கிறேன்
எனும் ஒற்றைச் சொல்லின் பின்னால்
நான் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..

அம்மாவின் குணமும் என்னுடைய குணமும்
ஒன்று என்கிறார்கள்...
அம்மா இன்றுவரை அப்படியேதான்
இருக்கிறாள்..
அதனால்தானோ அப்பா நீங்கள்?

உதவி

உதவி வேண்டும்.

கைபேசி அவசியம்தான். இருப்பினும் எஸ்எம்எஸ் எனப்படும் வசதியால் ஒவ்வொரு கைபேசிக்கும் தகவல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.
இது பிரச்சினையில்லை. BT- என அடையாளமிட்டு வரும் தகவல்கள் நிரம்பவும் கட்டுக்கடங்காத கோபத்தை ஏற்படுத்துகின்றன.

பிடி எனப்படும் அயோக்கியர்களிடமிருந்தும் அவர்கள் அனுப்பும் கேடுகெட்ட செய்திகளிடமிருந்து (அதாவது அதனை கைபேசிக்கு வரமுடியாத அளவுக்கு)தப்பிக்க ஏதாவது வழி உண்டா.

பெண்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். சாட் செய்கிறீர்களா என்பதுபோல செய்தி வருகிறது. இது ஒரு சான்று கேடுகெட்ட தனத்திற்கு. இந்த கேடுகெட்ட மிருகங்களிடமிருந்து (பிடி) காப்பாற்றி உதவுங்கள் வழி ஏதேனும் இருந்தால். பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை நாகரிகம் கருதி.

நீண்ட நாட்கள் பொறுத்திருந்துதான் இந்த கோபமும் ஆங்காரமும்.

Sunday, March 6, 2011

புறக்கணித்தல்


”தேர்தலைப் புறக்கணிப்போம்-எங்கள் குரல் கேட்கப்படும் வரை-
நாங்கள் விரும்பும் மாறுதல் ஏற்படும் வரை-”


இது சுந்தர்ஜியின் வலைப்பக்கத்திலிருந்து எடுத்த உறுதிமொழி.
ஓட்டுப்போடுவது அவரவர் தனிப்பட்ட உரிமை.சுதந்திரம். இதுகுறித்து எதுவும் சொல்ல கூடாது என்றாலும் இது வேண்டுகோள்தான்.

நாம் எல்லோரும் யோசிக்கவேண்டும்.

நம்மை முட்டாளாக நினைக்கிறார்கள்.
எது சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
எது செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
எதுவேண்டுமானாலும் செய்யலாம் இவர்களால் என்ன செய்துவிடமுடியும்? என்று நினைக்கிறார்கள்.
அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.
நாம் எதுவும் செய்யாமல்தான் போய்க்கொண்டிருக்கிறோம்.

பொதுக்கூட்டங்கள்..ஊர்வலங்கள்..மாநாடுகள்...பிறந்தநாள் விழாக்கள்..எனும் பெயரால் அரசின் சொத்து - நமது சொத்து சூறையாடப்படுகிறது.படிக்கிற பிள்ளைகளுக்கு மின்சார வசதி கிடைப்பதில்லை தேர்வு சமயங்களில் மின்சாரத்தடை. இவர்கள் அளவுக்கதிகமான மின்சாரத்தை வீணாக்குகிறார்கள்.

நேர்மையான அரசியல் வேண்டும். நேர்மையான தலைவர்கள் வேண்டும். சாதியின் பெயரால்...வாரிசுகளின் பெயரால் அரசியல் அமையக்கூடாது.

மக்களை நினைக்கின்ற மக்களை வாழ வைக்கின்ற மக்களின் கண்ணீர் துடைக்கப்படுகின்ற மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிற அரசு அமையவேண்டும்.

இலவசங்கள் எனும் பெயரால் வீணடிக்கப்படும் கோடிக்கணக்கான பண விரயத்தை வீட்டிற்கு ஒருவருக்கு வேலை எனும் அடிப்படையில் செலவிட்டால் அது நிரந்தரத் தீர்வாக அமையும்.

எனவே தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும். ஓட்டுப்போடாமல் அமைதியாக இருங்கள். இதுதான் நமது கடமை. அவர்களுக்கு காந்திய வழியில் அகிம்சை வழியில் நிருபிக்கவேண்டும்.

முறையான கல்வியைக் கற்றல்...நேர்மையாகப் பணியாற்றல்.. தகுதியோடு பணியுயர்வு...திறமைகள் மதிக்கப்படல்...பண விரயத்தைத் தடுத்தல்...மக்களின் பிரதிநிதிதான் தாங்கள் என்று உணர வைத்தல்...இவைதான் ஜனநாயக அரசின் அடையாளங்கள். அதை அடையும்வரை இவர்களுக்கு ஓட்டுப்போடுவது கூடாது.

படிப்பறிவு என்பது நல்ல சிந்தனையை வளர்ப்பதற்குத்தான். சிந்திப்போம். புறக்கணித்தல் என்பதும் புல்லர்களைச் சிந்திக்க வைப்பதுதான்.

Wednesday, March 2, 2011

அல்லது


ஒரு பயணம்
ஒரு துயரம்
ஒரு அலுப்பு
ஒரு ஆர்வம்
ஒரு முனைப்பு
ஒரு கோபம்
ஒரு இயலாமை
ஒரு ஆதங்கம்
ஒரு அபிலாஷை
ஒரு அதிகாரம்
ஒரு கனவு
ஒரு கலைப்பு
ஒரு திட்டமிடல்
ஒரு உறக்கம்
ஒரு முகந்தெரியாதவனின் இடர்
ஒரு பிச்சைக்காரியின் கவலை
ஒரு சக பயணியின் எரிச்சல்
ஒரு நண்பனின் மரணச் செய்தி
ஒரு காய்கறிகாரியின் அலைச்சல்
ஒரு காமம் கிடைக்காத அவள்
ஒரு உறவின் நீக்கம்
ஒரு டீத்தாத்தாவின் எப்எம் ரேடியோ


ஒரு இளஞ்சூடான சூரியனின் வருகைவெப்பம்
ஒரு ஏக்கமுடன் பிரியும் பனியுடன் இரவு
ஒரு பறவையின் காலை வணக்கக்குரல்
ஒரு கிராசிங்கில் ஓடிக்கரையும் ரயில்,


ஏதோவொரு சந்திப்பில்
கிடைக்கும் ஒரு குழந்தையின்
அசையும் புன்னகை

அல்லது

மகளின் தொலைபேசி
அழைப்பு...

எல்லாம் இணைக்கும்
எல்லாம் மறக்கும்
எல்லாம் மணக்கும்......

Thursday, January 20, 2011

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

.

இன்று தைப்பூசம் முருகப் பெருமானை நினைந்து வழிபடும் சிறப்புத் திருநாள் இது.இந்நாளில் முருகப்பெருமானைத் தனது குருவாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த அருளாளர் வடலுர்ர் இராமலிங்க சுவாமிகள். அருளாளர் பற்றிய சிறு அறிமுகமே இப்பதிவு.

தமிழ் மண்புலம் செய்த தவப்பயனால் சரியாக நுர்ற்றைம்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னே தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கருகில் உள்ள மருதுர்ரில் கருணீக மரபில் இராமையா பிள்ளைக்கும் சின்னம்மையார்க்கும் மகனாக அவதரித்தவர். சகோதரர் சபாபதிப் பிள்ளையால் வளர்க்கப்பெற்றவர். செந்தமிழ்க் கடவுளாகிய முருகபெருமானது திருவருட்காட்சி இளமையிலேயே கிடைத்தது. எனவே முருகனைத் தனது குருவாகக் கொண்டார். உலகெங்கும் நீக்கமற எல்லாவற்றிலும் இறைவன் சுடர்விட்டு விளங்கும் ஜோதியாக இருக்கிறார் என்று உணர்த்தியவர்.

சாதி மத வேறுபாடு இல்லாமல் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டியவர் வள்ளலார். சமயத்தாலும் சாதியாலும் விளையும் தீங்குகளைக் களைய சீர்திருத்தம் கண்டவர்.

ஏழைகள் தொடங்கி எல்லா மக்களும் அடையும் இன்னல்களைப் போக்குதற்கென திருவுளங்கொண்டு உயர்ந்த நோக்குடன் சமரச சுத்த சன்மார்க்க நெறியை வகுத்தார். இந்நெறிக்கிணங்க இவற்றைப் பரப்ப வடலுர்ரில் சன்மார்க்க சங்கம். சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை எனும் மூன்று அருள் நிலையங்களை நிறுவி தொண்டுசெய்த பெரும் ஞானி.

தனது பரந்துபட்ட இறை உள்ளத்தால் அருளிச் செய்தவையே திருவருட்பா எனும் அரிய பொக்கிஷம். ஆறுதிருமுறைகளாக 5818 திருப்பாடல்களாக அருளிச் சென்றிருக்கிறார். பல்வேறு சமயங்களில் வள்ளலாரால் கடிதமாகவும் சிறப்புப் பாயிரமாகவும் தனிப்பாடல்களாகவும் எழுதப்பெற்றவை இப் பாடல்கள்.

1979 ஆம் ஆண்டு தொடங்கி 1989 வரையில் இத்தொகுதிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதற்கு அருமையான உரையை எழுதியவர் உரைவேந்தர் ஔவை சு.துரைசாமிப் பிள்ளையவர்கள்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சாகாக் கல்வியையும் வலியுறுத்திய அருளாளர் வள்ளலார். பசி, பிணி, பகை இவற்றை நீக்கவே பாடுபட்டார். அதனால்தான் வடலுர்ரில் வயிறு என்றழைக்கப்படும் சத்திய தருமச் சாலையையும் சிரசு என்றழைக்கப்படும் சத்திய ஞான சபையையும் நிறுவித் தொண்டாற்றினார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடினேன் என்று உயிரிரக்கம் காட்டியவர். இன்று வடலுர்ர் ஒளிவெள்ளம் கொண்டிருக்கும். ஒளிப்பிழம்பு அருளாளரை நினைந்து போற்றுவோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் இவரைப் பற்றிய சுவையான தகவல்களுடன் பகிர்வேன். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.

Monday, January 17, 2011

வழிகாட்டிகள்....



திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பார்கள். தெய்வ நம்பிக்கை உள்ளவருக்கு இது பொருந்தும். கடவுள் நம்பாதவர்களுக்கு அவர்கள் உயர்வாக நினைக்கும் வயது முதிர்ந்தவர்கள் வழிகாட்டிகளாக இருப்பார்கள். ஏதேனும் ஓர் உயர்ந்த பண்போ அல்லது பல உயர்ந்த பண்புகளோ இருக்கும். அன்பு காட்டுவார்கள் பிரதிபலன் பாராமல். உதவி செய்வார்கள் எதிர்பார்ப்பு இல்லாமல். எப்போதும் நல்ல செயல்களை மேற்கொண்டு நல்ல செய்திகளையே பேசுவார்கள். அவர்கள் வழிகாட்டுதலால் பயன்பெற்றவர்கள் நன்றி தெரிவிக்கும்போது மகிழ்ச்சி கொள்வார்கள்.

புறாவுக்காக தசையை அரிந்து அஃறிணை உயிர்க்கு வழிகாட்டியவன் சிபி மன்னன்.
முல்லைக்கொடியை வாழ வைக்க தேரை ஈந்தவன் பாரி.
குளிரில் நடுங்கிய மயிலுக்காகப் போர்வை தந்தவன் பேகன்.
முரசுக் கட்டிலில் படுத்த புலவருக்காய் கவரி வீசினான் மன்னன் ஒருவன்.
தன்னிடம் வந்த புலவன் வெறுங்கையோடு திரும்பக்கூடாது என்பதற்காகத் தலையைத் தர முன்வந்தவன் குமணன்.
இதெல்லாம் தெரியாத செய்திகள் இல்லை. இவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலைப்பாட்டிற்கு வழிகாட்டிகள்.
சிலர் செயலில் வழிகாட்டினார்கள்.
சிலர் அவ்வாறே வாழ்ந்து வழிகாட்டினார்கள்.
சிலர் பாடியும் எழுதியும் வழிகாட்டினார்கள்.
ஆனாலும் தன்னலம் எண்ணாது கைம்மாறு கருதாது வழிகாட்டினார்கள்.
தன்னைக் காட்டிக்கொடுத்தவனை மன்னித்து வழிகாட்டினார் யேசு பெருமான்.
நபிகள் மன்னிக்கச் சொன்னார்.
புத்தர் மன்னிக்கச் சொன்னார்.
காந்தியடிகள் மன்னிக்கச் சொன்னார்.
இவர்கள் மிக உயர்ந்தவர்கள் அடுத்தவருக்கு வழிகாட்டிகளாக இருந்து வழிகாட்டியமையால்.
வழிவழியாகத் தொடர்வது இது.
ஆகவேதான் தந்தையும் தாயும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வழிகாட்டுகிறார்கள்.
எடுத்துக்கொள்பவர்கள் ஏற்றம் பெறுகிறார்கள்.
தடுத்துக்கொள்பவர்கள் தடுமாறிப் பயணிக்கிறார்கள் கடைசிவரை.
வழிகாட்டல் என்பது தந்தையைப் போல நல்வழிக்குத் திருப்பி கெட்டதைத் தீண்டாதே என்று வலியுறுத்தி..அதற்காக இழக்கவேண்டுமானால் தன்னை இழந்து..வழிகாட்டுகிறார்கள்.
தாய் தன் அன்பாலும் தன் தியாகத்தாலும் வழிகாட்டுகிறாள்.
தொல்காப்பியர் தொல்காப்பியம் எனும் சிறந்த இலக்கணத்தைப் படைத்தார். அது மிகச் சிறந்த வழிகாட்டலாக இருந்தது. அதனைப் பின்பற்றி பல உரையாசிரியர்கள் அதற்கு உரை எழுதினார்கள். இன்றுவரை அழியாது இருக்கிறது.
இலக்கியங்களைப் படைத்தார்கள்.
அவர்கள் வழிகாட்டிய பாதையில் ஏராளமான பல்வகைப் பொருண்மையிலான இலக்கியங்கள் படைக்கப்பட்டன.
இன்று வழிகாட்டல் என்பது கேலிக்குரியதாகிவிட்டது.
வழிகாட்டும் தகுதியை இழந்தவர்கள் வழிகாட்டிகளாகக் கொண்டாடப்படுகிறார்கள்.
அவர்கள் தவறான ஒரு தலைமுறையை வளர்த்தெடுக்கிறார்கள். இது கல்வி சார்ந்த நிலையில் புற்றீசல் போல பெருகிவருகிறது.
எங்கும் நியாயமும் நேர்மையும் மனிதநேயமும் இல்லை.
எல்லாமும் நேர்மையற்ற வழியில் தீர்மாணிக்கப்படுகிறது. அதுவே சரியென்றும் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது.
தலைமைப் பதவிக்குத் தகுதியில்லாதவன் அப்பதவியில் ஏறிக்கொண்டு தவறான வழியில் வழிகாட்டிக்கொண்டிருக்கிறான்.
எதுவும் தெரியாதவர்கள் எல்லாம் தெரியும் என்கிற முனைப்போடு செயல்படுகிறார்கள்.
தகுதியின்மையும் சாதியும் அவர்களுக்கு வழிகாட்டலாக இருக்கின்றன.
தகுதியின்மையே தகுதி என்கிற நிலைப்பாட்டில் பெருமிதம் கொள்கிறார்கள்.
வயதும் ஆணவமும் ஏறியதைத் தவிர அவர்கள் வேறு பேறு பெறவில்லை.
எதையும் படிக்காமல் எல்லாவற்றையும் விமர்சித்து வழிகாட்டுகிறார்கள்.
எதையும் கேட்காமல் எல்லாவற்றையும் தவறென்று மறுத்து வழிகாட்டுகிறார்கள்.
ஒரு சிறந்த தலைமைக்கு அவனுடைய பணியாளர்கள் விழா எடுக்கிறார்கள். அவன் சிறந்த வழிகாட்டலாக இருந்திருக்கிறான் அனைவரின் வாழ்விலும் என்பதை இது காட்டுகிறது.
வழிகாட்டல் இல்லாத வாழ்க்கை வரம்புகள் இல்லாத நதியைப் போன்றது. வீணாகித்தான் போகும்.
புத்தகங்கள் நல்ல வழிகாட்டல்கள்.
வாசிக்கிற பழக்கத்தையே தொலைத்தவர்கள் மற்றவர்களுக்குப் போதிக்கிற கொடுமை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
எழுதுகிற பழக்கத்தையே எண்ணிப் பார்க்காதவர்கள் ஏராளமான புத்தகங்களுக்கு ஆசிரியர்களாகவும் அதற்கான விருதுகளையும் பெற்று வழிகாட்டலையே கேள்விக்குறியாகவும் கேலிக்குரியதாகவும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிற பெற்றோர்கள் அருகிவிட்டார்கள்.
அவர்களுக்குத் தொலைக்காட்சிதான் வழிகாட்டல்.
நல்ல நண்பர்கள் அருகிவிட்டார்கள் வழிகாட்டல் இன்றி.
சகோத உறவுகள் சம்பிரதாயமாகவும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்பவும் என சிதைந்துவிட்டது வழிகாட்டல் இன்றி.
ஆசிரியர் மாணவர் உறவுகள் அடியோடு வேரறுந்துவிட்டது.
மதிக்கிற இடத்தில் மாணவர்களை நடத்தவில்லை ஆசிரியர்கள். வழிகாட்டவில்லை.
வணங்குகிற இடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் நடந்துகொள்ளவில்லை. வழிகாட்டவில்லை.
எல்லாவற்றிலும் எப்போதும் விதிவிலக்குகள் உண்டு. ஆனால் ஒருபோதும் விதிவிலக்குகள் விதிகளாகாது வழிகாட்டலுக்கு.
வழிகாட்டலுக்கு ஏங்கத்தான் வேண்டியிருக்கு.
வளர்கின்ற உலகையெண்ணி வளர்கிறது பேரச்சம்.

Tuesday, January 4, 2011

எண்ணங்கள்


நான்காக மடிக்கப்பட்டு
சாலையின் ஓரமாய் கிடந்தது
அந்த வெள்ளைத்தாள்...

காற்று அதனை எழுப்பிக்
கொண்டிருந்தது..

எடுத்துப் பார்க்கையில்
எதுவும் எழுதப்படாமல்
இருந்தது..

நினைவில் பொங்கின
எண்ணங்கள்...

உனது அன்பை எழுதுவேன்
என்றாள்...

உனது பரிவை எழுதுவேன்...
என்றது குழந்தை...

உனது அவமானத்தை எழுதுவேன்
என்றது உறவு...

உனது பலவீனத்தை எழுதுவேன்
என்றன சுற்றம்...

உனது போராட்டத்தை எழுதுவேன்
என்றது காலம்...

உனது சகிப்புத்தன்மையை எழுதுவேன்
என்றது சந்தர்ப்பம்...

உனது பற்றுதலை எழுதுவேன்
என்றது நட்பு...

உனது வாழ்வியலை எழுதுவேன்
என்றது கவிதை...

எண்ணங்கள் இறைந்தோடின
காற்றுவெளியெங்கும்...

கடவுள் வந்தார்
நீயென்ன எழுதுவாய் என்றார்
மௌனத்தை எழுதுவேன் என்றபடி
தாளை அவரிடம் நீட்டிவிட்டு
இதிலென்ன நீங்கள் எழுதுவீர்கள்
என்றேன்...

கடவுள் சொன்னார்
நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன்
அவரவர்க்கான எண்ணத்தை
என்றபடி மறைய,
இப்போது தாள் என்னிடமே....

Monday, January 3, 2011

அழல்...


வானம் இளமஞ்சளைத் தங்கத்தில் பூசிக்கொண்டு கிடந்தது. நாள்முழுக்க இயங்கிய களைப்பில் தனது கோடானுக்கோடி கதிர் கரங்களைச் சுருக்கிக்கொண்டு அவதாரத்தை நிறைவு செய்த கடவுளைப்போல சூரியன் வானத்தில் தங்கப் பாதையில் சறுக்கிக்கொண்டிருந்தது அதன்போக்கில். லேசான இருள் நத்தைபோல ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. கூடு திரும்பிக்கொண்டிருந்த எல்லாப் பறவைகளும் நிறபேதமின்றி கருப்புப் பூசிக்கிடந்தன. அடர் கருப்பில் சிறகுகளை விரித்திருந்தன. அவற்றின் மனமெங்கும் அவற்றின் கூடுகளில் காத்திருக்கும் குஞ்சுகளின் நினைவைத் தேக்கியிருந்தன.

சந்தனமுல்லையின் மலர்ந்த மணம் காற்றில் அலையடித்துக் கொண்டிருந்தது. யார் வீட்டிலோ விளகேற்றி பத்தி ஏற்றும் வாசமும் காற்றில் மிதந்துகிடந்தது.

அன்று வெள்ளிக்கிழமை.

அயிகிரி நந்தினி..தெளிவாக ஒரு சின்ன பெண்குழந்தையின் குரலில் பக்கத்து வீட்டிலிருந்து கேட்டது. சிறிய வயதில் சிலருக்கு குரல் தெளிவு இறைவனின் பரிசன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்.

கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதிலேதய்ய என்று வாணி ஜெயராம் யாரிடமோ கேட்டுக் கிறங்கிக்கொண்டிருந்தார்.

சௌம்யா மாலையில் ஒரு குளியல் முடித்து அலங்காரம் செய்திருந்தாள். வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் அவள் இரண்டுமுறை குளிப்பது என்பதை தெய்வ ஆணையாகக் கொண்டிருந்தாள்.

பெரிய நெற்றி என்றாலும் அதில் ஏற்றப்பட்டிருக்கும் திருநீறும் குங்குமமும் சௌமியாவின் அழகைத் தாண்டி ஒரு கூடுதல் அழகைத் தந்திருந்தது. நண்டுகள் ஊர்ந்த கடல் மணற்பரப்பைப்போல அவளது கருங்கூந்தல் அழகேறியிருந்தது. துருதுருவெனப் பரபரக்கும் விழிகள்.

காபி சாப்படுறியா...சௌம்யா அம்மா கேட்டாள்.

இல்லைம்மா. சாமி கும்பிட்டுட்டு வந்துடறேன்.

ஆறிப்போயிடும் சூடா சாப்பிட்டாதான் காபி நல்லாயிருக்கும்.

அப்படியே சிம்ல வை. ஆறிட்ட நான வந்து சூடுபண்ணி குடிச்சுக்கறேன்.

சாமியறைக்குள் நுழைந்தாள்.

எதிரே சுவற்றில் ஆனந்த விநாயகர். அப்புறம் வள்ளி தெய்வானையுடன் முருகன். மேலே திருமலை வேங்கடவன்..மதுரை மீனாட்சி..புன்னைநல்லுர்ர் மாரியம்மன்..

எல்லாவற்றிற்கும் முல்லைப்பூக்களில் இரண்டிரண்டுபோட்டாள். விளக்கேற்றினாள். வெள்ளிவிளக்கில் நெய் ஊற்றி சுடரை சிறிதாக வைத்தாள். நெடுநேரம் நின்று எரியும். துர்வக்கர்லில் நெருப்பெடுத்து சாம்பிராணி போட்டு வீடுமுழுக்க வலம் வந்தாள். வீடுமுழுக்க சாம்பிராணி மணம் காற்றில் சுகந்த கவிதையெழுத ஆரம்பித்தது.

சூடமேற்றிக் காண்பித்துவிட்டு திருநீறும் குங்குமமும் இட்டுக்கொண்டு வெளியே வந்தாள். வந்து நாற்காலியில் அமர்ந்தாள்.

மனம் அமைதியாகக் கிடந்தது. மனமெங்கும் மகிழ்ச்சியொன்று துளிர்க்க ஆரம்பித்தது. இப்போது அவன் நினைவு வந்தது.

அவன் சங்கரன். பாலக்காட்டில் இருக்கிறான். இந்த நேரம் என்ன செய்துகொண்டிருப்பான். தன்னைப்போலவே அவனும் கடவுள் நம்பிக்கை உடையவன் என்று சொன்னார்கள். ஒரு கோயில் விடமாட்டான் என்றும் சொன்னார்கள். தன்னைப்போலவே அவனும் தன்னை நினைத்துக் கொண்டிருப்பானோ என்று நினைத்துப் பார்த்தாள். அந்த நினைவே இனித்தது.

காபி ஆறிடும்மா சௌமியா...போய் குடிம்மா என்றாள் அம்மா.

எழுந்துபோனாள். காபி லேசான சூட்டில் இருந்தது. இந்த இதம் போதும். மெல்ல உதட்டில் வைத்து அருந்தினாள். மறுபடியும் அவனே வந்து சிரித்துப்போனான்.

அவனை முதன்முதலாகச் சந்தித்த தருணங்களை நினைத்துப் பார்த்தாள்.

சார்..சார்.. என்று வாசலில் குரல் கேட்டது. ரங்கராஜன் எழுந்துபோய் பார்த்தார். நடுத்தர வயது தம்பதிகள் நின்றுகொண்டிருந்தார்கள்.

வாங்க..யார் வேணும்?
ரங்கராஜன்னு...
ஆமா..நான்தான் உள்ளே வாங்க.. உள்ளே போய் அமர்ந்தார்கள்.
என்ன செய்தி?
என்னோட பேரு தியாகராஜன். ரிசர்வ் பேங்க்ல வேலை பார்க்கிறேன். இது என்னோட மனைவி நர்மதா. ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. எனக்கு ஒரே பையன் பேரு சங்கரன். பாலக்காட்டில் எஞ்சினியரா இருக்கான். அவனுக்குக் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணப்போ உங்க பொண்ணு பத்தி சொன்னாங்க..அதான் பேசிட்டுப்போகலாம்னு வந்தோம்.
எந்தப் பீடிகையும் இல்லாமல் நேரடியாகப் பேசியது ரங்கராஜனுக்குப் பிடித்துப்போயிற்று..
சரி ஜாகத்தைக் கொடுங்க. பார்ப்போம். பொருத்தமிருந்தா பார்க்கலாம். சொன்னதும் சட்டென்று சங்கரனின் அப்பா ஜாகத்தை எடுத்துக்
கொடுத்தார். ரங்கராஜனும் சௌமியாவின் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தார்.
ஜாதகம் பார்த்திட்டு பேசறோம் என்றார்.
இருங்க காபி சாப்பிட்டுட்டு போகலாம்.
எனக்கு டீ கொடுங்க. இவள்தான் காபி பைத்தியம்.
சங்கரன் அம்மா கேட்டாள்... நான் பொண்ணப் பார்க்கலாமா?
தாராளமா என்றபடி ரங்கராஜன் சௌமியாவைக் கூப்பிட்டார்.
சௌமியா வந்தாள்.
வாம்மா உக்காரு. என்றார்கள். உட்கார்ந்தாள்.
அவளிடம் கொஞ்சநேரம் பேசிவிட்டு உடன் எழுந்து கிளம்பினார்கள்.
இரண்டுபேரும் பார்த்ததில் ஜாதகம் பொருந்தியது.
மனம் நிம்மதியானது.
பரஸ்பரம் பேசிக்கொண்டார்கள்.
பெண் பார்க்கும் படலம் நடந்தது. அப்போதுதான் சங்கரன் வந்தான். வெகு இயல்பாக இருந்தான். ஒரு பெண் பார்க்க வந்தவன்போல் இல்லை. விருந்தாளி வந்திருப்பவன் போல பேசினான். கேட்ட கேள்விக்கெல்லாம் சாதாரணமாகப் பதில் சொன்னான்.
எல்லோருக்கும் பிடித்துபோயிற்று சங்கரனை சௌமியா உட்பட.
ஒருமுறை யாருமறியாமல் சங்கரனும் சௌமியாவும் பார்த்துக்கொண்டார்கள். அதில் ஆயிரம் நம்பிக்கைகள் மலர்ந்து மணந்தன.
சௌமியா ஒரு புன்னகை வீசினாள்.
சங்கரன் அதை ஏந்திக்கொண்டான்.
போகும்போது அவளையும் அழைத்து போயிட்டு வரேன் என்றான். அது சௌமியாவிற்குப் பிடித்திருந்தது.
அதற்குப்பின் இருவருக்கும் செலவு வேண்டாம். திருமணத்திற்கு முந்தின தினம் நிச்சயம் செய்துகொள்ளலாம் என்று மன உறுதி எடுத்துக்கொண்டார்கள்.
அதற்குப்பின் ஓரிரு முறை தொலைபேசியில் பேசினான். முதலில் சௌமியா அப்பாவிடம் பேசிவிட்டு சௌமியாவிடம் பேசலாமா என்று கேட்டுவிட்டுப் பேசினான். இதுவும் ரங்கராஜனுக்கு நிரம்பவும் பிடித்துப்போயிற்று.
சௌமியாவிடம் மனம்விட்டுப்பேசினான். முதலில் தனது பலவீனங்களைப் பேசினான். அப்புறம் தன்னுடைய பலத்தைப் பேசினான். சௌமியா ஆச்சர்யப்பட்டாள். ஒரு யதார்த்தமானவன் நல்லவன் தனக்குக் கணவன் என்றபோது அவளுக்கு உண்மையில் பெருமையாக இருந்தது. இதுதான் உண்மையில் புண்ணியம் என்று நினைத்துக்கொண்டாள். தான் கடவுளிடம் உண்மையாக நடந்துகொண்டதற்குக் கிடைத்த பரிசு என்றும் கடவுளுக்கு நன்றி சொன்னாள்.
அவனன்றி இனியொரு வாழ்வில்லை என்று நினைத்துக்கொண்டாள். திருமண தேதி குறித்தார்கள். இன்னும் ஐந்து மாதங்கள் இருந்தன. தினமும் ஒவ்வொரு விவரத்தையும் ரங்கராஜனும் தியாகராஜனும் கூடிகூடிப்பேசி முடிவெடுத்து செய்தார்கள்.
ஊரே சற்று பொறாமை கொண்டது. பரஸ்பரம் புரிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கை கத்தி முனையிலிருந்தாலும் கரும்பு முனையிலிருந்தாலும் வாழ்தல் சுலபமானதுதான்.
நினைவு கலைந்தாள் சௌமியா.
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்..நல்ல நாளில்..கண்ணன் மணிதோளில் பூமாலை நான் சூடுவேன்..பாமாலை நான் பாடுவேன்.. என்று வாணிஜெயராம் பாடியது இவளுக்காகவே என்றாற்போலிருந்தது. மனமெங்கும் சந்தோஷத் தீ பற்றியெரிந்தது..
அப்போதுதான் வாசலில் இருளைப் பிரித்து ஒரு குரல் ஒலித்தது.
ரங்கராஜன் எழுந்துபோனார்.
கொஞ்சநேரம் பேச்சுக்குரல்கள் கேட்டன.
அய்யய்யோ என்று ரங்கராஜன் அலறிக்கொண்டே கீழே சாய்ந்தார். வாசலுக்கு சௌமியா ஓடினாள். அவள் அம்மாவும் ஓடினாள்.

அப்பா என்னாச்சுப்பா...சௌமியா பதறினாள்.
என்னங்க என்னாச்சு சௌமியா அம்மா பதறினாள்.
அதற்குள் தெரு கூடி நின்றது.
செய்திசொன்னவன் இருளோடு இருளாய் திரும்பிப்போனான்.
செய்தி இதுதான். சங்கரன் இறந்துபோய்விட்டான். பாலக் காட்டில் சாலை விபத்து. சங்கரன் அப்பாதான் செய்தியனுப்பிவிட்டு பாலக்காடு விரைந்திருக்கிறார்கள்.
சௌமியாவிற்கு கண்கள் இருட்டின. மனமெங்கும் சற்று முன் எரிந்த சந்தோஷத்தீ அடர்துக்கநெருப்பை இதயத்தின்மீது கொட்டியது. மூச்சு திணறினாள். அப்படியே சரிந்தாள். ஓடிப்போய் துர்க்கினார்கள்.

வீடே மயானமாகிப்போனது.
யார் வைத்த கொள்ளி இது?
வீடே பற்றி எரிகிறது. கடவுள் இத்தனை தண்டனை கொடுப்பவரா? இத்தனை நாள் வேண்டுதலும் வீணா? அது பொய்யா?
ஏன் இத்தனை கொடூரம் என் வாழ்க்கையின்மீது கடவுளுக்கு?

காத்த ஒழுக்கமும் நேசித்த கடவுளர்களும் கடைப்பிடித்த விரதங்களும் காற்றில் கற்பூரம் எரிந்து கரைவதைப்போல பயனற்றுப் போய்விட்டது.
அவனையன்றி இனியொரு வாழ்க்கை இல்லையென்று பெருமை கொண்டது இனி வாழ்கையே இல்லையென்றா பேரிடி விழுவது..
அவனன்றி இனி வாழ்தல் இயலாது.
அவனன்றி வேறு துணை மனம் விரும்பாது.
என்ன நினைத்திருப்பான் கடைசி நிமிடத்தில். இவளை நினைத்தோம் இறப்பைத் தழுவிவிட்டோமென்றா? இவளை விட்டுப் பிரிகிறோமென்று சில கண்ணீர்த்துளிகளாவது சிந்தியிருப்பானா? உயிர் பிரியும் யாருமில்லாமல் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? என்ன துடிதுடித்திருப்பான். அடக்கடவுளே இதுஎன்ன கொடுமை எல்லாமிருந்தும் யாருமற்ற அனாதைபோல நடுச்சாலையில் உயிர்விடுவது..இது எந்தப் பிறவியின் சாபம்? யார் விட்ட சாபம்?
பேச்சற்றுப்போனாள். மனம் புலம்பி துடித்துக்கொண்டிருந்தது.
ரங்கராஜன் சௌமியாவைக் கட்டிக்கொண்டு அழுதார். சௌமியாவும் அப்பாவின் நெஞ்சில் சொல்லாத துன்பங்களையெல்லாம் மௌனத்துடிப்பில் சொல்லி துடித்தாள். தன்னைத் தேற்றிக்கொண்டு பாலக்காடு கிளம்பினார்.
சௌமியா அம்மா துடித்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு சாமியறையில் அழுதாள்.

அட பாவி தெய்வங்களா..உங்க கண்ணு அவிஞ்சுப்போச்சா? இப்படிப் பண்ணிப்புட்டிங்களே..தெய்வங்கதானா நீங்க? உங்களுக்கு நல்ல கதியே வராது என்று கடவுளர்களுக்கு சாபங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

பனி பெய்ய ஆரம்பித்திருந்தது. இரவும் அடர்த்தியாக இருந்தது. இனி தனது வாழ்க்கை முழுக்க அந்த இருள் ஆக்கிரமித்துக்கொண்டதுபோல உணர்ந்தாள். சங்கரன் முதன்முதலாகப் பார்த்த பார்வையில் இருந்த நம்பிக்கை அவளுள் மரமாகியிருந்தது. அவன் இல்லாமல் இன்னொரு வாழ்க்கையை அவள் விரும்பவேயில்லை. அவனோடு இத்தனைகாலம் வாழ்ந்ததே போதும் என்று நினைப்பு வந்தது. தெளிவான முடிவுக்கு வந்தாள். வாசலில் நிழலாடியது. திரும்பிப் பார்த்தாள். அம்மா அருகே வந்தாள். சௌமியாவைக் கட்டிக்கொண்டு அழுதாள். சௌமியாவிற்குக் கண்ணீர் வரவில்லை.
இரவு நெடுநேரம் விழித்திருந்தாள் சௌமியா.
மனம் முழுக்க அவனே நிறைத்துக் கிடந்தான். அடிக்கடி வந்து சிரித்துக்கொண்டேயிருந்தான். ஏண்டா இப்படி விட்டுவிட்டுப் போனாய் என்று கேட்டாள்..போடி என்று செல்லமாய் பேசி சிரித்துவிட்டுப்போனான்.
இன்னொரு வாழ்க்கையை யோசிக்கவே அருவருப்பாக இருந்தது. அதனை எப்படி வாழ்க்கையாக எடுத்துக்கொண்டு வாழ முடியும்? நிம்மதியும் மகிழ்ச்சியும் கனவுகளும் தொலைந்த மனதோடு அந்த வாழ்க்கை எப்படி வாழ்க்கையாக இருக்கும்?
எழுந்து கதவைத் திறந்துகொண்டு உறாலுக்குள் வந்தாள். அம்மாவின் உறக்கவொலி கேட்டது. இப்போதுதான் உறங்கத் தொடங்கியிருக்கவேண்டும். மெல்ல அடுப்படிக்குப் போனாள். அங்கே ஆயில் கேன் கிடந்தது எடுத்துக்கொண்டு தன்னறைக்குத் திரும்பினாள். உள்ளே வந்து அதை வைத்துவிட்டு பாத்ரூம் போய்விட்டு வந்தாள். கைகால் முகம் கழுவி ஒழுங்கு செய்துகொண்டாள். சாமியறைக்குள் போய் அந்தப் போட்டோக்களின் முன் நின்றாள். உங்களுக்குத் திருப்திதானா? என்று ஒருமுறை வாய்திறந்து கேட்டாள். யாரும் பேசவில்லை அவள் கேள்விக்கு மௌனமாக நின்றார்கள் குற்றவாளிகளைப்போல. திரும்பி தன் அறைக்கு வந்தாள். கதவை உட்புறம் தாழிட்டாள். சன்னல் கதவுகளையும் அடைத்து கொக்கிகளைப் போட்டாள்.
தரையில் ஆசனம்போட்டு உட்கார்ந்துகொண்டு அந்த மண்ணெண்ணெய் கேனை தலையில் கவிழ்த்து உடல்முழுக்க ஊற்றிக்கொண்டு நன்றாக நனைத்துக்கொண்டாள். மெல்ல தீக்குச்சி கிழித்து கால் பகுதியில் வைக்கக் காத்திருந்தது குபீரென்று தீ தாவியது அவள் உடலெங்கும். வாயை மூடி உறுதியாக இருந்தாள். அவளிடமிருந்து ஒரு சிறு கேவலும் வரவில்லை. போடி என்று சங்கரன் சிரித்துவிட்டுபோனான்.
ஒரு பாம்பு ஊர்வதைப்போல அந்த அறையெங்கும் ஒரு அழல் பரவியது.