Sunday, October 30, 2011

பொய்யாமொழி





பொய்யாமொழி என்பது திருக்குறளைக் குறிக்கும். திருவ்ள்ளுவருக்குப் பொய்யாமொழியார் என்ற பெயரும் உண்டு.

மனித வர்ழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வள்ளுவர் நினைக்க வைக்கிறார். அவருடைய வார்த்தைகள் அதற்குள் அடங்கியிருக்கும் சொற்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு சொல்கூட வீணான சொல் இல்லை.

மனிதன் மகிழ்ச்சியுறும்போது
மனிதன் காயமுறும்போது
மனிதன் ஆதங்கப்படும்போது
மனிதன் கோபப்படும்போது
மனிதன் பொறுமை கடைப்பிடிக்கும்போது
மனிதன் நிதானிக்கும்போது

வள்ளுவரும் வள்ளுவமும் தேவைப்படவே செய்கிறது.

சான்றுக்கு இரு வரிகள்.

1. அவரவர் எச்சத்தாற் காணப்படும்.
2. பணியுமாம் என்றும் பெருமை.

தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர்
எச்சத்தால் காணப் படும் (114)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து...(978)


இன்றைக்கு ஒரு உறவினர் இறந்துபோன நிகழ்வுக்கு செல்லவேண்டியிருந்தது. அருமையான மனிதர் என்று எல்லோரும் சொன்னார்கள். ஒரு மனிதன் இறந்துவிட்டால் சொல்லவேண்டிய பொதுவான வார்த்தைகளாக இல்லை. உண்மையில் நல்ல மனிதனாகவே இருந்து இறந்துபோனார். ஆனாலும் அவரின் இறப்பிற்கு வழிகாட்டிய காரணங்களில் முதன்மையானது திருமணத்திற்கு முன்தினம்வரை அவரது மகள் தனது காதலைப் பற்றிக் கூறாமல் மறைத்து அன்று இரவு விருப்பமான காதலனுடன் கிளம்பிப்போனது. அன்றைக்கு அவர் கூனிக்குறுகி அவர் சந்தித்த அவமானங்களும் காயங்களும் சொற்களில் எழுத முடியாதவை. அவரின் எச்சத்தால் (மகளால்) உண்டானது அது.

இன்னொன்று

ஒருவர் எங்கு வந்தாலும் எல்லோருக்கும் அறிவுரை மழை பொழிவார். அவரின் மகன்களுக்கு இன்றுவரை அவரின் அறிவுரை எந்தப் பலனையும் தரவில்லை. வேலையற்றுத் திரிகிறார்கள்.

எச்சம் என்பது எஞ்சி நிற்பது. வாழுகிற காலத்தில் ஒரு மனிதன் உண்மையோடு நன்றியோடும் நடுவுநிலைமையோடும் ஒழுக்கமோடும் இருக்கையில் அதுதான் அவனுடைய மறைவுக்குப்பின் அவனுடைய சந்ததிகளால் (எச்சத்தால்) அடையாளப்படுத்தப்படும்.

பிள்ளைகள் பெறுவது மட்டுமல்ல...அவர்கள் நல்ல பிள்ளைகளாகவும் வளரவேண்டும்...வளர்க்கவேண்டும்... நல்ல என்பதன் அடையாளம் படிப்பு மட்டுமல்ல.. உறவுகளைப் பேணும் தன்மையும்கூட... அன்றைக்கு கூட்டுக்குடும்ப வாழ்க்கை இருந்தது. அண்ணன் தம்பி பிள்ளைகள் யாரும் பேதமற்று எல்லோரும் ஒரே பிள்ளைகளாக வள்ர்ந்தர்ர்கள். உண்மை வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இப்போது திருமணம் ஆனவுடன ஆணின் உறவுகள் அறுக்கப்படுகின்றன. மனைவியின் உறவுகள்தான் ஒட்டப்படுகின்றன. கணவனின் உறவுகள் ஒழுக்கமாக இருந்தாலும் அது உறவுகள் இல்லை. மனைவியின் உறவுகள் ஒழுக்கக்கேடாகவும்... குடிகாரர்களாகவும்...முறையற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும் அது உறவாகின்றன..

இப்படி சந்ததிகளை வளர்கக்க்கூடாது. நடுவுநிலைமையோடு வளர்க்கவேண்டும். இதைத்தான் எச்சம் என்கிறார் பொய்யாமொழியார்.

பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு அவர்கள்தான் எச்சங்களாகின்றனர்.

அடுத்து

ஒரு கைதேர்ந்த சிற்பி சிலையை செதுக்கிக்கொண்டிருந்தான். அவனிடத்தில் ஒருவன் கேட்டான் சிலை செதுக்குகிறாயா? என்று. அந்த சிற்பி சொன்னான் அந்த திறமையெல்லாம் எனக்கு குறைவு. இந்தக் கல்லிற்குள் ஒர் அழகான சிலை ஒளிந்துகொண்டிருக்கிறது. அதனைச் சுற்றியிருக்கும் கசடுகளை நீக்கிக்கொண்டிருக்கிறேன் என்று.

ஒருவர் தனது மாமா வீட்டிற்குத் தத்துப்பிள்ளையாகப் போனார். அவருக்கு மாமாதான் விலாசம். மாமா படிக்கவைத்து ஒரு வேலைக்கு அனுப்பினார். நல்ல வேலையும் கிடைத்தது. அவரின் மாமாவின் பண்பிற்கும் அவரது குடும்பப் பின்னணிக்கும் என அவர் வளர்த்த த்த்துப்பிள்ளைக்குத் திருமணம் நடந்தது. வந்த பெண்ணின் இளமை மயக்கத்தில் வளர்த்து ஆளாக்கிய மாமாவை மறந்துபோனார். மாமாவிடம் கேட்டார்கள். அது அவன் குணம். இது என் குணம் என்றார் மாமா பதட்டமில்லாமல்.


நண்பர் ஒருவரின் மாமனார் வீட்டிற்குப் போனேன். அவரின் மனைவி அந்த இரவில் பட்டுப்புடவை போன்ற பளபளப்பான புடவையில் மேக்கப் குறையாமல் நாற்காலியில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார். நான் போனதும் அவர் உட்கார்ந்தபடியே கணவனை அழைத்து மாப்பிள்ளையின் நண்பர் வந்திருக்கிறார் என்று அறிமுகம் செய்தார். நண்பரின் மாமனார் உள்ளே போய் இரு டம்ளர்களில் காபி கொண்டு வந்தார். சாப்பிட்டோம். அந்தம்மாவின் பேச்சு ரொம்ப பகட்டாக இருந்தது. அவர் அமைதியாகப் பேசினார்.

வெளியே வரும்போது நண்பர் சொன்னார். என்னோட மாமனார் அந்தக் காலத்துலே உறானர்ஸ் படிப்பு படித்தவர். பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஆனா எதையும் காட்டிக்க மாட்டார். என்னோட மாமியாருக்கு கையெழுத்துக்கூடப் போடத்தெரியாது.

பாரதியார் சகுனியைப் பாஞ்சாலி சபதத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடும்போது சபை நடுவே ஏறெனக் களித்திருந்தான் என்பார். அதாவது அறிவாளிகள் நிறைந்த சபையில் எல்லாம் தெரிந்தவன் போலக்கூட அல்ல நன்றாகக் கற்ற புலமையாளன் போல மகிழ்ச்சியோடு இருந்தான் என்பார். இதற்கெல்லாம் ஒரு துணிச்சல் வேண்டும்.

பொய்யாமொழியார் காலந்தொட்டு இதெல்லாம் உண்டுபோலும். அதனால்தான்

பணியுமாம் என்றும் பெருமை என்றார் போலும்.

Wednesday, October 26, 2011

கவிதை


எரியஎரியத்தான்
நெருப்பு...

வீசவீசத்தான்
காற்று...

இடிக்க இடிக்கத்தான்
இடி...

மின்னமின்னதான்
மின்னல்...

பெய்யப் பெய்யத்தான்
மழை...

பொங்கப் பொங்கத்தான்
கடல்...

விரியவிரியத்தான்
வானம்....

இழையஇழையத்தான்
கவிதை....

Sunday, October 23, 2011

காட்சிகள்....



உள்ளாட்சி தேர்தல்வரை வரப் பயந்து முடிவுகள் தெரிந்தபிறகு வெளியே வரலாம் என்பது போலக் காத்திருந்த வானம் லேசாகக் கண் திறந்து மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் சவுக்கு இலைகள் போல ஊசிஊசியாய் தொடங்கிய மழை அவை இறுகிப் பின்னிய கயிற்றைபோல கணமாகப் பெய்ய ஆரம்பித்தது.

நகரத்தில் தீபாவளி கடைபோட்டிருந்த பிளாட்பார ஓரக் கடைவாசிகள் கலக்கமுற்று தங்கள் பொருட்களை பிளாஸ்டிக் போர்வையால் போர்த்திவிட்டு வாயை மட்டும் உரக்கத் திறந்திருந்தார். ரெண்டு ஐம்பது. நாலு இருவத்தஞ்சு..வாங்க சார்...வாங்கம்மா...வாங்கம்மா...குடை 60 கலர்க்குடை 60தான் சார்...இப்படிப் பல குரல்கள். மழையில் நனைந்தபடியும் குடையைப் பிடித்தபடியும்..புடவை தலைப்பால் தலையை மூடியும் பெண்கள் துணிக்கடைகளிலும் சாலையோரக்கடைகளிலும் பட்சணங்களில் மொய்த்த ஈக்களாயினர்..

அப்பா ஒரு சுடிதார் கூட எடுத்துக்கொடுங்கப்பா...
சும்மா இருடி... நீ ஒருத்தி மட்டும்தான் அதிசயமா இருக்கியா..உனக்கு மேல ஒண்ணு...கீழ ரெண்டு இருக்கு.. இத உங்கப்பா கடன் வாங்கிட்டு வந்திருக்காரு...சத்தம் போடுவாரு...பாவம் அந்த மனுஷன்...


அப்பா தர்த்தா வாங்கிகொடுத்த பட்டாசோட நிறுத்தக்கூடாது...எனக்குத் தனியா 500 ருவாயிக்கு வேணும்..
தொணதொணங்காதே.. வாங்கி தந்து தொலைக்கிறேன்..


எனக்கு வேணாம்...எங்கப்பா கருமாதிக்கு வச்சுக்கொடுத்த துணிங்க இருக்கு. அத தச்சிப் போட்டுக்கலாம்.. புள்ளங்களுக்கும் உனக்கும் எடுத்துக்க..


நீ பாட்டுக்கு எடுத்துக்கிட்டேயிருந்தா உங்கப்பனா காசு தருவான்.
ஏன் உங்க்ப்பன்கிட்டே கொட்டிக்கிடக்குன்ன அள்ளிக்கிட்டு வாயேன்.
எங்கப்பன பேசினே செருப்பு பிஞ்சிடும்.
எங்கப்பன பேசினே செருப்பு பிஞ்சிடும்.
பாரு...பதிலுக்குப் பதிலு பேசறதுக்கு சீக்கிரமே தாலியறுத்து பிச்சை எடுப்பே பாரு..
பரவாயில்லை...

நாலுமாசமா வட்டி வரலே...இதுலே இபப்வேற கடன் கேக்கறே..ஆடம்பர மயிரு பண்ணத்தெரியுது..உன்பொண்டாட்டி திமிறாப் பேசறா.. நீ என்னடான என் காலை நகக்றே பணத்துக்க..
அவளுக்குத் தெரியாதும்மா..தீபாவளி புள்ளங்களுக்குத் துணி எடுக்கணும்..கொடுங்க..ஏற்கெனவே கொடுக்கவேண்டிய வட்டிய அசலோட சேத்துக்கங்க.. லோன் போட்டிருக்கேன்..அடுத்த மாசம் எல்லாதையும் பைசல் பண்ணிடறேன்..
பேச்சு நல்லா பேசறே..மானம் ரோசமா இருக்க மாட்டேங்குறே..
இல்லம்மா கொடுத்துடறேன்.
இதான் கடைசி...அடுத்த மாசம் வட்டி வரலே..விளக்குமாறுதான் பேசும்..
சரிம்மா..


நாலு டிரசும் பிடிக்கல்லியா?
நான் உன்ன கேட்டனா?
என்னடா ஒவ்வொரு தீபாவளிக்கும் இப்படி பண்ணறே?
எனக்குப் பிடிச்ச நான் எடுத்துக்கறேன்.. நீ எடுக்கவேண்டாம். எனக்கு ஐயாயிரம் கொடு நான் பாத்துக்கறேன்.
இந்தா என்னமோ பண்ணித்தொலை. ஏன்தான் எனக்குன்னு வந்து பொறந்தியோ?
நானா உன்னை பெத்துக்க சொன்னேன்?

சேதி தெரியுமா?
மூணுசக்கர வண்டியிலே வருவாரில்லை முட்டை எடுத்துக்கிட்டு...
ஆமா..
ஆறு மாசத்துக்கு முந்தி கால்ல ஆணி குத்திச்சாம்.. கவனிக்காம விட்டுட்டாரு... சுகரு வேற..அது ரொம்ப புண்ணாயிடிச்சாம்.. காலையிலே செத்துப்போயிட்டாரு..
அடப்பாவமே...நாலு வயசுல பொம்பள புள்ள இருக்கு.
ஆமா.. அவருக்கு செத்துப்போயிடுவோம்னு தெரியுமா? ஆஸ்பத்திரியிலே பொண்டாட்டியைக்கூப்பிட்டு பத்திரமா பர்த்துக்கோன்னு சொன்னாராம்..
தீபாவளி அதுவுமா அடக்கடவுளே?

மழை வலுத்துக்கிடந்தது.

ஒரு அப்பாவும் பெண்ணும் மழையில் ரோட்டில் கிடந்த பள்ளத்தைக் கவனிக்கவில்லை.
அந்த பெண் ஸ்கூட்டியை ஓட்ட அவர் பின்னால் உட்கார்ந்திருப்பார் போல..பள்ளத்தில் முன்சக்கரம் விழுந்து அப்படியே இருவரும் விழுந்தவிட்டார். தரையில் கிடந்த கல் ஒன்று பெரியவர் தலையைப் பதம்பார்க்க ஏகமாய் இரத்தம். அந்த பெண் காலில் அடி..
பாத்து வரக்கூடாதும்மா.
அடக்கடவுளே?
பாதாள சாக்கடை போடறேன் போடறேன்னு நாசம் பண்ணிட்டானுங்க..
ஒரு நாளைக்கு ஆயிரம் பேரு இந்த ரோட்டுலதான் போறான்.. எம்எல்ஏ மினிஸ்டர்.. எல்லாம் போறானுங்க..அவனுஙக்ளுக்கு என்ன ஜெயிச்சாச்சு..இனிமே என்னா? ஒரு வயதானவர் தலையிலடித்துக்கொண்டு பேசிப்போனார்.
ஒருவர் வண்டியையும் ஒருவர் அந்தப் பெண்ணையும் ஒருவர் அந்த பெரியவரை தாங்கிப்பிடித்து ஓரமாய் உட்கார வைத்தார்கள்.
அந்தப் பெண் பதறினாள்.
அப்பா செல்லையும பணத்தையும் காணோம்..
அந்தப் பெரியவர் பரிதாபமாக மகளைப் பார்த்தார்...

மழை லேசாகக் குறைந்திருந்தது.
பட்டாசுகள் சரவெடிகள் வெடிக்கத் தொடங்கியிருந்தன.

பைக்குகள் ஊர்வலம் வந்தன. பின்னாலே நாலைந்து கார்கள். அப்புறம் ஒரு
ஜீப் அதில் கையை கும்பிட்டபடி ஒரு பெண். கழுத்தில் அவள் சார்ந்திருந்த கட்சியின் துண்டு.நன்றி அறிவிப்பு ஊர்வலம்.

சும்மாவா 40 இலட்சம் செலவு பண்ணியிருக்கேன்.
என் பொண்டாட்டிய ஜெயிக்கமுடியுமா?

இவங்களாச்சும் ரோடு போட்டுடுவாங்களா?
நாலு தெரு தாண்டி தண்ணிக்குப் போவவேண்டியிருக்கு,,ஒரு பைப்பாவது வச்சுத் தருவாங்களா...

நைட்டு பிரியாணியும் சரக்கும் இருக்காம்.. அண்ணே வரச்சொன்னிச்சு..
எங்க?
அண்ணனோட கல்யாண மண்டபத்துலதான்.



எல்லாவற்றையும் மறந்து வாயைப் பிளந்தபடி இரு ஓரமும் மக்கள் கூட்டம் வெற்றி வேட்பாளரை வியக்கப் பார்த்துக்கொண்டிருந்தது.

ஒரு வீட்டின் உள்ளே

என்னடா இது நாளைய தேதிய இன்னிக்கே கிழிச்சிட்டே..

சும்மாப்பா?

சும்மாவா? அப்படியெல்லாம் கிழிக்கக்கூடாது. நாளைக்குதான் கிழிக்கணும்.

அதனால என்னப்பா?

அதனால என்னப்பா?

அதனால என்னப்பா?

Wednesday, October 19, 2011

சந்திப்பு

மகிழ்ச்சி

வழக்கமாக தேர்தல் பணிகளுக்கென ஆசிரியர்களையும் அரசு அலுவலர்களையும் பயன்படுத்துவதைக் காட்டிலும் எண்ணற்ற வேலையற்ற பட்டதாரி இளைஞர்களைப் பயன்படுத்தினால் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் தேர்தல் நடைபெறும். தவிரவும் அவர்களுக்குக் கிடைக்கும் தொகை சிரமப்படும் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் உதவியாக இருக்கும் என்று பலமுறையும் அடிக்கடியும் சொல்லிவருகிறேன் வாய்ப்ப் அமையும்போதெல்லாம். இது நடைபெறும் என்பதற்கு அறிகுறியாக இந்த உள்ளாட்சி தேர்தலில் சில மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து தேர்தலைக் கண்காணிக்கும் காமிரா பயிற்சி அளித்துள்ளார்கள். தேர்தல் கமிசனுக்கு ஒரு சல்யூட். மகிழ்ச்சி.


கவிதை

ஒரு வருத்தம்
பல்வேறு அளவுகளையும்
பல்வேறு பரிமாணங்களையும்
கொள்கிறது..

ஒரு மகிழ்ச்சி
பல்வேறு அளவுகளையும்
பல்வேறு பரிமாணங்களையும்
கொள்கிறது.

ஒரு வருத்தத்திற்கு ஈடாக
ஒரு மகிழ்ச்சியையும்
ஒரு மகிழ்ச்சிக்கும் ஈடாக
ஒரு வருதத்த்தையும்
அளவிட்டும் பரிமாணமிட்டும்
தரமுடிவதேயில்லை ஒருபோதும்

என்பதுவான
வருத்தமும்
மகிழ்ச்சியும்
உறுத்துகிறது...அனுபவிக்க....



உண்மைச் செய்தி


செவ்வாழையின் குருத்தைப்போல இருந்தான் அவன். எப்போதும் சிரித்த
முகம். காலையில் செய்தித்தாள் போடுவான். அப்புறம் பள்ளிக்கு செல்வானாம்.
பத்தாம் வகுப்பு படிக்கிறவன். என் மனைவியிட்ம் மடடும் ஏதேனும் ஒரு கதை
சொல்வதற்கு ஐந்து நிமிடம் அவனுக்கிருந்தது தினமும். ஒரு காபி தருவாள்
அவனுக்கு. தீராத வயிற்றுவலி என்று அவன் வாடகை வீட்டில் கயிறிட்டு உயிர்
விட்டதாக சொன்னார்கள். அதிர்ந்துபோனேன். அவன் தந்த உலகு செய்தியெல்லாம்
வாசித்தவர்கள் அவன் செய்தியை வாசிக்கத் தயாராக இல்லை என்பதுதான் செய்தி.