Wednesday, June 25, 2014

காவிரிக்கரையில்.....பொட்டல நினைவுகள்...



                             திருவையாற்றுக்கு அருகில் திரண்டோடுகிறது காவிரி. எனக்கு
விவரம் தெரிந்த நாள் முதலாக காவிரி எனக்குப் பழக்கம்.

                             அம்மாவின் பிறந்த ஊர் காவிரிக்கருகில். சிறு வயதிலிருந்து அம்மா அவள் பிறந்த ஊரில் நடக்கும் கோயில் திருவிழாவிற்கு அழைத்துக்கொண்டு போய்விடுவாள்.

                               காப்பு கட்டிய மறுநாளிலிருந்து நாங்கள் அங்கிருப்போம். அம்மாவின் தம்பிகள் மாமாக்கள் அவர்களின் குடும்பங்கள் என அந்த கிராமத்தையே அல்லோகப்படுத்திவிடுவோம். காலையில் சாப்பிட்டு கிளம்பினால் வயல் வரப்புகளில் ஒடுவோம். நண்டுகள் பிடிப்போம். ஈச்ச பழங்கள். இலந்தைப்பழங்கள் எனப் பறித்து தின்போம். இலந்தைப் பழங்கள் நாவில் புண்ணாக்கி எரிச்சல் வரும்போது அருகேயுள்ள வாய்க்கால் நீரை அள்ளிஅள்ளிக் குடிப்போம். அப்புறம் குளத்தில் நீச்சல். தாமரை பறிப்போம். அதைன் தன்னை மடக்கி ஒடித்து மடக்கி மாலையாக்கி திரௌபதையம்மனுக்குப் போட்டுவிட்டு மதியச் சாப்பாட்டிற்கு 4 மணிக்கு வீட்டிற்குள் நுழைவோம்.

                             அறுவடை செய்த வயலில் வாணவேடிக்கை. தீமிதிக்காகப் போடப்பட்டுள்ள படுகளம்.. பாரதக்கதையின் இறுதிக்கதை என ஒவ்வொரு நாளும் போதாமல் ஏக்கமுறச்செய்யும்.

                               காவிரிக்கரையோரமாக அம்மாவின் ஊருக்கு நடந்தே போவோம். ஊரு தொடங்கும் முக்கில் முனியாண்டவர் கோயில் உண்டு. அங்கு அம்மா கண்டிப்பாகச் சாமி கும்பிடவைத்து திருநீறு பூசிக்கொள்ளவேண்டும். அப்புறம் அருகிருக்கும் டீக்கடையில் சூடாகப் பொட்டலங்கள்  காராச்சேவு. மணி காராபூந்தி. பக்கோடா. ஓலைப் பக்கோடா எனப் பொட்டலங்கள் வகைவகையாக இருக்கும். தின்று முடிப்பதற்குள் நடையும் முடிந்துவிடும். ஊரும் வந்துவிடும்.

                                எனவே ஒவ்வொருமுறை போகும்போது காவிரி பற்றி பல கதைகளை அம்மா சொல்லிக்கொண்டேவருவாள். கடைசியாக காவிரியைக் கடந்துதான் அம்மாவின் கிராமத்திற்குப் போகவேண்டும். எனவே ரோட்டை விட்டுக் காவிரிக்கு இறங்கும் ஒற்றையடி மண்பாதையைப் பார்த்துவிட்டால் பறந்துகொண்டு ஓடுவோம். ஓடி வரும் எங்களை குளிர்காற்றால் வரவேற்பாள் காவேரி. அங்கங்கே திட்டு திட்டாக தண்ணீர் கிடக்கும். அதில் அப்படியே பொத்தென்று விழுந்து உடல்முழுக்கக் குளித்து பின் காய்ந்து பின் குளித்து எனப் போவோம்.

                                  காவிரிக்கரையேறும்போது கரையோரம் பெரும்பான்மை பல தோட்டங்கள் கிடக்கும். அம்மாவின் சின்னம்மாக்கள் பயிரிட்டிருப்பார்கள். அவரை. கீரை. புடலை. பாகல். முள்ளங்கி. எனவிருக்கும். எங்களைப் பார்த்ததும் அம்மாச்சிக்கள் படபடவென்று முள்ளங்கிகளைப் பிடுங்கி காவிரித் தண்ணீரில் அலசிவிட்டு ஆற்றில் கிடக்கும் உருக்காங்கல்லில் வைத்து அந்த முள்ளங்கியை முழுசாக நசுக்கி பின் இடுப்பில் வைத்திருக்கும் சிவப்பு மிளகாய் உப்பு சேர்த்து பொடித்த பொடியைத் துர்வி அந்தப் பச்சை முழு முள்ளங்கியைச் சாப்பிடக் கொடுப்பார்கள். அதன் சுவையை எழுத ஒரு நாவல் ஆகும். பின் அப்படியே காவிரி தண்ணீரை இரு கைகளாலும் அள்ளிக் குடித்துவிட்டு அம்மாவின் பிறந்த வீடு நோக்கி ஓடுவோம்.

                                  அம்மாவின் சித்தப்பா அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி சின்ன அக்காவைத் தன்னுடைய மகனுக்குத் திருமணம் செய்துகொண்டு போனார். நகரத்தில் வளர்ந்த அக்காவிற்கு கிராமம் ஒத்துவரவில்லை. பல பிரச்சினைகள். அக்கா நிமமதியாகவே இல்லை. அப்புறம் கொஞ்சங்கொஞ்சமாகப் பழகிக்கொண்டது. அப்போது எல்லாம் தஞ்சையில் இருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு அக்காவைப் பார்க்கப் போவது வழக்கம்.

                                 போவதற்கு அடிப்படையான காரணங்கள்.

                                 1. அக்காவின் பாசம்.
                                 2, அக்காவின் வாசனையான சமையல்.
                                 3. சமைப்பதற்கு ஆகும் நேர இடைவெளியில் கிராமத்து
டீக்கடையில் வாங்கிகொடுக்கும் பொட்டலம். பெரும்பாலும் காராசேவுதான்.
அப்புறம் இனிப்புப் போண்டா.
                                 4. வரும்போது குறைந்த பட்சம் 1ரூபாய் கைச்செலவுக்குத்
தருவார்கள். அது பெரிய தொகை.

                               எப்படியும் வாராவாரம் அக்காவீட்டிற்குச் சென்றுவிடுவோம்.
அக்கா வீட்டில் தங்கியிருக்கும் நாட்கள் சுகமானவை. எங்களைவிட அக்கா
ரொம்ப நிம்மதியாக இருக்கும். எப்பவாவது திருவையாறு ஜெயம் தியேட்டரில் சினிமா பார்க்கக் காவிரியாற்றைக் கடந்துபோவது உண்டு. தியேட்டரில் நாற்காலிகள் கிடையாது. மணல் பரப்பியிருபபார்கள். ஆனால் அக்கா கிளம்பும்போதே போட்டு உக்கார துண்டும் படம் முடியும்வரை தின்பதற்கு இனிப்புப் போண்டாவும் காராச்சேவும் வாங்கி மஞ்சள் பையில் கொண்டு வந்துவிடும்.

                               காலையில் சாப்பிட்டுவிட்டு துணிகளை எடுத்துக்கொண்டு அக்கா காவிரிக்குக் குளிக்கப்போகும். துணைக்குப் போவேன். அக்கா துணிகளைத் துவைத்துக் கொடுத்தபின் வாங்கி வாளியில் வைத்துவிட்டு. பின் அக்கா நீச்சலடித்துக் குளிக்கும். ஆசையாக இருக்கும். அப்புறம் நீச்சல் பழகியபின் காவிரியை அக்கா வீட்டிற்கருகில் இறங்கி நீந்தி எதிர்க்கறையில்
தியாகராசர் உற்சவம் நடக்கும் படித்துறையில் போய் ஏறி பின் அதேபோன்று ஆட்கொண்டார் கோயிலுக்கருகில் இறங்கி அக்காவின் கிராமத்திற்குப் போகும் பாதையில் கரையேறுவோம்.

                           எனவே அதற்குப் பின் அடிக்கடி கிராமங்களில் நடக்கும் துக்க காரியங்கள் என்றால் முன்னால் நிற்பேன் போவதற்கு. காரணம் பிணம் எடுக்கும் வரை எங்கும் சாப்பிடமுடியாது. ஆனால் அக்கா கிராமத்து டீக்கடையில் வாங்கிக்கொடுக்கும் பொட்டலங்கள் தின்பதற்குக் கிடைக்கும்.
பின்னாளில் வளர்ந்து ஆளான பிற்பாடும் ஒவ்வொரு அம்மாச்சியாக உயிர் பிரிந்துகொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் ஆசையுட்ன் போவேன். முதலில் பொட்டலம் காராசேவு தின்றுவிட்டுதான் சாவு வீட்டிற்கே போவேன்.

                          கட்லை மாவு அதிகம் இருக்கும் காராச்சேவுவில். அரிசி மாவும் கலந்து இருக்கும். ஆனாலும் அப்போதெல்லாம் 1 ரூபாய் பொட்டலம் நிறைய இருக்கும். கலர் வெந்நீரைப் போல டீ இருக்கும். ஆனாலும் அந்தப் பொட்டலத்தின் ருசியும் டீயின் ருசியும் வேறு எங்கும் கிடைக்காதது. அந்தப்
பொட்டலத்தின் அளவு  அந்தக் கிராமத்தின் பெருந்தன்மையை சூடிக் கொண்டு
இருக்கும்.

                           வயது வித்தியாசமின்றி எல்லோரும் பொட்டலங்கள் சாப்பிடுவார்கள். பல் முளைத்த குழந்தைக்குக்கூட அந்தப் பொட்டலங்களைத் தின்னக் கொடுப்பார்கள்.

                             அக்காவிற்கு ஒரு நோய் வந்து முடக்கிப்போட்டது. 15 ஆண்டுகளுக்கு மேலாக படுக்கையிலேயே இருந்தாள். ஏதோ நரம்புப் பிரச்சினை என்றார்கள். நாளுக்கு நாள் அக்காவின் உடல் சுருங்கிக்கொண்டே வந்தது அளவில். பார்க்காத வைத்தியங்கள் இல்லை. மருத்துவம் நடந்து
கொண்டேயிருந்தது. மாத்திரைகளும் லேகியங்களும் எனத் தின்றுகொண்டே
இருந்தாள் அக்கா.

                               ஒரு நாள் அதிகாலையில் தன்னுடைய இளம் வயதில் அக்கா இறந்துபோனாள். வாழவேண்டிய வயதில் துர்ர்ந்துபோனாள். காவிரிக் கரையில்தான் தகனம் செய்தோம்.  மறுநாள் பால் தெளியலுக்குப் போனோம்.
ஆனால் அக்காவின் உடம்பில் கடுகளவுகூட எலும்பு கிடைக்கவில்லை. மைதா மாவைப்போல உடம்பு முழுக்க பவுடராகவே இருந்தது. அவள் பதினேழு ஆண்டுகள் சாப்பிட்ட மாத்திரை மருந்துகளின் மோசமான விளைவுகளால் உடம்புமுழுக்கத் தீபட்டதும் வெண் சாம்பலாக இருந்தது.
எனவே பால் தெளியலுக்கு ஒரு கொட்டாங்குச்சியில் அந்தளவுக்கு சாம்பலை
எடுத்து எல்லாக் காரியமும் நடந்த்து. அந்தக் கொட்டாங்குச்சி அளவு என்பது
ஒரு காராச்சேவு பொட்டலத்தின் அளவுதான்.

                              இன்றுவரை பொட்டலம் சாப்பிடுவது பிடிக்காமல் போய்விட்டது. அக்காவே பொட்டலம்போல ஆகிவிட்டாள். இன்றைக்குக் காவிரி வறண்டுப்போய்விட்டது. அக்கா வாழ்ந்த காலங்களில் நுங்கும் நுரையுமாகப் பொங்கியோடிய காவிரி அக்காவின் துர்ர்ந்த வாழ்வைப்போலவே அவளுக்காகவே வறண்டுப்போய்விட்டது போலும் அழுது அழுது.

                               ஏதேனும் நிகழ்வு குறித்து திருவையாறு தாண்டிச் செல்லும்போதெல்லாம் காவிரியைப் பர்க்கிறேன். வறண்டுக் கிடக்கிறது.
அக்காவின் நினைவில் வறண்டுபோகிறது மனதும்.