Monday, May 11, 2015

வைரமுத்து சிறுகதைகள்




                         வைரமுத்து சிறுகதைகள்...


                ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென  கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழுதி வருகிறார். நல்ல முயற்சி.

                தொடர்ந்த வாசிப்பில் இச்சிறுகதைகள் குறித்து எழுதவேண்டும் என்று தோனியது. இப்போதுதான் அதற்கான நேரமும் வாய்த்தது.

                  கவிஞராக இருக்கும் படைப்பாளி சிறுகதைகள் படைக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு. சிறுகதைக்கென்று இருக்கும் தன்மைகளில் அவை சில மாற்றங்களை நிகழ்த்தும்.  சிறுகதைக்கான கரு சரியாக அமைந்தாலும் அவற்றை சிறுகதையாக்கும்போது கவிஞருக்குள் இருக்கும் கவிதைக்குணமே முன்னிற்கும். இயல்பாக அமையவேண்டிய நிகழ்வுகளில்கூட இந்த கவிதைக்குணமே துருத்திக்கொண்டு நிற்கும். இது தவிர்க்கமுடியாதது என்றாலும் அது சிறுகதையின் ஓட்டத்திறகுத் தடையாகும். ஏனென்றால் கவிஞனாக இருக்கும் நிலைப்பாட்டில் பார்க்கிற எந்தக் காட்சியிலும் அதனை எதனோடாவது ஒப்பிட்டுக் காட்ட முனையும் மனத்தைத் தடுத்துவிடமுடியாது. சிறுகதையைக் கவிதைபோல சொல்வதும் கவிதைக்குள் சிறுகதையின் தன்மையைக் கொண்டுவருவதும் உத்தி என்றாலும் அவை இயல்பானவையல்ல. அந்தந்த இலக்கியப் பிரிவினை அந்நியப்படுத்துவதாக அமைந்துவிடும். இப்போக்குகளை கவிஞர் வைரமுதது அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலக யுத்தம்  இவற்றில் காணலாம். என்றாலும் இவற்றையும் தாண்டி அவை பிரமிப்பை உண்டாக்கிய நாவல்கள். தற்போது இத்தன்மையை குமுதத்தில் எழுதி வரும் சிறுகதைகளிலும் காணமுடிகிறது என்றாலும் அதைத்தாண்டி கவியரசு எடுத்துக்கொண்டுள்ள சிறுகதைக்கான  கதைக்கரு அதனை வெளிப்படுத்தல், காட்சிப்படுத்தல் இக்கூறுகளில் மேலெழுந்து நிற்கிறது. இவை இக்கதைகளின் வெற்றி எனலாம். இருப்பினும் சிறுகதைக்கான சோதனைத்தளம் எனும் நிலையில் சிறுகதைக்கான வளர்ச்சிப்பாதையில் ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக இச்சிறுகதைகள் அமைந்துள்ளமை வரவேற்கத் தக்கதாகும்.
             சிறுகதையின் தொடக்கம், பின்னல், விவரிப்பு, முடிப்பு எனும் நிலைகளில் இச்சிறுகதைகள் அபாரமான உயரத்தை எட்டுகின்றன. மேலும் ஒவ்வொரு சிறுகதையிலும் சிறுகதைக்கான கரு என்பது ஏற்கெனவே சொல்லப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அது புதுச் சொல்லாளுமையில் மெருகேறித் திளைக்கின்றன.  புதுமைப்பித்தன் சிறுகதைகள் போல, மௌனியின் சிறுகதைகள் போல, அழகிரிசாமியின் சிறுகதைகள் போல, சுந்தரராமசாமியின் சிறுகதைகள் போல, திஜாவின் சிறுகதைகள் போல, சூடாமணியின் சிறுகதைகள் போல, ஜெயகாந்தன் சிறுகதைகள் போல, மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகள் போல, கோணங்கியின் சிறுகதைகள் போல, அ.முததுலிங்கத்தின் சிறுகதைகள் போல ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவரின் வீச்சை அடையாளப்படுத்தினாலும். இவை எவற்றின் ஒட்டுதலும் இல்லாமல் கவியரசுவின் தனித்துவப் படைப்பாளுமையின் மூல அச்சில் வைரங்களாக இச்சிறுகதைகள் சுடர்விடுகின்றன.

              சான்றாக இந்தவாரம் வெளிவந்துதுள்ள சிறுகதை யாருக்கும் வாழ்க்கைப் பக்கமில்லை என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம்.

                 சாதாரண சொற்கள் ஆனால் அழுத்தமான பண்பாட்டுக் கருவறையிலிருந்து வெளிவருகின்றன. எதார்த்தமான விவரிப்பு. போகிற போக்கில் நினைத்துப் பார்க்கமுடியாத காட்சிப்படுத்தல். புதுச்சொல்லாக்கம். படிப்போரின் மனசுக்குள் கைப்பிடித்து அழைத்துப்போகும் திறன்.. கதையின் முடிவில் நீக்க முடியாத கறையைப்போலப் படியும் சோகம். என்றாலும் இப்படித்தான் என்று வாழ்க்கையை ஏற்றுக்கொள்கிற  கருவாயன் அல்லது அவனை ஏற்றுக்கொள்ள வைக்கிற தமிழ்ச்சமுதாயப் பண்பு இவற்றை அழகான மகிழம்பு கோத்ததுபோல இணைக்கிறார் கவியரசு.

                             நறுக்குச் சவரம்
                             சீயக்காய் போட்டு பெருந்தேய்ப்புத் தேய்த்த பிறகும்
                             தலைமுடியில் இன்னும் கொஞ்சம் ஒட்டியிருந்தது
                             செம்மறியாட்டுச் சிறுநீர் வாசம்...(ப.142)

                             பல்விழுந்த சீப்பின் பல்விழாத ஓரங்களில்...

                             தோற்றம் என்ன தோற்றம்? இந்த பூமிக்கு வந்துபோகும்
                             கோடிகோடி சராசரி அற்புதங்களில் அவனும் ஒருவன்.
                             தான் வாழ்கிறானோ இல்லையோ வாழ்வுக்குச்
                             சம்பவங்கள் கொடுப்பவன்  (இங்கேயே இச்சிறுகதையின்
                             முடிவை உணர்த்திவிடுகிறார் நுட்பமாகக் கவியரசு)

        இவை கவித்துவமான வரிகள் என்றாலும் சிறுகதையின் ஓட்டத்தில் தடையில்லை.

                           உலகச் சிறுகதைக்கு நிகரான காட்சிப்படுத்தல் எல்லாச் சிறுகதைகளிலும் (கவியரசுவின் சிறுகதைகளுக்குள்ளேயே) ஒன்றை மற்றொன்று விஞ்சுகிறது வேறு எதனோடும் ஒப்பிடத் தேவையில்லாமல்.

                        ஒத்த ஆலமரம் தாண்டி பெருமாயி ஊருணி பிடித்து
                       முனியாண்டி கோயில் கடந்து சூராங்கரடு ஏறி இறங்கினால்
                       பல்லிமுட்டாய் மாதிரி தெரியும் சாவடிப்பட்டி சித்தோடை..
                       கடந்து கரையேறினால் ஊர் வந்துவிடும் (ப.143)

இது மதினியின் ஊருக்குப் போவது.

                         சித்தோடை கடந்து சூராங்கரடு ஏறி முனியாண்டி கோயில்
                        முட்டி பெருமாயி ஊரணி புடிச்சு ஒத்த ஆலமரம் தாண்டுனா
                         பல்லிமுட்டாய் மாதிரி தெரியும் சல்லிப்பட்டி...

இது மதினியின் ஊரிலிருந்து திரும்பி வரும்போது..

                          இரண்டும் ஒரே காட்சிப்படுத்தல் என்றாலும் சொற்களில் கதையின் பின்னல் தெரிகிறது. முனியாண்டி கோயில் கடந்து...முனியாண்டி கோயில் முட்டி... கரையேறினால் ஊர் வந்துவிடும... ஆனால் வாழ்க்கை...?

                         மதினியைப் பெண் கேட்கப் போகும்போது எதுவும் சிரமமில்லை.

                          காடு கடுங்காடு..முள் மண்டிய பெருங்காடு..கொளுத்துகிறது.
                          சித்திரைக்கோடை. வெள்ளைக் கல்லை வெண்ணெய் என்று
                          உருக்கப் பார்க்கிறது........சில்லிமுள்ளும் செந்தாழையும் திருகு
                          கள்ளியும், சப்பாத்திக்கள்ளியும் இலந்தையும் நெருஞ்சியும்
                          குராஞ்செடியும் உடைசாலியும் சிவானர் வேம்பும் வேலும்
                          கருவேலும் இலைக்கற்றாழையும் வேலாந்தழையுமென
                          முட்காடாய் விரிந்துகிடக்கும் வெம்பாலை நந்தவனமாய்
                          தெரிந்தது நம்ம பயலுக்கு.. (ப.144)

ஆனால் மறுபடியும் நந்தவனம் வெம்பாலையாகிவிட்டது கருவாயனுக்கு.

                               ஒருசாலை மேய்ப்பர்கள்

                               உச்சந்தலையில் வழுக்கையில் ஒத்தமுடி முளைச்சது
                               மாதிரி ஊருணிக்கரையில்  துண்டா நிற்கிறது ஒரு
                               பூவரசமரம். . (ப.145)

கருவாயனும் இப்படித்தான்..

                                எப்போதும் உறவுகளை உணர்வுகளை அன்பைத் தாண்டிப் பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது வாழ்க்கையில் என்றாலும் அதைத்தாண்டி அன்புதான் வாழ்க்கையின் இருப்பை உறுதிப்படுத்துகிறது என்பதையும் சொல்லாமல் சொல்கிறது இக்கதை.

                              வாசிப்பில் சில சிறுகதைகளில் சிற்சில தடுமாறல்கள் வந்தாலும் இச்சிறுகதைகள் எதிர்காலச் சிறுகதை வரலாற்றில் ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக நிற்கும் என்பதைக் கவியரசு உறுதிப்படுத்துகிறார்.