Wednesday, June 29, 2016

கதை 5

                குறி பிசகாத கொடியான்
                   
 
                அந்த இடத்தில் நாலைந்து செடிகள் மட்டுமே இருந்தன. அடங்காதி என்கிற ஆடு ஒன்று மேய்ந்துகொண்டே வந்தது. பச்சையாய் இருந்த செடிகளைக் கண்டதும் சின்ன வாலை  துறுதுறுவென்று ஆட்டியபடியே மேய ஆரம்பித்துவிட்டது. கடைசியாய் ஒரு செடிதான் இருந்தது. அதை மேய வாயை வைத்தபோது சின்னதாய் ஒரு குரல் கேட்டது.
                சட்டென்று வாயை எடுத்துவிட்டு யாரது? என்றது. உடனே தலையை உயர்த்தி சுற்றுமுற்றும் பார்த்தது. யாருமில்லை. அதற்கு லேசாகப் பயம் வந்தது. மறுபடியும் யாரது? என்றது.
                ஆடாரே… கீழே குனிந்து செடிக்கருகில் பாருங்கள் என்று மறுபடியும் அந்தக் குரல் கேட்கக் குனிந்து பார்த்தது.
                 அங்கே பச்சைநிறத்தில் ஒரு புழுவும் அதைச் சுற்றிச் சில குட்டிப் புழுக்களும் நெளிந்துகொண்டிருந்தன.
                என்ன என்றது அலட்சியமாய் அடங்காதி.
                இது கோடைக்காலம். சற்று நேரத்தில் இங்கே வெயில் வந்துவிடும். எங்களால் வெயிலைத் தாங்கமுடியாது. அப்போது இந்த செடிகளின் அடியில்தான் இளைப்பாறுவோம்.. நீங்கள் மேய்ந்துவிட்டால் வெயிலில் நானும் என் பிள்ளைகளும் இறந்துபோய்விடுவோம். ஆகவே இந்த ஒரு செடியை மேயாமல் விட்டுவிடுங்கள் ஆடாரோ.. என்றது.
                முடியாது.. எனக்கு இன்னும் பசி அடங்கவில்லை..மேய்ந்தே தீருவேன் என்றது.
                உங்களால் பசியை அடக்கமுடியும். ஆனால் எங்களால் உயிரை அடக்கமுடியாது. வெயில் எங்களைக் கொன்றுவிடும்.
                முடியவே முடியாது என்றது.
                வாயடக்கி என்கிற அந்தப் புழு தன் பிள்ளைப் புழுக்களைப் பார்த்து.. சீக்கிரம் வேகமாக வாருங்கள்.. வெயில் வருவதற்குள் அந்த காய்ந்த குச்சிகள் இருக்குமிடத்திற்குப் போய்விடலாம்.. என்றபடி வேகவேகமாக நெளிந்து நகர ஆரம்பித்துவிட்டன.
                அந்தச் செடியையும் சுத்தமாக மேய்ந்துவிட்டு நகர்ந்துபோன அடங்காதி.. தூரமாய் வந்த கொடியான் என்கிற புலியைக் கண்டதும் அதிர்ந்துபோய் நின்றுவிட்டது. ஓடவும் முடியாது. புலி அருகில் வந்ததும் அடங்காதி ஆழ ஆரம்பித்துவிட்டது.
                புலியாரே என்னை விட்டுவிடுங்கள்..
                முடியாது. என் பசி இன்னும் தீரவில்லை. உன்னைத் தின்றாலும் பசி அடங்காது. என்றாலும் கொஞ்சம் பசியாவது அடங்கவேண்டும் ஆகவே உன்னைச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்றபடி அடங்காதி மேல் பாய்ந்தது கொடியான் குறி பிசகாமல்.



நீதி..    பேசும் சொற்களிலேயே வாழ்வும் சாவும்.