Thursday, February 21, 2013

பாராட்டுவோம்,,,,




                           ஒன்று ------காவிரி நதி நீர்ப் பிரச்சினை தொடர் பிரச்சினை, அதுகுறித்து பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தாலும். தற்போது அதுகுறித்த ஒரு நிலைப்பாட்டை அரசிதழில் வெளியிட்டிருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரிய ஒன்று மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகப் பயிர்கள் காய்வதைக் கண்டு தற்கொலை செய்து இறந்துபோன விவசாயிகளின் ஆன்மாவிற்கும் சாந்தி தருவதாகும். அரசிதழில் கண்டபடி நடைமுறை அழுத்தமாக அமைதல் வேண்டும். அரசியலைத் தாண்டி எந்தக் கருத்துமின்றி தமிழக முதல்வர் அவர்கள் பாராட்டுக்குரியவர். காவிரி குறித்த நிலைப்பாட்டில் சிலவற்றைத் துணிவாக மேற்கொண்டவர் என்ற நிலையில். மேலும் இதுகுறித்து செயல்பட்ட மற்ற அரசியல் தலைவர்களுக்கும் இதே பாராட்டுக்கள் மனம் திறந்து.

                        இரண்டாவது----------- ஆசிய விளையாட்டுக்களை நடத்துவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சூடாக தமிழர்களின் மனங்களைக் குளிர்விக்குமாறு மறுத்துவிட்ட தமிழக முதல்வர் அவர்களின் செயற்பாடும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மீண்டும் அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


                        மூன்றாவது மின்வெட்டு நிகழ்விலும் ஒரு மின்னல் வெட்டாய் ஒரு முடிவு கிடைத்துவிட்டால் போதும். நம்பிக்கை இருக்கிறது.


                                                 எந்த ஒன்றுக்கும்
                                                 தீர்வு இருக்கலாம்...
                                                  அது கிடைப்பதில்
                                                 தாமதம் நேரலாம்
                                                 ஆனாலும்
                                                 நம்பிக்கையாய்
                                                 ஒரு சொல்லுதிர்த்தல்
                                                 தீர்வின் கதவைத்
                                                 திறப்பதற்கான
                                                 திறவுகோல்தானே?


                         000000000000000000000000000000000000000000000000

கண்ணீரின் உப்பைத் தின்றவர்கள்



              இறைவன் உலகில் படைத்த ஒவ்வொரு உயிருக்கும் ஒரு வாழ்வையும் படைத்தே அதனை அனுபவிக்கவும் செய்திருபப்வன். அந்த வாழ்வின் நிகழ்வுகளையும் துன்பங்களையும் இன்பங்களையும் எப்படி வாழ்வது என்பது வாழ்கிற ஒவ்வொரு நொடியிலும் ஒரு புதிரைப்போலவே காட்டி அவிழ்த்து விடுவிப்பவன் அவனேதான்.

               யாரின் வாழ்வையும் யாரும் பறிப்பதற்கு உரிமையில்லை. யாரின் வாழ்க்கையிலும் யாரும் தலையிடுவதற்கும் அனுமதியில்லை. ஆனாலும் ஒரு கட்டுக்கோப்பான மக்களாட்சி சமுகத்தில் அதற்கெனவே ஒழுங்குபடுத்த சட்டங்களும் நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன. கடவுளின் நீதி என்பது மெதுவாகத்தான் நகரும் ஆனால் அதன் இலக்கை அடையும் என்பார்கள். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். எனவே இவற்றுக்கெல்லாம் பணிந்து தீயனவற்றை நீக்கிய வாழ்க்கை வாழ்வதுதான் ஒரு மனிதனின் அடிப்படையான அவசியமான ஒன்றாக இருக்கும்.

                   இவற்றைக் கற்றுக்கொண்டு பின்பற்றிய சான்றோர்கள் தங்களின் மொழியில் இலக்கியங்களாகப் படைத்துப் பின்வரும் நல்ல சமூகத்திற்கென விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். எனவே கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து நம்முடைய புறத்தோற்றத்தை ஒழுங்கு செய்துகொள்வதுபோல நமது அகத்தோற்றத்தை ஒழுங்கு செய்துகொள்ள இடமளிக்கும் கண்ணாடியாக இலக்கியங்கள் நிற்கின்றன. எனவேதான் அவற்றை காலத்தின் கண்ணாடி என்றார்கள் சான்றோர்கள். மக்களுக்காக மக்களால் மக்களின் சீலங்களுடன் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் மனிதனுடைய நற்பண்புகளை உருவாக்கும் ஒப்பற்ற கருவியாகவும் திகழ்ந்துகொண்டிருக்கின்றன. காலங்காலமாக. யுகம் யுகமாக.

                      இவற்றின் தொடர்ச்சியாகவே பண்பாடும் நாகரிகமும் உருவாயின. அவற்றை அழகியலோடு கற்பனை சேர்த்துப் படம்பிடித்துத் தந்தவை இலக்கியங்களே. அவற்றின் பொருண்மை நுட்பம் இன்றைக்கும் மாறாத ஓர் பிரமிப்பை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கின்றது.

                              தன்னுடைய தலைவனிடம் தலைவி ஒரு மரத்தைச் சுட்டி
                              இதனருகில் காதல்மொழிகள் செயற்பாடுகள் வேண்டா.
                              ஒருவகையில் இது எனக்கு தமக்கை (மூத்தவள்) முறை
                              மனம் ஒப்பவில்லை. மனம் கூசுகிறது.  மரத்தை தமக்கையாகப்
                              பார்த்து மரியாதை செய்த பண்பாடு உலக இலக்கியம் எங்கும்
                             இல்லையென்று துணிந்து கூறலாம்.

                               பற்றுக்கோடு இல்லாமல் இருந்தால் அழிந்துவிடுமென்று
                              தன்னுடைய தேரைப் பற்றுக்கோடாக்கி முல்லைக்கு ஈந்தவன்
                             பாரி எனும வள்ளல்.

                              குளிரில் வாடிய மயிலுக்காகப் பேகன் தன்னுடைய போர்வை
                              யைத் தந்து இரக்கம் காட்டியவன்.

                               எதுவுமற்றிருக்கும் தன்னிடம் வந்த புலவனிடம் என் தம்பி
                               மனம் குளிரட்டும் உன்து வாழ்வும் மலரட்டும் என் தலையைக்
                               கொய்து கொண்டு போ என்றான் ஒரு மன்னன்.

                               புறாவுக்காக ஒரு மன்னம் தன் தசையை அரிந்த கதை யாருக்
                               கும் தெரியும்.

                                நீதி யாவருக்கும் பொதுவானதென்று கன்றுக்காகத் தன்
                                மகனைத் தேர்க்காலில் இட்டவனும் ஒரு மன்னன்.

       உலகம் முழுக்க இனம் கடந்து . மொழி கடந்து. சாதி கடந்து பின்பற்றத்தக்க மிக உயரியப் பண்பாட்டைத் தந்தது தமிழ்மொழியும் தமிழினமும்.

                       இதற்கு ஈடுஇணையாக உலகின் எந்தப் பண்பாட்டையும் ஒப்பிட முடியாது.

                        இத்தனையும் சொன்னது யாருக்கும் தெரியாத ஒன்றல்ல.

                         இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் பலவாறு பண்பாடு பேசியது தமிழ் மொழி.

                         ஆகவேதான் அகத்திணை என்றும் புறத்திணை என்றும் (திணை என்றால் ஒழுக்கம்) பொதுவில் கோட்பாட்டை உருவாக்கியது.

                        எல்லாவற்றிலும் எப்போதும் ஒழுக்கம் முக்கியம் என்பது இதன்
பொருளாகும்.

                         அற நெறி முதற்றே அரசின் கொற்றம் என்பது புறநானுர்று.

                          எழுதிக்கொண்டே போகலாம். மனது அடங்கவில்லை. மனசு ஆறவும் இல்லை.

                          எதிரியையும் தன்னைத் தாக்க வந்தவனையும் தவித்தவனையும் துன்புற்றவனையும் எதுவும் பாராமல் நேசித்து அன்பு பாராட்டும் தமிழினம் உலகின் எந்த மூலையிலும் ஒப்பிடமுடியாத ஒரு பண்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

                           தன் கணவன் கள்வன் என்று கொலை செய்த மதுரை மாநகரத்துக்குத் தீ  மூட்டும்போதுகூட கற்புக்கரசி கண்ணகி அறவோர். முதியோர். பிள்ளைகள். பெண்கள். நோயுற்றவர்கள் என விடுத்து தீப்பற்றுக என்று சொன்னாள். அத்தனை துக்கத்திலும் வாழ்விழந்த நிலையிலும் தனது பண்பாட்டை இழக்காத இனம் தமிழினம்.

                          மனசு கொதிக்கிறது. படித்த எல்லாமும் மனதில் வந்து இதெல்லாம் வீணாகிவிட்டதே என்று வேதனை வெடிக்கிறது.

                          ஒரு இனத்துக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவன்  பிரபாகரன்.

                         அவனுடைய பிள்ளை எந்த தவறும் செய்யாமல் கொலை செய்யப்பட்டிருக்கும் கொடுமை அதுவும் பச்சிளஙகுழந்தை பன்னிரண்டு வயது பாலகன் தமிழினத்துக்காக தமிழ் மொழிக்காக தமிழர் வாழ்விற்காகக் களப்பலி கொடுக்கப்பட்டிருக்கிறான்.

                            சிங்களவர்களுக்கு வாழ்க்கை இல்லையா. அதில் மனைவி. பிள்ளைகள் அம்மா அப்பா பேரன் பேத்திகள் என்று உறவு இல்லையா?

                            தன்னுடைய பிள்ளைக்கு இப்படியொரு கதி நேர்ந்திருந்தால் இரக்கமற்ற கொடூர மிருகம் ராஜபக்சே என்ன பதைபதைத்திருக்கும்?

                           இதை என்றைக்கும் உலகம் மறக்காது. ஒவ்வொரு தமிழ் உயிரும் மன்னிக்காது.

                            உலகின் நீதியின் கரங்களில் போர்க்குற்றவாளி ராஜபக்சே ஒப்படைக்கப்படவேண்டும். அதற்குரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.

                           தமிழக முதல்வர் தொடங்கி எல்லோரும் இந்தக் கொடுமைக்கு தஙகள் கண்டனத்தைக் கண்ணீரோடு பதிவு செய்திருக்கிறார்கள். இந்திய தேசம் பண்பாட்டின் வேரில் நிலைத்திருப்பது. அது காக்கப்படவேண்டும். இனியாவது மௌனத்தைக் கலைத்து மத்திய அரசு இதற்கு சரியான நியாயக் குரலை உலகின் நீதியின் அரங்கில் உரத்து ஒலித்து பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் ஆன்மாவிற்கு உரிய நியாயத்தை வழங்கவேண்டும்.

                          தொலைக்காட்சியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிகும் அந்தக் கள்ளங்கபடமற்ற தமிழ்த்தேசத்தின் இளைய நிலா அடுத்த சில நிமிடங்களில் என்ன நடக்கப்போகிறது என்று அறியாத தோற்றமது. பாவிகளே எப்படி உங்களுக்கு மனது வந்தது?

                            இறைவனிடம் நீங்கள் ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும்.

                            தண்ணீரின் உப்பைத் தின்றவன் தண்ணீரைத் தேடியே ஆகவேண்டும். கண்ணீரின் உப்பைத் தின்றவன்,,,,,,,,,?

                            அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.

                             தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் மறுபடியும் தருமம் வெல்லும்.

                            0000000000000000000000000000



                             தனது கல்வியின் மூலம் தன்னுடைய குடும்பத்தையும் அதை அரித்துக்கொண்டிருக்கும் வறுமைக் கரையான்களையும் ஒழிக்கவேண்டும் என்று எண்ணி உயர்ந்த அன்புச் சகோதரி விநோதினியின் எண்ண்ம் சிதைந்துவிட்டது.

                              துடிதுடிக்கிறது அந்தக் குடும்பம்.

                              அந்தப் பெண்ணின் முகத்தில் ஆசிட்.

                              அந்தக் குடும்பத்தின் ஆணிவேரிலும் அதே.

                               தவித்து தாமரை இலை தண்ணீர்போல நிற்கிறது.

                              ஆயிரமாயிரம் உதவிகளும் ஆறுதல்களும் என்ன செய்துவிடமுடியும்?

                               இன்னும் எத்தனை எத்தனை விநோதினிகள் எங்கு எங்கோ? யார் அறிவார்?

                                அந்தப் பிள்ளையின் ஆன்மாவிற்கு அஞ்சலிகள்.

                                 00000000000000000000000000000



                     ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படிக்கிறபோதெல்லாம் மனம் நொறுங்கிப்போகிறது. இவற்றுக்கெல்லாம் தீர்வு என்ன? நியாயம் என்ன?



                                                 அணுவைப் பிளக்கமுடியாது
                                                 என்று அன்றோர் அறிவியல் அறிஞன்
                                                 சொன்னான்...
                                                 பிளந்துவிட்டேன் பார் உள்ளே அற்புதமும்
                                                 பாரென்று காட்டினான் பின்னால்
                                                 இயங்கிய இன்னோர் அறிவியல் அறிஞன்
                                                 முடியாது என்பதும் முடியும் என்பதும்
                                                 ஒரு கருத்துருதான்
                                                 அணுஅணுவாய் எல்லாவற்றிலும்
                                                 அணுதான்...
                                                 அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திக்
                                                 குறுகத் தரித்த குறள்  என்றாள் ஔவை
                                                  கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திக்
                                                  குறுகத் தரித்த குறள் என்றவளும் ஔவைதான்
                                                  குறள் சிறியதுதான் ஆனால் அணுவைவிட
                                                  வலியது,,,
                                                  சிறிய எந்த ஒன்றையும் அழிக்கஅழிக்க
                                                  அது ஆயிரமாயிரம் ஆயிரமாயிரம்
                                                  அணுவாகத்தான் உருமாறும்.....

                  00000000000000000000000000000000000000000000000000000000000000000000

                    எதிர்வரும் பிப்ரவரி 27 எழுத்தாள் சுஜாதாவின் நினைவுநாள். புதிதாக எழுதவருகிறவர்கள் ஒருமுறையேனும் அவசியம் அவரை வாசிக்கவேண்டும். வாசிக்காதவர்கள் சாபம் பெற்றவர்கள். வாசித்தவர்கள் இன்னொரு முறை வாசிக்கலாம். மனதைப் புதுப்பித்ததுபோல.

                        சுஜாதாவும் படைப்புலகின் என்றும் அணையாத ஒரு சுடர்.

                          000000000000000000

                             
                            

Saturday, February 2, 2013

தாகம் வற்றாத கலைஞன்



           
                     பட்டப்படிப்பை முடித்திருந்த நேரம். அப்போதுதான் இலக்கியப் பரிச்சயமும் வாசிக்கிற ஆர்வமும் மேலும் முனைப்புக் காட்டிய காலக்கட்டம் அது.

                    தஞ்சையின் வடவாற்றங்கரையில் நண்பர்கள் அமர்ந்து பேசிக் கொணடிருந்தபோதுதான் கமலஹாசன் எனும் நடிகனை ஆழமாகப் பார்க்கவேண்டிய அவசியம் எனக்கு நண்பர்களால் உணர்த்தப்பட்டது.

                    பதினாறு வயதினிலே படம் தொடங்கி ஒவ்வொரு படத்திலும் கமலைப் பார்க்கிற தருணங்கள் ஒரு நடிகனாகப் பார்க்காமல் அந்தக் குறிப்பிட்ட பாத்திரத்தின் உயிராகவே மாறிக்கொண்டிருந்த கலைஞனைத் தரிசிக்கிற பெரும்பேறு வாய்த்தது.

                      படைப்புக்கலை என்பது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இறைவனைப் பார்க்கவில்லை இதுவரை என்றாலும் அதன் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை மாறவேயில்லை. அது  பழமையான மரத்தின் ஆழமாகப் பதிந்துவிட்ட வேரைப்போல மனதில் இன்றுவரை நின்று வாழ்வை இயக்கிக்கொண்டிருக்கிறது. அவ்வகையில் கமலை நோக்குகிற தருணங்களில் நிச்சயம் கடவுளால் வரமளிக்கப்பட்ட கலைஞன்தான் என்கிற உறுதிப்பாடு மனதில் பதிந்துபோனது,

                  பதினாறு வயதினிலே,,,வாழ்வே மாயம்,,, மன்மத லீலை,,,மூன்று முடிச்சு... அபூர்வ ராகங்கள்...சிகப்புரோசாக்கள்...குணா... மகாநதி...ஹேராம்.. மைக்கேல் மதன காமராசன்...தேவர் மகன்..அன்பே சிவம்... இந்தியன்...அபூர்வ சகோதரர்கள்...விக்ரம்...சலங்கை ஒலி... மரோ சரித்ரா... கல்யாணராமன்... நாயகன்.... நினைத்தாலே இனிக்கும்...பஞ்ச தந்திரம்...

                     படங்களின் வரிசையும்  ஆண்டும் நினைவில் இல்லை என்றாலும்.. கமலின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். மேலே சொன்னவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல,, ஒவ்வொன்றிலும் ஒரு கலைஞன் செத்து மறுபிறவி எடுத்ததுபோல தன்னை அர்ப்பணித்து உருவாக்கிய படங்கள்... ஒவ்வொரு படத்தையும் எத்தனை முறை பார்த்தாலும் அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோன்ற ஒரு அனுபவத்தைத் தருகின்ற படங்கள்.. எத்தனை கோணத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதற்கு இடமளிக்கிற படங்கள்.. கமல் என்கிற கலைஞன் தன்னை உருக்கி வார்த்த கலைபடைப்புக்கள்...

                      காலத்தால் அழியாக கலைப்படைப்புக்களைத் தந்துள்ள கமலின் ஒவ்வொரு உயிர்ப்பும் தேர்ந்த கதை...சிறந்த மொழி நடையில் அமைந்த உரையாடல்களின் வன்மை... காட்சி யமைப்பு... நடிப்பின் ஆழம்... பார்ப்போரை வலிமிக யோசிக்க வைக்கிற நுட்பம்.. இப்படி ஒவ்வொரு கூறையும் விரித்து சொல்லிவிட்டுப்போகலாம். சுருக்கமாக சொல்வதானர்ல் கமலை அனுபவிக்கவேண்டும்.

                     தமிழருவி மணியன் குறிப்பிட்டதுபோல ஏதோ நடித்து ஏதோ சேர்த்து செட்டிலாகிவிடுகிற சராசரி கலைஞனின் பிரதியல்ல கமல். தன்னை சோதனைக்குள்ளாக்கி... வலி பொறுத்து.. வலி சகித்து ஒவ்வொரு படைப்பிலும் வற்றாத தாகத்தை அனுபவித்து வெயிலிலே துடிக்கும் புழுவைப்போல கலைதாகத்திற்காகத் துடித்துக்கொண்டிருக்கும் மகா கலைஞன் கமல்.

                    எல்லோருக்கும் புரிகிற  கழுத்து வலிக்க உயர்ந்துப் பார்க்கிற அற்புதம் போல பிரமிப்புபோல.. நிற்கிற கலைஞன் கமல். எல்லாவற்றிலும்
தனக்குத் திருப்தி தேடித் தவித்து நின்று பின் உள்ளடக்கி உருவாக்கித் தரும்
கலைப்படைப்பின் பிரும்மா கமல்.

                    வயிற்றுப் பசிக்குத்  தவிக்கும் வறுமையைப்போலவே வலிமிகுந்த சோதனைக் கட்டத்தை ஒவ்வொரு படம் முடிவுறும்போதும் அனுபவிக்கிற கமலின் வலியை யாரும் ஏந்திக்கொள்ளவேண்டாம். குறைந்த பட்சம் அதனை விமர்சிக்காமல் மரியாதை செலுத்தும் பண்பை அளிப்பதன்மூலம் அந்தக் கலைஞனுக்கு நாம் நன்றி செலுத்தலாம்.

                       கமல் கலையுலகின் கற்பகவிருட்சம்.

                       கமல் கலை வானின் வெளிச்சம். விலாசம்.

                       கமல் வரம் வாங்கி வந்தவரல்ல. கலைத்தாயின் பிரதி.

                       பெரிய சாகரம் ஆர்ப்பரிக்கிறபோது அடங்கும்வரை அது பொங்கியே அடங்குகிறது.

                         விரிந்து பரந்த அமைதியான வானில்தான் இடி முழங்கி பேரிடியாகி பெருமழை கொட்டி பூமியை மூச்சுத் திணற வைக்கிறது.

                         முகம் வருடி இதழ் வருடி இழைகிற தென்றல்தான் பெருங் காற்றாகி பெருமுழக்கம் செய்கிறது.

                          கமல் இன்றைக்கல்ல பிறக்கும்போதே தாகம் வற்றாத கலைஞனாய் கலைத்தாய் பெற்றெடுத்துவிட்ட பிள்ளையாகத்தான்.

                           கமல் என்றைக்கும் விஸ்வரூபம்தான்.

                          காலம் இதனை உலகளவில் அங்கீகரிக்கும்.

                          0000000