Saturday, October 11, 2014

செய்திகளும் உணர்வுகளும்



செய்தி 1


                     இவ்வாண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசினை இருவர் பகிர்ந்துகொள்கின்றனர்.

                       அ) இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி (60)
                      ஆ) பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (17)

                   
                 குழந்தைகள் மீதான அடக்கு முறைக்கு எதிராகவும் அனைத்துக் குழந்தைகளுக்குமான கல்வி உரிமைக்காகவும் போராடியதற்காக அவர்கள் இந்தப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். (நன்றி தினமணி- 11.10,2014)

                      அவர்கள் இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது இந்த குழந்தைகள் கல்வி மற்றும் உரிமை இவற்றுக்காகத் தொண்டு  ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள.

                       நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

                        .........இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே
                       வலுவான உறவுகளைக் கட்டமைக்கக் கூட்டாகப் பாடுபடுவது
                       என்று சத்யார்த்தியும் நானும் முடிவு செய்துள்ளோம். நான்
                       அமைதியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்தியாவும்
                        பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது.
                        ஆஸ்லோ நகரில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள
                        நோபல் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்குமாறு நவாஸையும்
                        மோடியையும் நாங்கள் கேட்டுக்கொள்வோம்.

17 வயது சிறுமியின் ஆத்மார்த்தமாக மனிதநேயமிக்க பொறுப்பான உண்மையான உலகெங்கும் அமைதி நிலவவேண்டும் என்றெண்ணும் உள்ளங்களின் ஒட்டுமொத்தக் குரலாகப் பதிவு செய்துள்ளார் மலாலா. மகளே உன்னை வணங்குகிறேன்.  உன் எண்ணம் நிச்சயம் ஈடேறும்.

                சமீபமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான மோதலில் உயிரிழந்துபோன வீரர்களின் குடும்பங்களை ஒருமுறை எண்ணிப் பாருங்கள். எத்தனைக் கனவுகள். எத்தனை எதிர்பார்ப்புகள். எத்தனை திட்டங்கள். எல்லாமும் இழந்து அந்த முகந்தெரியாத குடும்பங்களின் துயரை யார் பகிர்ந்துகொள்வது.

                     எப்படியாயினும் உயிரற்ற குண்டுகளில் அரிதான மானிட உயிர் முடிந்துபோவது வேதனையாக உள்ளது.

                        மலாலாவின் வேண்டுகோளை நாமும் வழிமொழிந்து வேண்டிநிற்போம்.

                          0000000000000000000000000000000000000000000


செய்தி 2

                          அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களின் மறைவு.

                          காந்தியக் கொள்கைகளில் தன்னை இறுக்கமாக இணைத்துக் கொண்டு கடைசிவரை அப்படியே வாழ்ந்தவர் அக்டோபர் 2 அன்று  இயற்கை எய்தியது எத்தனை ஒற்றுமையானது.

                          அவரின் பணிகள் அல்லது தொண்டுகள் எண்ணிலடங்கா.

                          எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தன்னிலை உயர்ந்தவர். அத்துடன் முடிந்துவிடவில்லை. உயர்ந்த நிலைக்குப் போனபிறகு தன்னிலும் தாழ்ந்து கிடக்கிற மக்களுக்காக எண்ணற்ற உதவிகளை செய்திட முனைந்தவர்.

                            அவரின் நிதி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் பார்சல் நிறுவனங்களும் எண்ணற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வையும் கொடுத்தன.

                            காந்தியம் ஆன்மீகம் எனும் இருநிலைகளில் தன்னைப் பிணைத்துக்கொண்டு வாழ்ந்த மகான்.

                           மட்டுமல்லாமல்  தமிழின் பழைய இலக்கியங்களையும் சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காந்தியம், காப்பியங்கள் எனும் எல்லாவற்றையும் தரமான அச்சுப் பதிப்பில் அதிகப் பக்கங்களில் மிகக் குறைந்த விலைக்குக் கொடுத்தார்.

                          அச்சுக்காகும் செலவின் பெரும்பகுதியை தன் பங்காகக் கொடுத்து வாங்குவோருக்கு குறைந்த விலையிலும் கொடுப்போர்க்கு நிறைவான விலையிலும் அளித்த மாண்பு. அதேபோன்று அவரின் சிந்தனைகளையும் தொடர்ந்து ஓம் சக்தி இதழில் எழுதி வந்தார்கள். சமூகத்தின் பல்வேறு முககிய மக்கள் பிரச்சினைகள் குறித்து எழுதியதோடு அதற்கெனத் தீர்வுகளையும் பல ஆலோசனைகளையும் முன் வைத்தவர்கள்.

                          கடைசிவரை மாண்புமிக்க மாண்பாளராக வாழ்ந்து மறைந்தவர். அவரின் தொண்டுகளால் கடைசிவரை வாழும் பேறுபெற்றவர்.

                          அவரின் ஆன்மா அமைதிகொள்ள அவரின் குடும்பத்தார் அமைதிகொள்ள இறைவனை வேண்டி நிற்போம்.

                                        0000000000000000000000000000000


செய்தி 3

                        என்னுடைய பல கதைகள் பரிசு பெற்றிருக்கின்றன.

                        நிறைய கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.

                        என்றாலும் தினமலரில் வெளிவந்து முதல் பரிசு பெற்ற கதைக்கு நான் பெற்ற கடிதங்களும் கைபேசி வழி பெற்ற பாராட்டுக்களும் நெகிழ வைத்தன. இன்னும் படைப்புலகில் மேலான இலக்கையடைய அவை உந்துதலாக இருக்கின்றன.

                          குறிப்பாக ஆய்வுலகிலும் படைப்புலகிலும் அளப்பரிய  சிந்தனைகளையும் நுர்ல்களையும் வெளியிட்டுப் பல பரிசுகளும் பெற்றவர்.
தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் முக்கியமான பல கமிட்டிகளில் அங்கம் வகிப்பவர்.

                        நேர்மை, சத்தியம், ஒழுக்கம், கடமை தவறாமை, கடின உழைப்பு, தேர்ந்த வாசிப்பு, தேர்ந்த எழுத்து, எல்லோரிடத்தும் அன்பு செலுத்துதல், உதவுதல் என இன்றுவரை பணிஓய்வு பெற்றும் தன் எழுத்துக்களில் ஓய்வுபெறாமல் எழுதிக்கொண்டிருக்கும் மூன்றெழுத்துத் தகைமை. பெருமை.

                                கு. வெ. பா.

                                எனும்

                               பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள்

                     அவர்கள் என் கதையைப் படித்துவிட்டு  தன்னுடைய மன எண்ணத்தைக் கவிதையாக்கித் தந்துள்ளதை நீங்களும் அறியத் தருகிறேன்.
இதனைத் தரக் காரணம். அவ்வளவு எளிதில் அவரின் பாராட்டுக் கிடைத்துவிடாது. அவர் மனதுக்குப் பட்டால்தான் அதனைக் குறித்துப் பேசுவார். எத்தகையே ஆளுமையாளரின் படைப்பாக இருந்தாலும்.

                               இந்தக் கவிதை எனக்கு கிடைத்த இரண்டாவது முதல் பரிசாகக் கருதுகிறேன்.

                              ஒருநங்கை            இறந்தா         ளாக
                                  உலகோர்தாம்   ஏற்றி                டாத
                              திருநங்கை             தனைம          ணந்தான்
                                   சீர்மிகும்              குடும்பம்       சேர்த்தான்
                              தருணங்கள்           சோதனை     தந்து
                                   தடைகளை        விளைத்த     போதும்
                               மரணங்கள்            கூட                 எம்மை
                                   விலக்கிடா         என்று             ரைதத்தான்.


                               மகள்மணம்            கொள்ள        வந்தோர்
                                    மணவறை         தன்னில்       இந்த
                               வகைத்திரு             நங்கை          வந்தால்
                                    மணமதே            வேண்டாம்   என்றார்
                                அகத்தினில்           மாற்ற            மில்லை
                                    அவளென்றன்   மனையே      யாவாள்
                                 சுகம்துக்கம்           இரண்டி          னுக்கும்
                                     துணையவள்    என்று             ரைத்தான்


                                  இப்படி                     யாக                  அன்பர்
                                       எழுதினர்          கதையொன்    றிங்கே
                                  செப்பிடு                வித்தை            யன்று
                                        செயலிது         மனித                நேயம்
                                  ஒப்பிடின்             அவளும்          தாயே
                                         உலகவர்         உணர்க            என்றே
                                   அப்படி                  உரைத்த          நண்பர்
                                        அன்பழகன்      வாழ்க              நன்றே.

                                   
                                    வனமலர்                  போற்பி           றந்து
                                           வாழ்க்கையே   கனவாய்ப்     போன
                                     இனமலர்                  என்று               மாலை
                                           எதனினும்          சேர்ந்தி            டாத
                                      குணமலர்                திருநங்           கைக்கே
                                           கொடுத்தனர்      ஏற்றம்            இங்குத்
                                       தினமலர்                  பரிச                 ளித்த
                                             சிறுகதை         சிறந்த                தன்றே

                                       
                                        அன்பழகன்            கதைக              ளெல்லாம்
                                              அடிநாதம்         மனித                நேயம்
                                         பண்புரை               திறத்தைக்       காண்மின்
                                               பலப்பல           நலிந்த               மக்கள்
                                         அன்பினுக்            கேங்கி               நிற்கும்
                                               அகத்துறை     துன்ப                  மெல்லாம்
                                          என்பினை             உருக்கு              மாறே
                                                இயம்பிடும்    நேர்த்தி               நன்றே...


           
                        இந்தக் கவிதையினை எனக்காக என் படைப்புக்காக எழுதிட எடுத்திட்ட நேரம் சிறிதெனினும அது எனக்குக் கிடைத்த பொன்னான வரம்.
அத்தகைய மாண்புடை பேரறிஞனின் வார்த்தைகளைத் தங்களோடு பகிர்ந்துகொள்வது மிக மகிழ்ச்சியான தருணம்.

                     0000000000000000000000000000000000000000000000000000

                                    

7 comments:

  1. மகிழ்ச்சியான தருணங்கள் என்றும் வாழ்க!..

    ReplyDelete
  2. முதலில் தங்களுக்கு வாழ்த்துக்கள் ஹரணி சார் .
    நோபல் பரிசு பெற்றவர்களை வணங்குகிறேன்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஹரணி சார்

    நோபல் பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மாண்புடை பேரறிஞனின் வார்த்தைகளை
    பகிர்ந்துகொள்வது மிக மகிழ்ச்சியான தருணம்.

    இனிய வாழ்த்துகள்.!

    ReplyDelete
  5. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

    ///அன்பழகன் கதைக ளெல்லாம்
    அடிநாதம் மனித நேயம்///
    எப்பரிசும் இப்பரிசிற்கு ஈடாகாது
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  6. ஒரு பண்பாளர் மனம் நிறைக்கும் வாழ்த்துக்கவிதை வழங்கியதுகூட நமக்கு நோபல்பரிசுக்கு ஒப்பானது அன்றோ? உங்கள் நறபணியும் தேடுதலுக்கு தொடரட்டும் ஹரிணி சார் .

    ReplyDelete
  7. தேடுதலும்' என வாசிக்கவும்.

    ReplyDelete